Oct 22, 2017

இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்

இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்புரை

இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று நூல்களை  நாம் வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக முதல் நூலை வெளியிட்டோம்.

அந்த நூலில் தலாக், பர்தா, பலதார மணம், பாகப்பிரிவினையில் பாரபட்சம் போன்ற பெண்கள் சம்பந்தமான முஸ்லிமல்லாதவர்கள் எழுப்பும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மிக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகள் வெளியானதிலிருந்து அதன் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக இரண்டாவது நூலை வெளியிட்டோம்.

இவ்விரு குற்றச்சாட்டுகள் தவிர எஞ்சிய எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காக குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற மூன்றாவது நூலை வெளியிட்டோம். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த நூலில் பல குற்றச்சாட்டுக்கள் விடப்பட்டிருந்தன. இன்னும் கூடுதல் விளக்கம் சேர்க்கப்பட வேண்டிய நிலையும் இருந்தது. எனவே அந்த நூலை முற்றிலும் மாற்றியமைத்து விடுபட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமுரிய விளக்கங்களைச் சேர்த்து முற்றிலும் புதிய வடிவில் மீண்டும் உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.

இந்த நூல் இஸ்லாம் குறித்த எல்லா ஐயங்களையும் நீக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். அந்த நம்பிக்கை வீண் போகாதிருக்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

-அன்புடன்

நபீலா பதிப்பகம்

பொருளடக்கம்

குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இந்துக்களை காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது

ஜிஸ்யாவரி

திக்கை வணங்கும் முஸ்லிம்கள்

ஹஜ் பயணமும், புனித யாத்திரையும்!

கருப்புக் கல் வழிபாடு?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

குடும்பக்கட்டுப்பாடை இஸ்லாம் எதிர்க்கிறது

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கி பெரும்பான்மையாகி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும் ,வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.

வறுமையும், உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த காலகட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளன. இன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 500 கோடியிலிருந்து வெறும் ஐந்து கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் எதார்த்த நிலையாகும்.

மக்கள் தொகை குறைவாகவே இருந்த காலத்திலும், மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் மக்கள் அனைவரின் தேவைகளுக்கும் அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000 கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளன.

உணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும், பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான். ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

ஏழை நாடுகளில் வாழும் பரம ஏழைகள் ஒரு கவள உணவுக்கு ஏங்கும் போது பணத்திமிர் பிடித்த ஏழை நாட்டுச் செல்வந்தர்கள் உணவையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்து வருகின்றனர். இதுதான் சிலருக்கு உணவுகள் கிடைக்காமல் போவதற்கு உண்மைக் காரணம்.

இந்தியாவில் 100 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்திய மக்கள் தொகையை 100 கோடியிலிருந்து 10 கோடியாகக் குறைத்தால் வறுமையும், பசியும் நீங்கிவிடப் போவதில்லை. அப்போதும் அதில் ஒரு கோடிப் பேர் பட்டிணி கிடக்கும் நிலை தான் ஏற்படும். 5 லட்சம் பேரிடம் 20 கோடி மக்களுக்கான உணவுகள் குவிந்திருக்கும் நிலை தான் ஏற்படும். அப்போதும் பற்றாக்குறையும், பசியும் ஒரு பக்கத்தில் இருக்கத் தான் செய்யும்.

உலக மக்கள் தொகையை வெறும் நூறு நபர்களாகக் குறைத்தால் கூட பத்துப் பேருக்கு உணவு கிடைக்காது என்பது தான் எதார்த்தமான நிலை. எனவே உணவுப் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி குடும்பக்கட்டுப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.

உலகில் உள்ள நிலப்பரப்புகளில் ஐந்து சதவிகிதம் இடம் கூட மனிதர்களால் பயன்படுத்தப்படவில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் உபரியாகத் தான் உள்ளன. ஏனைய பொருட்களின் பற்றாக் குறையும் இத்தகையது தான்.

ஆகவே மக்கள் தொகை குறைவதால் பசியும், வறுமையும் பறந்தோடி விடும் என்பது மோசடியான வாதமாகும்.

இன்னும் சொல்லப் போனால் மக்கள் தொகை பெருகுவதால் உலகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன, இனியும் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

மனிதனுக்கு நெருக்கடியும், நிர்பந்தமும் ஏற்படும் போது தான் அவன் அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முயல்கிறான். எத்தகைய பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறனுடன் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மக்கள் தொகை குறைவாக இருந்த போது நெல்லை விதைத்து ஆறுமாதம் கழித்து மனிதன் அறுவடை செய்தான். மக்கள் தொகை பெருகும் போது மூன்று மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய ரக நெல்லைக் கண்டுபிடித்தான். இன்னும் மக்கள் தொகை பெருகும் போது காலையில் விதைத்து விட்டு மாலையில் அறுவடை செய்யக் கூடிய நெல்லை மனிதன் நிச்சயம் கண்டுபிடிக்கத் தான் போகிறான். அப்போது தாறுமாறாக உணவுகள் குவியக் கூடிய அற்புதத்தை உலகம் காணத் தான் போகிறது.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர் ஆகியவற்றை மட்டும் பருகி வந்த மனிதன் இன்று ஆழ்கிணறுகளைத் தோண்டுகிறான். செயற்கை மழை பெய்ய வைக்கிறான். கடல் நீரைக் குடிநீராக்குகிறான். கழிவு நீரையும் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறான். இது மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மனிதனுக்குக் கிடைத்த நன்மை.

ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும் அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டுபிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். ஆடுகள், மாடுகள், தாவரங்கள், மீன்கள் மற்றும் அனைத்திலும் அசுர வளர்ச்சியை மனிதன் ஏற்படுத்தி விட்டான். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகைப் பெருக்கமே.

அது மட்டுமின்றி காய்கள், பழங்கள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்றவற்றைகளையும் பல மடங்கு பெரிய அளவில் உருவாக்குவதில் மனிதன் வெற்றி கண்டு விட்டான். ஐந்து கோழிகள் தேவைப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு கோழியே போதுமானது என்ற நிலை விரைவில் ஏற்படவுள்ளது. கோழியை ஒரு ஆட்டின் அளவுக்குப் பெரிதாக உற்பத்தி செய்வதை மனிதன் கண்டுபிடித்து விட்டான். மனித குலம் பல்கிப் பெருகியது தான் இந்தக் கண்டு பிடிப்புக்குக் காரணம்.

குடிசை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதும், அகல் விளக்குகள் மின் விளக்குகளாக மாறியதும், மாட்டுவண்டிகள் பேருந்துகளாக விமானங்களாக மாறியதும், எல்லாத் தயாரிப்புகளும் இயந்திர மயமானதும் மக்கள் தொகைப் பெருக்கத்தினாலேயே.

