May 10, 2017

குடும்பவியல் தொடர்: 2 - துறவறம் - ஒரு போலி வேடம்

குடும்பவியல் தொடர்: 2 - துறவறம் - ஒரு போலி வேடம்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை வைத்துக் கொண்டே கட்டுப்படுத்துவதாகச் சொல்வது. இது ஆசையே வராத அளவுக்கு ஆண்மையை நீக்குவதாகும்.

மிருகங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதைப் போன்று, மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு முறையில் ஆண்மை நீக்கம் செய்வார்கள். அதனால் தான் நபித்தோழர்கள் அதை நபியவர்களிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?'' என்று கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5071, 4615, 5076

எனவே ஆண்மை நீக்கம் செய்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறதெனில், எப்படியாவது ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதைத் தான் இது வலியுறுத்துகிறது.

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியüத்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 5073

எனவே ஒரு முஸ்லிம் எந்த நிலையை அடைந்தாலும் கல்யாணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு ஒருக்காலும் வரவே கூடாது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் வரை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோன்பைத் தவிர்த்து, துறவறம், ஆண்மை நீக்கம் என்று வேறு எந்த வழிகளையும் தேடக்கூடாது.

மேலும் துறவறம் என்பது தவறானது என்பதைப் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தாலே புரிந்து கொள்ளலாம். துறவறம் என்றால் கடவுளுக்காக நமது ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, கடவுளை நெருங்குவது என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களின் துறவு போலித்தனமாகவும் இரட்டை வேடமாகவும் இருக்கிறது. சிலர் மனைவி, மக்களைத் துறக்கிறார்கள். இன்னும் சிலர் ஆடையைக் கூட துறந்து தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எந்தத் துறவியும் இதுவரை சாப்பாட்டைத் துறக்கவே இல்லை. சாப்பிடுவதும் மனிதனின் ஆசையில் உள்ளது தானே.

இன்னும் சொல்லப் போனால், மனைவி, மக்கள், ஆடை எதுவும் தேவையில்லை என்று சொல்லி துறவறக் கோலம் பூணுபவர்கள், தங்களது முழு ஆசையையும் சாப்பாட்டின் மீது வைத்து திருவோட்டைத் தூக்கிக் கொண்டு போகின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், சாப்பாடும் தேவை, எல்லாம் தேவை என்று மக்களோடு மக்களாக இருந்து, துறவறம் கூடாது என்று சொல்லும் நாம், சாப்பாட்டிற்காக எந்தத் திருவோட்டையும் எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கவில்லை. எனவே ஆசையைத் துறப்பது என்பது போலித் தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஒரு மனிதன் ஆசையைத் துறக்க முடியுமா என்றால், முடியவே முடியாது. ஆசையைத் துறப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள், இரண்டு விதமாக இருப்பார்கள். ஒரு சாரார், பெண்களோடு தனிமையில் இருக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனே கெட்டுவிடுவதையும் உலகத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். துறவறம் என்று திரிந்தவர்களில் 99 சதவீதம் பேர் நாறிப் போன கதைகளை நமது நாட்டில் பார்த்தோம். உச்ச நிலையில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர்களெல்லாம் கூட, பெண்களுடன் தனிமையில் இருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையில் தனது துறவறத்தைத் துறந்து, தான் ஒரு பொய்யன் என்பதை உலகிற்குக் காட்டிவிடுகிறார்கள்.

எனவே பசித்தால் எப்படி சாப்பிடாமல் இருக்கமுடியாதோ அதே போன்றது தான் இந்த இல்லற சுகம். பெண்களின் மூலம் ஆண்களும் ஆண்களின் மூலம் பெண்களும் சுகம் அனுபவித்தல் என்பதும் ஒரு வகையான பசி. இந்தப் பசிக்குத் திருமணம் என்ற முறையான தீனி கொடுக்காவிட்டால், திருடித் திண்ணும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுவிடுவான். ஹலாலான சாப்பாடு கிடைக்காத போது ஹராமைத் தேடிச் செல்வது இயற்கையான ஒன்றுதான். இல்லறப் பசிக்கு ஹலாலான வடிகால் அமைக்கவில்லையெனில், ஹராமான முறையில் பெண் சுகத்தை மனிதன் தேடி, தன்னையும் சமூகத்தையும் அழிக்கத் துணிகிறான். எனவே பலர் இதை விளங்காமல், நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு சித்தாந்தத்தை உலகில் சொல்லி சமூகத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனாலும் இந்தச் சித்தாந்தம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

இருப்பினும் முஸ்லிமல்லாத மக்களிடம் துறவறம் சிறந்தது என்ற ஒரு நம்பிக்கை இருக்கத் தான் செய்கின்றது. "நாம் தான் அப்படி இருக்க முடியவில்லை; சிலரால் இப்படித் துறவியாக இருக்க முடிகிறது. இது சிறந்த பண்பு தான்' என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் அது தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் எல்லாவற்றையும் துறந்த துறவி செய்கிற நன்மையை விட, துறவறம் கூடாது என்று குடும்பத்துடன் வாழ்கிறவர்கள் தாம் அதிகமான நன்மைகளைச் செய்கிறார்கள். துறவிகள் மனைவி, மக்கள், சொந்த பந்தம், உற்றார், உறவினர் என்று குடும்ப அமைப்பையும் துறக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்கிற நன்மையை இழந்து விடுகிறார்கள். எனவே தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் அவர்களுக்குத் துரோகம் செய்த கேடுகெட்ட பிறவிகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம்.

அதேபோன்று பிள்ளைகளைக் கொஞ்சுகிற பாக்கியமும், அவர்களின் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்துக் கவனித்து வளர்க்கிற பாக்கியத்தையும், அப்படி வளர்ப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சியையும் இன்பங்களையும் இந்தத் துறவிகள் இழக்கிறார்கள். அதற்குரிய நன்மைகளும் கிடைக்காது.

ஒருவரைச் சந்திக்கும் போது முகமன் கூறுவது, நலம் விசாரித்துக் கொள்வது, கஷ்டப்படுபவருக்கு உதவுவது, போராட்டத்தில் ஈடுபடுவது, சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்வது என்று எதற்கும் வரமாட்டார்கள் இந்தத் துறவிகள்.

சாதாரண மக்களிடம் இருக்கிற நிறைய நன்மையான காரியங்கள் துறவிகளிடம் இருக்காது. இவர்கள் தான் உலகத்தில் முதல் தர சுயநலவாதிகள். எனவே எதிலும் கலந்து கொள்ளாத, நன்மை தீமைகளைக் கண்டு கொள்ளாமல் விலகிக் கொள்பவர்கள் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படவே கூடாது. இவர்கள் மிகவும் மட்டமான மனிதர்கள் என்பதை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் சமூகத்தில் மிகவும் கீழ்த்தரமானவர்கள்.

எனவே துறவறம் என்ற இந்தச் சித்தாந்தம் குடும்ப அமைப்பை அழித்து நாசமாக்கிவிடும். குடும்ப உறவு என்பதே கணவன், மனைவி என்ற இருவரின் மூலமாகத் தான் உருவாகிறது. அண்ணன் தம்பி, அக்காள் தங்கை, மாமன் மைத்துனர், தாத்தா பாட்டி என்ற குடும்ப உறவுகளே இல்லாமல் ஆக்கி விடும் கேடுகெட்ட சிந்தாந்தம் தான் இந்தத் துறவறம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


வளரும் இன்ஷா அல்லாஹ்....

EGATHUVAM MAY 2013