Jul 27, 2015

தொழுகை தொடர் – 4

தொழுகை தொடர் – 4
பி.ஜைனுல் ஆபிதீன்

உளூச் செய்வதன் ஒழுங்குகள்


பல் துலக்குதல்

உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும்.

பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள் என்று முஸ்லிம் நூலில் 1233, 1275, 1280 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அபூதாவூத், நஸயீ உள்ளிட்ட இன்னும் பல நூல்களிலும் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் உளூச் செய்தார்கள்என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் பல் துலக்கினார்கள்என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.

பல் துலக்குதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

 பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 888

பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும். இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : நஸயீ 5

பல் துலக்குதல் பற்றி தவறான நம்பிக்கைகள்

தொழும் போது பல் துலக்குதல்

ஷாபி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள் தொழுகையில் வரிசையில் நின்றவுடன். இகாமத் சொல்லி முடித்தவுடன் தங்கள் சட்டைப் பையில் உள்ள குச்சியை எடுத்து பல்லைத் துலக்கி விட்டு அப்படியே அந்தக் குச்சியை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு தொழுகின்றனர். கேரளாவிலும் ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் சில அரபு நாடுகளிலும் இந்த வழக்கம் காணப்படுகின்றது.

தமிழகத்திலும் ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் பல ஊர்களில் இந்த வழக்கம் முன்னர் அதிக அளவில் காணப்பட்டது. இப்போது இது பெருமளவு குறைந்து விட்டது.

ஷாபி மத்ஹபின் நூல்களிலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. எனவே இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

எனது சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாகி விடுவேன் என்பது இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 887

இந்த ஹதீஸ் வேறு பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டுள்ளதால் தொழுகைக்காக நின்றவுடன் பல் துலக்க வேண்டும் என்று இந்த நபிமொழியை அவர்கள் விளங்கியுள்ளனர்.

பல் துலக்குதல் என்றால் பல்லிலுள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும் என்பது தான். இவர்கள் தொழுகையில் நின்றவுடன் குச்சியால் பல் துலக்கி அந்த அழுக்கை விழுங்குகின்றனர். பல் துலக்கிய குச்சியைக் கழுவாமல் சட்டைப் பையில் வைக்கின்றனர்.

சுகாதாரத்தை வலியுறுத்துவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறையை சுகாதாரத்திற்கு எதிரானதாக ஆக்கி விட்டனர்.

மத்ஹபுடைய அறிஞர்கள் என்போருக்கு போதிய ஆராய்ச்சித் திறன் இல்லை என்பதற்கு இதை ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவர் உளூச் செய்வதற்கு முன் பல் துலக்கி, பின்னர் உளூச் செய்து தொழுதால் அவர் தொழுகைக்கு முன் பல் துலக்கியவராவார். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தின் அடிப்படையில் தான் இந்தச் செய்தியை விளங்க வேண்டும். அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழுகை நடத்தும் இடத்தில் நின்று கொண்டு பல் துலக்கியதில்லை. உளுச் செய்வதற்கு முன்னர் தான் பல் துலக்குவது அவர்களது வழக்கமாகும்.

மேலும் முஸ்னத் அஹ்மத் 9548 வது ஹதீஸில்.

 ???

என் சமுதாயத்திற்கு சிரமம் தந்தவனாக நான் ஆகி விடுவேன் என்பது இல்லையானால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதையும் அபூஹுரைரா (ரலி) தான் அறிவிக்கின்றார்கள்.

எனவே ஒவ்வொரு தொழுகையின் போதும் என்பதை வ்வொரு உளூவின் போதும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இரத்தப் போக்கு நோயுடைய பெண்ணுக்கு, “ஒவ்வொரு தொழுகையின் போதும் குளித்துக் கொள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

(முஸ்லிம் 502)

தொழுகைக்குத் தயாராக நின்றவுடன் அந்த இடத்தில் ளித்து அந்த இடத்திலேயே தொழ வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல! மாறாக தொழுகைக்கு வருவதற்கு முன் குளித்து உடை மாற்றிப் பின்னர் தொழ வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

 நாகரீகத்தைக் கற்றுத் தர வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையை அநாகரீகச் செயலுக்கு ஆதாரமாக்கி விட்டனர். பல்லைத் துலக்கி விட்டு எச்சிலைத் துப்பாததும், வாய் கொப்பளிக்காததும் எப்படி பல் துலக்குவதாகும் என்ற சாதாரண சிந்தனை கூட இவர்களுக்கு இருக்கவில்லை. ஷாபி மத்ஹபின் மிகப் பெரிய அறிஞர்கள் எனக் கருதப் படுவோர் கூட இந்த ஹதீஸை சிறுபிள்ளைத் தனமாக விளங்கியுள்ளனர்.