சந்திரன், செவ்வாய் கிரகங்கள் பற்றி மனிதன் ஆராய்ச்சி செய்வதற்கும் மக்கள் தொகைப் பெருக்கம் தான் காரணமாக இருக்கிறது.

சாதாரண நடைமுறை உண்மையையே இதற்குச் சான்றாகக் கூறலாம்.

நம்முடைய பாட்டன்மார் காலத்தில் ஒரு தேவைக்காக நூறு முட்டைகள் வாங்க முயன்றால் கடைத் தெருவில் அவ்வளவு இருப்பு இருக்காது.. இன்றைக்கு இலட்சம் முட்டைகள் வேண்டுமானாலும் வாங்கலாம். இருப்பு உள்ளது. வாங்குவதற்கு பலரிடம் பணம் தான் இருப்பதில்லை. உணவுப் பொருளுக்கு எந்தப் பற்றாக்குறையும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படவில்லை. விநியோக முறையில் உள்ள தவறுகளால் தான் சிலருக்குக் கிடைப்பதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இன்னொரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதனை இறைவன் படைக்கும் போது வெறும் வயிறை மட்டும் கொடுத்து அனுப்பவில்லை. மூளையையும் கொடுத்தே அனுப்புகிறான்.

பிறக்கவிருந்த 1000 சிசுக்களைக் குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆயிரத்தில் ஒருவன் ஐம்பதாயிரம் மக்களின் வறுமையைப் போக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான். பெரிய விஞ்ஞானி, மிகச் சிறந்த தலைவனாவதற்கான தகுதி பெற்றவன், அவர்களில் இருக்கக் கூடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அத்தகையோர் உருவாகாமல் தடுப்பது மனித குலத்திற்குக் கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் தமது சுய விருப்பத்தின் படி தமது குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினால் அதைச் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதிக்கின்றது. எல்லோரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவோ பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். 

காண்டம் (ஆணுறை) போன்றவற்றைப் பயன்படுத்தி கர்ப்பம் அடைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, ஆண்களுக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாசக்டமி போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்வது, குழந்தை பெறுகின்ற தன்மையை ஆணோ பெண்ணோ அடியோடு நீக்கிக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

தனது எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதும், கடவுள் கொடுத்த குழந்தை பெறும் தன்மையை அடியோடு நீக்கி விடுவதும் குற்றம் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்பதால் அவர்கள் குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராமல் இரண்டு குழந்தைகளும் மரணித்து விட்டால் அந்தத் தன்மையை யாரால் திருப்பித் தர இயலும்? இப்படி அறிவுப்பூர்வமாக இஸ்லாம் சிந்திக்கச் சொல்கிறது.

சுருங்கச் சொல்வதென்றால் தாயின் உடல் நலக்குறைவு, இயலாமை போன்ற காரணங்களுக்காக சுயக் கட்டுப்பாட்டுடன் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அல்லது குழந்தை பெறுவதை அறவே தவிர்த்துக் கொண்டால் அது அவர்களின் உரிமை. அதை இஸ்லாம் தடுக்கவில்லை.

இது நமக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்று பிரச்சாரம் செய்தால் அதில் எள் முனையளவு கூட உண்மை இல்லை என்பதால் இஸ்லாம் அதை எதிர்க்கும்.

குடும்பக் கட்டுப்பாட்டை நிராகரித்து முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு என்பது பயனற்ற திட்டம் என்று முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாம் போதிக்கவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் போதிக்கின்றது. முஸ்லிமல்லாதவர்களும் இந்தப் போதனையை ஏற்றுக் கொண்டு தமது மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டால் இஸ்லாமோ முஸ்லிம்களோ இதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள். மாறாக வரவேற்பார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் ஒரு தவறான பிரச்சாரத்தை நம்பி ஏமாந்தால் அதைப் போல் முஸ்லிம்களும் ஏமாற வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

மாறாக முஸ்லிம்கள் எவ்வாறு இந்த விஷயத்தில் பொய்ப்பிரச்சாரத்தை மெய்யென நம்பி ஏமாறாமல் இருக்கிறார்களோ அதுபோல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க முயல்வது தான் அறிவுடைமையாகும்.

ஏதோ இந்தியாவில் பெரும்பான்மையாக ஆவதற்காக இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்ட முடிவல்ல இது.

மாறாக முற்றிலும் முஸ்லிம்களே வாழ்கின்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் நிலைபாடு இது தான் என்பதை உணர்ந்தால் இது போன்ற குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளி வாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமே என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். 

ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியை பேசுவதால் தாம் தான் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.

படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? பண்டிதர்களும் பகுத்தறிவாதிகளும் கூட இப்படித்தான் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி.  இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விட தாழ்ந்ததுமில்லை, உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விட சிறந்தவர்களுமல்லர், தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

தமிழகத்தில் பிறந்து தமிழ் மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும் சுற்றத்தாரும் நம்மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்டே அந்த சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதுவதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.

மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ”அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது” என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.

இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடவுளின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத் தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.

நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட பல்லாயிரக் கணக்கான தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.

(திருக்குர்ஆன் 14:4)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகத்திற்கு முன் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் பேசும் தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளை தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

எந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது? தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே? என்ற கேள்விக்கு என்ன விடை என்பதை பார்ப்போம்.

இதற்குக் காரணம் அரபு மொழி தான் தேவமொழி என்பதன்று. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மோழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்… என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா? என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.

நபிகள் நாயகம் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது. அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகை அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.

உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.

இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும் அதன் கருத்துக்காகவும் தான் தேசிய கீதமாக்கப்பட்டது.

தமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை இன்றைக்கும் கூட எழுத முடியும். ஆனாலும் தேசிய கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசிய கீதமாக ஆக்க முடியும். எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத் தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசிய கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசிய கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.

இது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப்படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.

நிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காக செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.

ஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தன்று.

இது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபு மொழி மற்ற மொழிகளை விட சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன? என்பது மற்றொரு சந்தேகம்.

இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப், யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.

இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய் மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.

மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச்சொல் அன்று.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.

நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுகர்னோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களை தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.

அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?

சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்த சாதி என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் சாதி என்ன என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையை நாடித் தான் தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.

இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?

மனிதன் உணவுக்காக இஸ்லாம் உயிரினங்களைக் கொல்லச் சொல்கிறது. இதன் மூலம் ஜீவ காருண்யத்துக்கு எதிராக இஸ்லாத்தின் நடவடிக்கைகள் உள்ளன. இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும்.

