May 27, 2017

9. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு

9. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு

இழிவை விட்டும் பக்தர்களை இரு கடவுளர்கள் காப்பார்களா?

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்ற கீழ்க்காணும் கவிதைகளைக் காணுங்கள்!

فنجنا من شرور الخزي عبدكما

هذا محبا على الأيام مدحكما

ولو غبيا جهولا عاصيا حكما

عصيانه طول دهر لا يضركما

فالسفن تنجي غريقا حينما عثرا

கடுமையாக மாறு செய்பவனாக இருந்தால் கூட, அறிவு கெட்ட மடையனாக இருந்தால் கூட உங்கள் இருவரின் இந்த அடிமையை இழிவென்னும் தீங்குகளிலிருந்து நீங்கள் காப்பாற்றுங்கள்!

நாட்கள் பூராவும் உங்களைப் புகழ்வதையே நேசிப்பவன் நான்! இவன் செய்த துரோகம், காலம் முழுதும் உங்கள் இருவருவரையும் பாதிக்காது!

தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்து மூழ்குபவனை கப்பல் காப்பாற்றி விடும்! (அது போன்று பாவத்தில் மூழ்கும் என்னை நீங்கள் கப்பலாக வந்து காப்பாற்றுங்கள்)...

இந்தக் கவிதை வரிகளில் அடங்கியிருக்கின்ற இணை வைப்புகளை இப்போது பார்ப்போம்.

இந்தக் கவிஞன் ஹசனையும், ஹுசைனையும் கடவுள்களாக்கி, தன்னை அவர்களுக்கு முழுமையான அடிமையாக அர்ப்பணித்து ஆனந்தமடைவது முதல் இணை வைப்பாகும்.

பொதுவாக தமிழகத்தில் முஸ்லிம்கள் யாரைத் தங்களது ஆபத்பாந்தவன்களாகக் கருதுகின்றார்களோ அவர்களது பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஆண்களாக இருந்தால் முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஷாஹுல் ஹமீது, பெண்களாக இருந்தால் முஹ்யித்தீன் ஃபாத்திமா, செய்யது அலி ஃபாத்திமா, பீமா போன்ற பெயர்களைக் கூறலாம்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தங்களது முழு அடிமைத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக குலாம் ரசூல் (நபியவர்களின் அடிமை), குலாம் அஹ்மத், குலாம் முஹைதீன் (முஹைதீன் அடிமை), முகைதீன் பிள்ளை, முஹைதீன் பிச்சை, நாகூர் பிச்சை என்று தங்களது பிள்ளைகளின் பெயர்களில் அடிமைத் தனத்தை வெளிப்படுத்துவார்கள்.

தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தடம் பதித்த பிறகு தான் மனிதனுக்கு அடிமையாகின்ற அவமானகரமான அடிமைத்தனப் பெயர்கள் மதிப்பை இழந்து அல்லாஹ்வுடைய அடிமைத் தனத்தை வெளிப்படுத்துகின்ற ஏகத்துவப் பெயர்கள் மகிமை பெற்றன. இதைக் கூறுவதற்குக் காரணம் இறந்து போன நல்லடியார்களுக்கு அடிமையாக இருப்பது இவர்களிடத்தில் ஊறிப் போன இணை வைப்புக் கொள்கையாகும்.

இந்தக் கவிஞன் அந்த ரகத்தைச் சார்ந்தவன். அதனால் இவன் தன்னை ஹஸன், ஹுசைனுக்கு அடிமையாக ஆக்கிக் கொள்வதில் ஆனந்தமடைகின்றான். அன்றைய அரபகத்தில் மட்டுமல்ல அகில உலகத்திலும் பரவலாக ஒருவர் இன்னொருவரிடத்தில் அடிமையாகப் பணியாற்றுகின்ற முறை இருந்துள்ளது.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

அல்குர்ஆன் 16:71

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல்வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:75

இந்த வசனங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாகியிருப்பதை அனுமதி அளிக்கின்றன. இது அல்லாஹ்வே ஏற்படுத்திய நியதியாகும்.

வசதியுள்ளவரிடம் ஒரு வறியவர் வேலை பார்ப்பது, அவர் தெய்வீகத் தன்மை கொண்டிருக்கின்றார்; அவரிடம் கடவுளுடைய அம்சம் இருக்கின்றது என்பதற்காக அல்ல. மாறாக, வசதி படைத்தவர் தனது பணிகளைத் தானே சுமக்க முடியாத பலவீனத்தில் இருக்கின்றார். வறியவர், அவரிடம் உரிய வாழ்க்கை நடத்துவதற்குரிய பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்கின்றார். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயமாகும்.