2. பல் துலக்கும் குச்சி

குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக்குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

மிஸ்வாக்என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம்என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது.

பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும், பற்பொடியைப் பயன்படுத்தினாலும், பற்பசைகளைப் பயன்படுத்தினாலும், பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அதுபோல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான்.

பல் துலக்கப்பட வேண்டும் என்பது தான் நபிவழியே தவிர, குறிப்பிட்ட குச்சியாகத் தான் இருக்க வேண்டும் என்பது நபிவழியல்ல!

இந்தக் குச்சியால் தால் பல் துலக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவதால் இதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

மேலும் பல் துலக்குதல் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் சில விதிகளை மத்ஹபு நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

பல் துலக்கும் குச்சி ஒரு ஜான் இருக்க வேண்டும், குச்சியை இரு விரல்களால் மட்டும் பிடித்துத் தான் பல் துலக்க வேண்டும் என்று வாய்க்கு வந்த படியெல்லாம் சிலர் உளறி வைத்துள்ளனர். இவற்றுக்கு நபிவழியில் எந்த ஆதாரமும் கிடையாது.

இவை பல் துலக்குதல் பற்றிய தவறான நம்பிக்கைகளாகும்.

உறங்கி எழுந்ததும் பல் துலக்குதல்

உளூச் செய்யும் போது மட்டுமின்றி உறங்கி எழுந்தவுடனும் பல் துலக்குவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்தால் பல் துலக்கும் சாதனத்தால் தமது வாயைத் துலக்குவார்கள்.

 அறிவிப்பவர் : ஹுதைபா (ரலி),

நூல் : புகாரி 246

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். முதலில் பல் துலக்குவார்கள் என்று ஆயிஷா (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷுரைஹ்,

நூல் : முஸ்லிம் 371

பல் துலக்கிய பின்னர் உளூ செய்ய வேண்டும். உளூ செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம்.

1.இறை நாமம் கூறுதல்

 உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹ் கூறாமல் ஆரம்பிக்கும் எந்தக் காரியமும் இறையருளுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப் பூர்வமானவை அல்ல!

ஆயினும் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது.

நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப் பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, “அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிலிருந்து தண்ணீர் ஊறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள் என்று அனஸ் (ரலி) கூறினார்கள். மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று அனஸ் (ரலி) யிடம் கேட்டேன். அதற்கவர்கல், “சுமார் எழுபது நபர்கள்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : கதாதா (ரலி),

நூல் : நஸயீ 77

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாக இருப்பதால் உளூச் செய்யும் முன் முதலில் பிஸ்மில்லாஹ் என்று கூறிக் கொள்ள வேண்டும்.

2.முன் கைகளைக் கழுவுதல்

உளூச் செய்யும் போது முதலில் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.

உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) ஆகியோர் உளூச் செய்து காட்டிய ஹதீஸ்களை ஏப்ரல்-2003 இதழில் நாம் வெளியிட்டுள்ளோம்.

அதில் முதல் காரியமாக இரு கைகளையும் கழுவியது பற்றிக் கூறப்படுகின்றது. பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே முழங்கை வரை கைகளை பின்னர் கழுவினாலும் அதற்கு முன்னர் மணிக்கட்டு வரை கழுவிக் கொள்வது நபிவழியாகும்.

பாத்திரத்தில் கைகளை விடுவதற்காகத் தான் உஸ்மான் (ரலி) கைகளைக் கழுவினார்கள், பாத்திரத்தில் கைகளை விடாமல் பாத்திரத்தைச் சாய்த்து உளூச் செய்தால் இவ்வாறு கழுவ வேண்டியதில்லை என்ற கருத்தை மேற்கண்ட ஹதீஸ் தருகின்றது என்று நினைக்கக் கூடாது. ஏனெனில் முன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தெளிவான கட்டளையும் இருக்கின்றது.

???

நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிலிருந்து வெளியேறுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவுவது பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். (நஸயீ 147) எனவே பாத்திரத்தில் கைகளை விட்டு உளூச் செய்தாலும் குழாய்களிலிருந்து உளூச் செய்தாலும், பாத்திரத்தைச் சாய்த்து உளூச் செய்தாலும் இரு கைகளையும் மணிக்கட்டு வரை நன்றாகக் கழுவ வேண்டும்.

 - வளரும் இன்ஷா அல்லாஹ்


ஏகத்துவம் ஜூன் 2003