மனிதன் தனது உணவுக்காக சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும். ஏனெனில் உயிரினங்களைக் கொல்லாமல் மனிதன் வாழ முடியாது. உயிர்வதை கூடாது என்று கூறக் கூடியவர்கள் கூட அவ்வாறு வாழ்வது கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை தண்ணீர். தண்ணீர் அருந்தாமல் எவரும் இவ்வுலகில் வாழ முடியாது.

தண்ணீரில் கிருமி எனும் இலட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. தண்ணீரை அருந்தும் போது இலட்சக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத் தான் அருந்துகிறோம். தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் அந்த உயிரினங்களை வேக வைத்துச் சாப்பிடுகிறோம்.

அந்த உயிர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற எல்லா உறுப்புகளும் உள்ளன. மற்ற உயிர்களைப் போலவே இயங்குகின்றன. மற்ற உயிர்களைப் போலவே இனவிருத்தியும் செய்கின்றன.

நமது சாதாரண கண்களுக்கு அவை தென்படாவிட்டாலும் அதற்குறிய கண்ணாடிகள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.

உயிர் வதை கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் தண்ணீரைக் கூட அருந்தாமல் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மனிதன் உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

அது மட்டுமின்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் உயிரினங்களில் பல வகைகள் உள்ளன.

மனிதன் பகுத்தறிவுடன் இடம் விட்டு இடம் செல்லக்கூடிய உயிரினமாக இருக்கிறான். ஏனைய நடப்பன, ஊர்வன, பறப்பன யாவும் பகுத்தறிவு இல்லாமல் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்களாக உள்ளன. இவ்விரண்டை மட்டும் தான் நாம் உயிரினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இடம் விட்டு இடம் பெயராமல் சுயமாக வளர்ச்சி பெறக் கூடிய இனவிருத்தி செய்யக்கூடியவையும் உயிரினங்கள் தான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மரம், செடி, கொடிகள் போன்றவற்றுக்கு உயிர் இருப்பதால் தான் அவை வளர்கின்றன. பல்வேறு பருவங்களை அடைகின்றன. அவற்றில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. இனப் பெருக்கமும் செய்கின்றன.

உயிரினங்களை வதை செய்யக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளக் கூடாது, அவ்வாறு உட்கொண்டால் அவர்கள் உயிரினங்களைக் கொன்றவர்களாகத் தான் ஆவார்கள்.

மனிதனும் ஆடு மாடுகளும் உயிரினங்கள் என்றாலும் இரண்டு உயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போலவே தான் ஆடுமாடுகளுக்கும், தாவரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியாசம் இருக்கிறது என்பதற்காக அவற்றுக்கு உயிர் இல்லை என்று கூறக் கூடாது.

மனிதனுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதற்காக எத்தனையோ உயிர்களை அனைவரும் கொல்கின்றனர். கொசு, எலி, கரப்பான், பல்லி போன்றவற்றை விஷ மருந்துகளைப் பயன்படுத்திக் கொலை செய்கின்றனர். மனிதனின் நன்மைக்காக இவற்றைக் கொல்வதை அங்கீகரிப்பவர்கள் உண்பதற்காக சில உயிரினங்களைக் கொன்றால் மட்டும் உயிர்வதை என்கின்றனர்.

மனிதனுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் பல அசைவ உணவில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் இதை நிரூபித்துள்னர். மருத்துவர்களும் பல சமயங்களில் அசைவ உணவைப் பரிந்துரைக்கின்றனர். உயிர் வதை கூடாது என்ற பெயரில் மாமிசத்தைத் தவிர்ப்பவர்களில் கனிசமானோர் புரதச்சத்து குறைவுடையவர்களாக ஆகின்றனர்.

மாடுகளில் பால் கறந்து அருந்துவதை ஜீவகாருண்யம் பேசுவோர் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இது ஏன் உயிர்வதையாகத் தெரியவில்லை. மாடு அசைவ உணவு என்றால் அதன் மாமிசம், எலும்பு, குடல், இரத்தம் ஆகியவை அசைவமாக உள்ளது போல் அதிலிருந்து பெறப்படும் பாலும் அசைவமாகத் தான் கருதப்பட வேண்டும்.

மேலும் மாடுகளுக்குச் சுரக்கக்கூடிய பால் அதன் கன்றுக்காகவே சுரக்கின்றது. முழுமையாக கன்றுக்கே பால் சொந்தமாக வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரானது ஏதுமில்லை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏனைய உயிரினங்களுக்கும் அவற்றின் தாய்ப்பால் தான் சிறந்ததாகும்.

கன்றுக்குச் சேர வேண்டிய பாலை மனிதன் பயன்படுத்தும் போது கன்றுகள் வதைக்கப்படுகின்றன. அவை ஏமாற்றப்படுகின்றன. இவை வதை எனத் தெரிந்தாலும் அதனால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

காளைமாடுகள் ஏர்களில் பூட்டப்படுகின்றன. வண்டிகளில் பூட்டப்படுகின்றன. கடுமையான வேலைகள் அவற்றிடம் வாங்கப்படுகின்றன. ஒரேடியாகக் கொல்வதை விட இந்தச் சித்ரவதை கொடுமையானது, கோடூரமானது ஆனாலும் மனிதன் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறோம்.

அப்படியானால் மனிதன் உணவுத் தேவைக்காக அவற்றைக் கொல்வதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?

உயிர்வதை கூடாது என்பது இவர்களின் வாதமா? உண்ணக் கூடாது என்பது இவர்களின் வாதமா? என்பதையும் சிந்திக்க வேண்டும். உயிர்வதை கூடாது என்பது தான் வாதம் என்றால் மேற்கண்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எலி, பாம்பு, பல்லி, தேள், கொசு போன்றவற்றைக் கொல்கிறோம். நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதற்காக இவற்றைக் கொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை உணவுக்காக கொல்லலாம் என்பதையும் நம்மையுமறியாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

உயிர்வதை, ஜீவன்களின் மீது காருண்யம் என்றெல்லாம் கூறுபவர்கள் அவற்றில் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் போது அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டால் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிடும். ஏழைகள் எந்த உணவையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அசைவ உணவு உட்கொள்பவர் பலர் உள்ளதால் தான் தட்டுப்பாடின்றி சைவ உணவு கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் துருவப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மீனைத் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காது.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அவர்களுக்குப் போதனை செய்தால் அவர்கள் செத்து மடிந்து விடுவார்கள். கடுமையான குளிர்ப் பிரதேசங்களில் குளிரைத் தாங்கும் வலிமையை அசைவ உணவு தான் அளிக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தாமாக இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்கள் சாக பட்சிணி, மாமிச பட்சிணி என இரு வகைகளாக உள்ளன.