அந்த அடிப்படையில் ஹசன், ஹுசைனிடத்தில் இந்தக் கவிஞர் பணி புரிந்திருந்தால் தன்னுடைய முதலாளியிடத்தில் பணி புரிந்த பாசத்தில் அழைக்கின்றார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவர் ஒரு போதும் அவரிடம் பணி புரிந்ததில்லை. அதனால் இதற்கு அந்த அர்த்தம் கொடுக்க முடியாது. அப்படியானால் இவர் ஹசனையும் ஹுசைனையும் கூப்பாடு போட்டு கூப்பிடுவதும், தன்னை அவ்விருவரின் அடிமை என்று கூவுவதும் அவ்விருவரும் தன்னைக் காக்கும் ரட்சகர்கள் என்ற அர்த்தத்தில் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தான் கடவுள். இந்த அடிப்படையில் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

வணக்கம் என்ற வார்த்தைக்கு அரபியில் இபாதத் என்று சொல்லப்படும். இபாதத் என்றால் அடிமையாய் நடத்தல், அடிமையாய் செயல்படுதல் என்று அர்த்தம். அதிலிருந்து பிறந்த வார்த்தை யஃபுதூன் என்பதாகும். என்னை வணங்குவார்கள் என்பது இதன் பொருளாகும். அதாவது எனக்கு அடிமையாய் நடப்பார்கள்; நான் இடுகின்ற கட்டளைப்படி செயல்படுவார்கள். அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கின்ற இந்த அடிமைத்தனத்தை அவர்கள் வேறு யாருக்கும் சமர்ப்பிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் இந்த வசனம் தெளிவாக அமைந்துள்ளது.

ஆனால் இந்தக் கவிஞனோ அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய அடிமைத்தனத்தை ஹசனுக்கும் ஹுசைனுக்கும் சமர்ப்பிக்கின்றான்.

எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!’’ என்று மனிதர்களிடம் கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.)

அல்குர்ஆன் 3:79

இந்த அடிமைத் தனத்திற்கு எந்த ஓர் இறைத் தூதரும் உரிமை கோரக்கூடாது என்பதை இந்த இறைவசனம் நெற்றியடியாக அடித்துத் தகர்த்து விடுகின்றது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

இந்த வசனத்திலும், இன்னும் இதுபோன்ற ஏராளமான வசனங்களிலும் எனது அடியார்களே என்று பாசத்துடன் அழைக்கின்ற இந்த அழைப்பில் அடியார்கள் என்ற கண்ணியமான வார்த்தை இடம் பெற்றிருந்தாலும் அதன் பொருள் எனது அடிமைகளே என்பது தான். அதாவது மனிதனை தனக்குரிய அடிமை என்று சொல்கின்றான். ஆனால் இந்தக் கவிஞன் இதற்கு மாற்றமாக தன்னை ஹசன், ஹுசைன் அடிமை என்று சொல்கின்றான்.

ஹசன், ஹுசைனும் அடிமைகள் தான்

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194,195

இந்தக் கவிஞன் எந்த ஹசன், ஹுசைனை அழைக்கின்றானோ அவர்கள் இருவரும் இவனைப் போன்ற அடிமைகள் என்று கூறி ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு ஒரு போதும் உதவ முடியாது என்று அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விடுகின்றான். அத்துடன் அவர்களுக்குப் பதிலளிப்பதற்குரிய எந்தத் திராணியும் இல்லை என்பதையும் போட்டு உடைத்து விடுகின்றான்.

எதிரிகளாக மாறும் இரு கடவுளர்கள்!

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது

அல்குர்ஆன் 35:14

மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

அல்குர்ஆன் 46:6

இறுதி நாள் வரை இவன் கும்பிட்டு, கூப்பிடுகின்ற ஹசன், ஹுசைன் ஆகியோர் பதிலளிக்க மாட்டார்கள். மாறாக இறுதி நாளில் இவனுக்கு எதிரிகளாகவும் மாறி விடுவார்கள் என்பதை இந்த வசனங்கள் விளக்கி விடுகின்றன.

இந்த அடிப்படையில் இந்தக் கவிஞனின் அழைப்பு செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி விடுகின்றது என்பதையும் தெளிவுபடுத்தி விடுகின்றன. மொத்தத்தில்,

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

என்ற இந்த வசனத்தின் படி, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளலாம்.


இந்த எல்லையைத் தாண்டி ஒருவன் சக மனிதனுக்கு, மனித சக்தியை விட கூடுதல் சக்தியைக் கொடுக்கும் விதமாகத் தன்னை அடிமையாக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற காரியமாகும் என்பதை இந்த வசனங்கள் குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் தெரிவித்து விடுகின்றன.

EGATHUVAM SEP 2016