மாமிசத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய உயிரினங்களின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் அவ்வுணவை அரைக்கவும் ஜீரணிக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

அது போல் சாக பட்சிணிகளின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் சைவ உணவை மட்டும் ஜீரணிக்க ஏற்றதாக அமைந்துள்ளன. சாக பட்சிணியாக உள்ள பிராணிகள் மாமிசத்தை உட்கொண்டால் அவ்வுணவை ஜீரணிக்க முடியாமல் செத்துப் போய்விடும்.

ஆனால் மனிதனின் பற்களும் குடல் அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளன? நாமே ஆச்சரியப்படும் படி இரு வகை உணவுகளையும் சரியாக ஜீரணிக்க ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வகை உணவுகளில் எதை உட்கொண்டாலும் மனிதனின் உடல் அதை அரைத்து சக்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

நமது உடல் அமைப்பு இரண்டு வகையான உணவுகளையும் ஏற்றுக் கொள்ளும் முறையில் இருப்பதால் அதுவே இயற்கை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும். ஜீவகாருண்யம் என்று கூறுவோர் இந்துக்களில் ஒரு சாரார் மட்டுமே. ஆயினும் இந்து மதத்தின் ஆதாரங்களிலிருந்து இவர்களின் வாதத்திற்கு ஆதாரம் காட்ட இயலாது.

இந்து மன்னர்களும், அவதார புருஷர்களும், கடவுளர்களும் உயிரினங்களை வேட்டையாடியதை புராண இதிகாசங்கள் கூறுகின்றன. யாகங்கள் என்ற பெயரால் குதிரைகள், மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் கூட முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்கின்றனர். 500 கோடி மக்களில் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தாம் அசைவ உணவைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதிலிருந்து முழுச் சைவம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அறியலாம்.

மேலும் ஒருவருக்கு அசைவ உணவில் விருப்பமில்லாவிட்டால் அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடையாக இல்லை. அசைவ உணவை உட்கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே தவிர அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வேண்டும்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1- முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2 - அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3 -உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4 - அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5 - மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6 - பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G. மூளையின் நிலையையும், E.E.G. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1- இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G.ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2- மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G.பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3 - மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4 -மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:

1 - இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2 - அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G.பதிவு காட்டியது.

3 - அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

எனவே இஸ்லாம் ஜீவகாருண்யமில்லாத மார்க்கம் என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்பதில் ஐயமில்லை.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

மாற்றார்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தில் உடன்பாடில்லாத மாற்று மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காக கையை வெட்டச் சொல்வது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? விபச்சாரத்திற்காக மரண தண்டனை வழங்குவது மனிதாபிமானமற்றதல்லவா? நாகரீகத்தின் உச்சிக்கு மனிதன் சென்றுவிட்ட காலத்தில் இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டங்கள் பொருந்துமா? என்று வினாக்களை எழுப்பி வருகின்றனர்.

தண்டனை வழங்குவதன் நோக்கம்

குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். என்று இஸ்லாம் கூறுவது போலவே இவர்களும் கூறுகின்றார்கள். கடுமையான தண்டனைகள் வழங்குவதா? கடுமை குறைந்த தண்டனைகள் வழங்குவதா? என்பதிலேயே இஸ்லாத்துடன் இவர்கள் முரண்படுகிறார்கள். இரண்டு வகையான தண்டனைகளில் எது அறிவுப்பூர்வமானது என்பதை நாம் ஆராய்வோம்.

குற்றவாளி ஒருவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இது விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் ஏற்கனவே கொல்லப்பட்டவனின் உயிர் திரும்ப கிடைத்துவிடப் போவதில்லை. கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பவும் கிடைத்துவிடப் போவதில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்கு பயனேதும் கிடையாது. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதின் காரணம் என்ன?

குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அவன் மனநிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகளூக்குத் தண்டனை வழங்க இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்களிருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கங்கள் இவை தான் என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் மறுக்க மாட்டார்கள்.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும் குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களெல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறவில்லை.

குற்றங்களுக்கெதிராக பல்வேறு தண்டனைகளை வழங்கி வரும் அரசுகள் இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

குற்றம் செய்பவனையும், செய்ய நினைப்பவனையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமை மிக்கதாக எந்த நாட்டின் சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்குச் செய்த தரப்படுகின்ற வசதிகளைக் காணும் ஒருவன் நாமும் குற்றம் செய்தால் அந்த வசதிகளை அனுபவிக்கலாமே என்றெல்லாம் எண்ணுகின்றான். குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்? அறிவு ஜீவிகள் இதைப் பற்றி சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஒருவன் திருடுகிறான், அல்லது கற்பழிக்கிறான், கொலை செய்கிறான், கொள்ளையடிக்கிறான், அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூரையாடுகிறான். இன்ன பிற குற்றங்களில் ஈடுபடுகிறான். இத்தகைய சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன. இருக்கின்ற வசதிகள் போதாதென்று குற்றவாளிகளுக்கான வசதியைப் பெருக்க என்ன செய்யலாம் என்பதைக் கண்டறிய கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடம் இருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழித்தானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை, குற்றவாளிகளின் மனப்பான்மையைக் கடுகளவும் மாற்றியதாகக் காணோம். சிறைச் சாலையிலிருந்து விடுதலை பெற்று வரும் ஒருவன், மீண்டும் குற்றம் புரிந்து விட்டு மாமியார் வீட்டுக்குப் போகிறேன் என்று திமிருடன் கூறிக் கொண்டு மீண்டும் சிறைச் சாலையில் தஞ்சமடைகிறான்.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! 15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது! என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை குற்றம் புரிகிறான். 53 தடவையும் கைது செய்யப்படுகிறான். 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகளும் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தக் காணோம். அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதக் காணோம்.

”மணியடித்தால் சோறு! மாமனாரு வீடு!” என்று சிறைச் சாலையில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் ”நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச் சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. அறிவு ஜீவிகள் (?) வக்காலத்து வாங்கும் மனிதாபிமானச் சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

அடுத்ததாக பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினாலு வருடம் அரசாங்க செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் – பாதிக்கப்படாத இடத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாமோ இதையும் கவனத்தில் கொள்கிறது. ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். உலகின் பல நாடுகளில் கருணை மனுவின் அடிப்படையில் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விடுகிறான். இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விடுவதாக அறிவித்தால் – அல்லது எதிரியிடமிருந்து ஏதேனும் தொகை கிடைத்தால் போதும் அவனது பார்வையைப் பறிக்க வேண்டாம் என்று கூறினால் குற்றவாளியின் கண் குருடாக்கப்படாது.

அது போலவே கொல்லப்பட்டவனின் மகன் அல்லது தந்தை அல்லது மற்ற வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறுவார்களானால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர்.

குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது, அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவர்கள் தொடர்ந்து திருடமாட்டார்கள். திருடவும் முடியாது. மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டார்கள் என்பது ஒரு நன்மை. முதன் முதலாக திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைத் திருட்டுக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

”இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்கு சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கிறது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியமிராது.

”பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று அறிவு ஜீவிகள் எண்ணுகின்றனர். பரிதாபப்பட வேண்டியது தான். அதை நாம் ஆட்சேபிக்கவில்லை. யாருக்கு பரிதாபப்படுவது?

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்து வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தை அபேஸ் செய்கிறான். இந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

தன் மகளின் திருமணத்திற்காக உழைத்து உழைத்து சேர்த்த பணத்தை திருடன் பரித்துக் கொள்கிறான். பணத்தையும், மகளின் வருங்காலத்தையும் பறிகொடுத்து நிற்கிறானே அவனுக்கு யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக்கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்பட மாட்டார்களாம். அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காக பரிதாபப்படுவார்களாம்? என்னே மனிதாபிமானம்! என்னே காருண்யம்? அறிவை அடகு வைத்துவிட்டு அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தான் அறிவு ஜீவிகளாம்!

சரி பரிதாபப்படுபவர்கள் தாம் படுகிறார்களாம்! அதை முழுமையாகப் பட்டுத் தொலைக்க வேண்டியது தானே. எந்தக் குற்றவாளிக்கும் எந்தத் தண்டனையும் தேவையில்லை என்று கூறினால் முழு மனிதாபிமானம் என்று ஏற்றுக் கொள்ளலாம். சிறைச்சாலை போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றிற்குச் செய்யும் செலவுகளாவது மிச்சமாகும்.

இப்படிச் சொல்ல மாட்டார்கள். இதிலிருந்து மனிதாபிமானம் காரணமாக இவ்வாறு இவர்கள் வாதிடவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம். லஞ்சம் ஊழல் மற்றும் எண்ணற்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்குவோர் நாளை சிறைச்சாலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்போது தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

இப்படியே கையை வெட்டிக்கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்றெல்லாம் புத்திசாலித்தனமான(?) கேள்விகளையும் இந்த அறிவு ஜீவிகள் எழுப்புகின்றனர்.

இங்கேயும் முட்டாள்தனமாகவே சிந்திக்கின்றனர். நிச்சயம் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனுக்கு கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

சவுதி அரேபிய அரசாங்கம் இந்த தண்டனைகளைக் கடுமையான முறையில் கடைப்பிடிக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. அங்கே கையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக திருடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு என்ற பெருமையை அந்த நாடு பெற்றுள்ளது.

உதாரணத்துக்காக தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன. கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே மற்றவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய்விட்டன. மக்களின் உயிருக்கும் உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சி அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமிய தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

காலம் கடந்தாவது சில பேர் இன்று இதை உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிக்கப்படுவது பெருகி வருவதைக் கண்டு கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு அரபு நாடுகளில் உள்ளது போல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர். பல்வேறு பெண்கள் மாநாடுகளில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெயரளவிலான தண்டனைகளால் பயனேதும் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உலகம் அறிந்து கொண்டது. குற்றங்களைக் குறைப்பதில் படுதோல்வியடைந்து விட்டதை ஒவ்வொரு அரசும் புரிந்து கொண்டது.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்தத் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் அதன் பயனை இந்த அறிவு ஜீவிகள் அனுபவப்பூர்வமாக உணர்வார்கள். அதன் பிறகு இஸ்லாமியச் சட்டத்தை விமர்சிக்க மாட்டார்கள்.

திருடனைப் பிடித்தவுடன் அவனுக்குக் கையை வெட்டிவிட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்ப வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது. மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைக் கூறினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்கு சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர்.

மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி, லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளையும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத் தான் நாம் மறுக்கிறோம்.

இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

”நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம் தான்”

(அல்குர்ஆன் 21:92)

உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம். உங்களைக் கிளைகளாக கோத்திரங்களாக நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கே. நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே!

(அல்குர்ஆன் 49:13)

தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து விட்டார்களே அவர்களுடன் (முஹம்மதே) உமக்கு எந்த தொடர்பும் இல்லை.

(அல்குர்ஆன் 6:159)

பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் மூல பிதா ஒருவர் தான். எல்லா மக்களுக்கும் மூல அன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்து விட்டது.

இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவது காரணம்

ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இது தான் சாதிக்குரிய இலக்கணம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.

ஷியா, சன்னி, ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி, அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.

ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்துவிட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஷாபி என்பவர் ஹனபி பிரிவில் சேரலாம். ஹனபி என்பவர் ஷாபி பிரிவில் சேரலாம்.

இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும் போது இந்தப் பிரிவை சாதியுடன் சேர்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.

மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.

குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர். இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.

மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.

அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.

யாரேனும் அழைத்தால் ”ஓ” என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபு நாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர். இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறி வந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர். உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.

எனவே இதையும் காரணமாக வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.

மூன்றாவது காரணம்

கொள்கை மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை. வேறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட செய்து கொள்கின்றனர்.

இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ள முடியும்.

உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மை தான்.

இதற்குக் காரணம் சாதி அமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒரு மொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது. இது போன்ற காரணங்களுக்காகத் திருமண சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை. 

தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமண சம்பந்தத்தைத் தவிர்த்தால் தான் அதைச் சாதியாகக் கருத முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள்  தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை.

இது போன்ற பிரிவுகளையும் கூட தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிட வேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக் கொள்கிறோம்.

அவர்கள் கைவிடாவிட்டாலும் அதையும் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். என்பதும் இஸ்லாம் குறித்து மாற்று மத நண்பர்கள் செய்யும் விமர்சனமாகும்.

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பதில்லை.

முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும் தான் உண்ணுகிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை.

முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதில்லை.

முஸ்லிம்கள் ஆணோ, பெண்ணோ முஸ்லிமல்லாதவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

இது போன்ற காரணங்களை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால்  ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.

பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.

இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.

இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.

முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.

இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை. நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.

முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை, நம்ப முடியாது நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.

மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.

மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.

”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்” என்பது இஸ்லாத்தின் நிலை

”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு”

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)

அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.

இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இனி தங்கள் விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக எம்மதமும் சம்மதம் எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரினங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்தக் கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றார்களே தவிர காழ்ப்புணர்வின் காரணமாக அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையுமில்லை. கடவுளுக்காக எந்தப் பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் படையல் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

கடவுளுக்கும் தேவையிருக்கிறது என்ற நம்பிக்கை வந்து விடக் கூடாது என்பதற்காகவும் பல கடவுள் கொள்கையை நம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிட்டுள்ளது. இதற்குக் காழ்ப்புணர்வு காரணமில்லை.

முஸ்லிம்கள் எப்படி மற்றவர்கள் மத நம்பிக்கைக்குப் மதிப்பளிக்க வேண்டுமோ அது போல் மற்றவர்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை மதித்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும் அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.

இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.

இதே போல் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்காமல் இருப்பதே இஸ்லாத்தை மதிப்பதற்கு அடையாளமாகும். இவ்வாறு இரு சாராரும் நடந்து கொள்வதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தினரை மதித்து நடக்குமாறு இஸ்லாம் கூறுவதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும்.

ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.

கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.

இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவது உண்மை தான். இதில் மத நல்லிணக்த்துக்கு எந்த ஊறும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிவிட்டு சாதி, மதம் விட்டு மதம் திருமணம் செய்யும் போது தான் இரண்டு சமுதாயங்களுக்கிடையே கலவரங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன. பெரும்பாலான சாதி மதச் சண்டைகளில் பின்னனியில் பெண் விவகாரமே முக்கிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே இதைத் தவிர்ப்பதால் மனித குலத்திற்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.

இனக்கவர்ச்சியினால் அணின் குறைபாடுகள் பெண்ணுக்கும் பெண்ணின் குறைபாடுகள் ஆணுக்கும் ஆரம்பத்தில் தெரியாது. மோகம் தனிந்த பின் யதார்த்த நிலையை இருவரும் உணர்வார்கள்.

வீட்டில் கடவுள் படங்களை மாட்டுவதிலிருந்து பெற்ற குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, வளர்ப்பது, சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் தகராறுகள் ஏற்படும், யாராவது ஒருவர் தனது மதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பிரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.

பின்னால் ஏற்படக் கூடிய இந்த நிலையைத் தான் இஸ்லாம் முன்கூட்டியே கூறுகிறது. முஸ்லிமான ஆணை மணக்க விரும்பும் பெண்ணோ, முஸ்லிமான பெண்ணை மணக்க விரும்பும் ஆணோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ இஸ்லாம் தமக்கு முக்கியமில்லை எனக் கருதி வேறு மதத்தவர்களை மணந்து கொண்டால் அதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆரம்பத்திலேயே இதைப் பற்றி தீர்க்கமான முடிவெடுத்துக் கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பிளவையும் பிணக்கையும் தவிர்க்கும் என்ற தூர நோக்கோடு தான் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிடுகிறது.

கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர், கடவுள் நம்பிக்கையில்லாத குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினால் அதைக் கொள்கைப் பிடிப்பு என்று எடுத்துக் கொள்கிறோம். இஸ்லாம் என்பதும் அது போன்ற ஒரு கொள்கை தான்.

இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்தியதையும் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்வதையும் இது போன்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் முயன்றாலும் இன்னொரு சாதிக்காரராக முடியாது. ஆனால் யாரும் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்று முஸ்லிமாக முடியும்.

இதைப் புரிந்து கொண்டால் மத நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் எந்த வகையிலும் ஊறு விளைவிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் எராளமான போர்களை நிகழ்த்தியதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தது உண்மை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை. ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவது தான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது, பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்நதன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்கு தனிநாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்த வந்த வரலாறும் உண்டு.

மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தைத் திணித்த வரலாறும் உண்டு.

பல நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது. அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பு.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலூர், பரியலம், மணிமங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம், பியம், வெள்ளுர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம் மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவை தாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ, மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களைப் பெருமளவு நியமித்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எப்படி இருந்திருக்க முடியும்?

இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாய உணர்வுடைய எவருமே கூறத் துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வௌ்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் படையினரின் எண்ணிக்கையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த படு மோசமான இந்து மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்தது. இல்லையென்றால், மகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

படு மோசமான ஆட்சியாளர்களைக் கண்டு வெறுப்புற்றிருந்த மக்களுக்கு முகலாயர்களின் ஆட்சி சிறப்பானதாகத் தென்பட்டதாலேயே அவர்களை ஆளவிட்டார்கள்.

இந்து மன்னர்கள் நடத்திய போர்களை இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படிக் கூற முடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாம் தூண்டிவிட்டது என்று கூற முடியாது.

சுருங்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்ப முடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே? இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றியே நாம் வரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்க்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் ”பத்ர்” எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.

விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.

”பத்ர்” எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

”உம்ரா” வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.

ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான்.  நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை. என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா?

எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ”தாயிப்” நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரம் போர் நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

 (அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்கள், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்கள், தூக்கில் தொங்கவிட்டவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்.

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல்கள் : புகாரி, முஸ்லிம்

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : முஸ்லிம்.

போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்தது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.

மதமாற்றம் செய்வதற்காகவா?

மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.

அல்குர்ஆன் 2 : 256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இணை வைப்பவர்களில் (அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! எனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.

(அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விக்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. கமண்டலமும் ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்வில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள். மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். இதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.

முதலாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி (ஸல்) போர்களைச் சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

”உஹது போர்” என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் ”உஹத்” எனும் மலையடிவாரத்தில் நடந்ததால் ”உஹதுப் போர்” என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

”பத்ருப் போர்” என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)

அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டன. இதையும் குறை கூற முடியாது.

இரண்டாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபனைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வபோது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தத்தமது நாடுகளில் இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை – சொந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றி கொண்டனர். இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ”எங்கள் இறைவன் அல்லாஹ்” என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.

(அல்குர்ஆன் 22 : 39)

திருக்குர்ஆனின் இவ்வசனம் அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப் போரிடுமாறு கட்டளையிடுகிறது. இழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்று யாரும் கூற மாட்டார்கள்.

தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படிச் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அது போலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் யூதர்கள் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர் (மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜென்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்ட்டவையே...

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காகப் போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்தக் கொள்கை அவசியமானது தான்.

ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினி போடுகிறான். அப்போது கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று விட்டு விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப் போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று பேசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான். தாங்க முடியாத அளவுக்குக் கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலைய மாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறி விடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ”எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது.

அல்குர்ஆன் 4 : 75)

யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராகப் போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்கு வரி, பேசுவதற்கு வரி, எழுத வரி, திருமண வரி, சாவு வரி, வியாபார வரி, விவசாய வரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப் பெறப்பட்ட பணத்தை மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரிந்த நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

இதையும் நியாய உணர்வுடைய எவரும் குறை சொல்ல மாட்டார். பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது.

அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. பங்களாதேஷ் என்ற தனிநாட்டை அம்மக்களுக்காக உருவாக்கியது.

விடுதைலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகிவிட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்ட போது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்திய அதிரடிப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்கா ஈராக் மீதும், அடிக்கடி அநியாயத் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மக்கள் மீது மிருகவெறியாட்டம் நடத்தி வருகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த நியாயமும் இல்லை. அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்கும் வட்டி வாங்குவதற்கும் உலக நாடுகள் மௌனமாக இதை அங்கீகரிக்கின்றன. இந்த அக்கிரமத்தை ஆதரிப்போர் நியாயமான காரணங்களுக்காக நபிகள் நாயகம் அன்னிய நாட்டில் தலையிட்டதைக் குறை கூறுவது தான் வேடிக்கையானது.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபிகள் நாயகமும் போர் செய்துள்ளனர்.

நியாயமான காரணங்களுக்காக போர் நடத்தப்பட்டு நபிகள் நாயகம் வெற்றி பெற்ற பின் அவர்கள் நடந்து கொண்ட முறையை ஆராய்ந்தால் உண்மையை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பதால் அவர்கள் போர்க்களத்தில் பங்கெடுத்ததை ஏற்க இயல்பாகவே சிலருக்குத் தயக்கம் உள்ளது.

போர் என்பது என்ன? என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே இவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுவான தர்மங்களும் போர் தர்மங்களும் வெவ்வேறானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். இவ்வாறு செய்வது தான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணன், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரண சமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்க்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் என போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி. ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல், தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலைகாரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) போரிலும் கூட புதுநெறி புகுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப்பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள்.  பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராக பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரைப் படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்திருந்தார்கள்.

மக்கத்துக் எதிரிகளைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் அவர்களைக் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழி வாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்குக் காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்திமிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது, ஒரு நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி, விளை நிலங்களுக்குத் தீ வைத்து, தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்து கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்றவர்கள் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது

என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும். திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.

இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக்  கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

(அல்குர்ஆன் 6:108)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.

மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். ”உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்” என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். ”இவளைக் கொன்று விடட்டுமா?” என நபித்தோழர்கள் கேட்டதற்கு ”கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள்.

(முஸ்லிம், அஹமது நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் பயன்படுத்தினார்கள்..

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே.

ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும். இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரீக் என்றால் ”பல கடவுள்களை நம்புபவர்கள்” என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

10. ஜிஸ்யா வரி

பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும்.

”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம்.

இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும்.

ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார்.

”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்”

என்று குர்ஆன் கூறுகிறது.

எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.

முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா

”ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர்” என்பது மாற்று மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.”

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகும்.

பாமர மக்கள் மட்டுமின்றி பண்டிதர்களும் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளனர். பாரதியார் கூட முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ”திக்கை வணங்கும் துருக்கர்” எனப் பாடியுள்ளார்.

முஸ்லிம்கள் திசையை வணங்குவதாகக் கூறுவதே அடிப்படையில் தவறான வாதமாகும்.

மக்கா நகரில் கஃபா எனும் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

மக்காவில் அமைந்த கஃபா ஆலயம் இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனை வணங்குகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு நோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.

மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள் கிழக்குத் திசை நோக்கியும், மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும் மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்ற விமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குகிறார்கள் எனக் கூறுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். கஃபாவின் திசையை வணங்குகிறார்கள் என்று கருதலாம் அல்லவா? என்று மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதுவும் கூட தவறான எண்ணம் தான். ஒன்றை நோக்குவது அதை வணங்குவதாக ஆகும் என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

மனிதர்கள் எல்லா நிலையிலும் ஏதேனும் ஒரு திசையை நோக்காமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு திசையை நோக்குவதைத் தவிர்க்கவே இயலாது. எனவே நோக்குவதையெல்லாம் வணக்கம் என்று யாருமே கூற மாட்டார்கள். வணங்குவது வேறு, நோக்குவது வேறு. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

ஒரு பொருளை வணங்குவது என்றால் நமது குறைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. நாம் தவறு செய்தால் நம்மைத் தண்டிக்கும் வலிமையும் அதற்கு இருக்கிறது என்று நம்பி அதையே கடவுளாகப் பாவித்தால் தான் அதை வணங்குகிறார்கள் எனக் கூற முடியும்.

கஃபா எனும் ஆலயத்தைப் பற்றி முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்களா? நிச்சயமாக இல்லை.

கஃபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல் அதற்குக் கிடையாது. நாம் செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும் போது அந்த ஆலயம் கூட அழிந்து போய்விடும் என்று தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான் நம்ப வேண்டும்.

கஃபா ஆலயமே! நீ தான் எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.

கஃபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறு கட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக் கூறுகிறது.

”நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது.

(அல்குர்ஆன் 2 : 15)

என்பது தான் அந்த அறிவுரை.

கஃபாவை நோக்கும் போது கஃபா தான் கடவுள் என்றோ கஃபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டுத்தான் கஃபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் மேற்கையும் வணங்கவில்லை. கஃபாவையும் வணங்கவில்லை. கஃபா இருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஃபாவை நோக்கியவர்களாக அந்த ஒரு கடவுளைத் தான் வணங்குகிறார்கள்.

கஃபாவை நோக்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும் ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹ் பெரியவன் என்று தான் முஸ்லிம்கள் கூறுவார்கள். தொழுகையின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போதும் அல்லாஹ் பெரியவன் என்று தான் கூறுவார்கள். தொழுகைக்கு உள்ளேயும் அல்லாஹ்வைத் தான் புகழ்வார்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். கடவுளை வணங்கும் போது நோக்குவதற்கு கஃபா ஆலயத்தைக் குறிப்பாக ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்திற்கும் திருக்குர்ஆன் தெளிவான விடையை வைத்திருக்கிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி கடவுள் ஒரே ஒரு ஜோடி மனிதர்களைத் தான் படைத்தான். அந்த ஒரே ஒரு ஜோடியின் மூலமாகத் தான் மனித குலம் பல்கி இன்று அறுநூறு கோடியைத் தாண்டியுள்ளது.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதாம், இப்போது மக்கா நகரம் என்றழைக்கப்படும் பகுதியில் இப்போது கஃபா ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரே இறைவனை வணங்கவதற்காக ஒரு ஆலயத்தை எழுப்பினார்.

உலகில் ஒரே கடவுளை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் அதை நோக்கித் தொழுகை நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. கஃபா ஆலயத்தை நோக்குமாறு கட்டளையிட்டதற்கு இது தான் முக்கிய காரணம்.

மனித சமுதாயத்திற்கு (இறைவனை வணங்குவதற்காக) முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ள ஆலயமாகும்.

(அல்குர்ஆன் 3 : 36)

முதன் மனிதரால் உலகின் முதல் ஆலயமாக எழுப்பப்பட்ட ஆலயத்தை நோக்கி அந்த ஒரே இறைவனை வணங்குவது மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

கஃபா ஆலயத்தை முஸ்லிம்கள் வணங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம்.

கஃபா ஆலயம் எத்திசையில் இருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் இருப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம். தொழுது முடித்த பின்னர் அவர் தொழுதது கஃபாவுக்கு எதிரான திசை என்பது தெரிய வந்தால் ஏற்கனவே தொழுததை மீண்டும் தொழ வேண்டியதில்லை என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

கஃபா ஆலயம் தான் வணங்கப்படுகிறது என்றிருந்தால் கஃபா ஆலயம் இருக்கும் திசை தெரியாவிட்டால் தொழக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருக்கும். அல்லது தொழுத பின் கஃபா இருக்கும் திசையில் தொழவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டளையிடப்படாததால் முஸ்லிம்கள் கஃபாவைக் கடவுளாகக் கருதுகிறார்கள் என்பதும், கஃபாவை வணங்குகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் சிலருக்கு மற்றொரு சந்தேகம் ஏற்படலாம்.

கஃபாவை நோக்கி கடவுளை வணங்குமாறு கூறாமல் அவரவர் விருப்பத்தின் பால் இதை விட்டு விடலாமே! என்பதே அந்தச் சந்தேகம்.

தொழுகை எனும் வணக்கத்தை முஸ்லிம்கள் ஓரிடத்தில் கூட்டாக நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பலரும் கூட்டாகக் குழுமி வணங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ ஒழுங்கோ இருக்காது. அனைவரும் ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்கு இருக்கும்.

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும் மற்றொருவர் தெற்கு நோக்கியும் இன்னொருவர் கிழக்கு நோக்கியும் வேறொருவர் மேற்கு நோக்கியும் தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும்.

இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான் ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.

இதைப் புரிந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் திசையையோ, கஃபா ஆலயத்தையோ வணங்குகிறார்கள் என்று கூறமாட்டார்கள்.

ஹஜ் பயணமும் புனித யாத்திரையும்!

வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை மக்கா எனும் நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

ஏனைய மதங்களில் எவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறதோ அது போன்ற ஒரு யாத்திரையாகத் தான் ஹஜ் யாத்திரையும் அமைந்துள்ளது.

இருந்த இடத்திலேயே கடவுளை வணங்கலாம் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு கடவுளை வணங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கச் சொல்வது ஏன்?

பல தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவர்கள் எதைக் கடவுளென நம்புகிறார்களோ அதைத் தரிசிக்க அவர்கள் புனித யாத்திரை செய்கிறார்கள்.

கஃபா ஆலயம் கடவுளை வழிபடும் இடமே தவிர கடவுள் அல்ல என்று ஒரு புறம் கூறிக் கொண்டு அதைத் தரிசிப்பதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டுமா? இந்தப் பணத்தை எத்தனையோ நல்ல வழிகளில் செலவிடலாமே என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனத்துக்கு உரிய விடை கிடைத்து விடும்.

ஒரே ஒரு கடவுள் வணக்கத்தை நிலை நாட்டுவது தான் இஸ்லாத்தின் பிரதான நோக்கம் என்றாலும் அந்த வணக்கத்திற்குள்ளேயும் மனித குலத்திற்கு நன்மைகள் அடங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

தொழுகையை எடுத்துக் கொள்வோம். கடவுளை ஒவ்வொருவரும் தத்தமது இல்லத்தில் இருந்த கொண்டே வணங்க முடியும். ஆனாலும் ஒரு வணக்கத்தலத்தில் வந்து கூடி கூட்டாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம்  கட்டளையிடுகிறது. இதனால் கடவுள் வணக்கம் நிறைவேற்றப்படுவதுடன் மனித குலத்திற்கும் அளப்பரிய நன்மைகள் கிடைக்கின்றன.

ஒன்றன் பின் ஒன்றாக – வரிசையாக – அணிவகுத்து இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிறைவேற்றும் போது யார் முதலில் பள்ளிவாசலுக்கு வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்க வேண்டும். வருபவரது பொருளாதார நிலை, குலம், கோத்திரம், பதவி, அந்தஸ்து, அறிவு, ஆற்றல் எதுவுமே அங்கு கவனத்தில் கொள்ளப்படாது. நாட்டின் அதிபராகவே இருந்தாலும் அவர் கடைசியில் வருவாரேயானால் அவர் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும்.

ஏதோ ஒரே ஒரு நாள் இப்படி நின்று விட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தினமும் இப்படி நிற்க வேண்டும். தினசரி ஐந்து தடவை இப்படி அணிவகுத்து நிற்க வேண்டும்.

பிறப்பால் தன்னை உயர்ந்தவனாகக் கருதிய ஒருவன் இன்று தான் இஸ்லாத்தை ஏற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முன்னால் தாழ்ந்த குலமாகக் கருதப்பட்டவன் நிற்பான். இது உயர்ந்த குலத்தவன் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்பவனுக்கு உறுத்தலாக இருக்கும். மீண்டும் நிற்கிறான். அந்த உறுத்தல் சிறிது குறையும். மீண்டும், மீண்டும் தினசரி ஐந்து தடவை இப்படியே பழகும் போது இந்த உறுத்தல் அடியோடு நீங்கிவிடும். தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்திலிருந்து அவன் முற்றிலுமாக விடுபட்டு விடுவான்.

அது போல் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தாழ்வு மனப்பான்மையும் படிப்படியாகக் குறைந்து முடிவில் தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து முற்றிலுமாக அவன் விடுபடுவான்.

தொழுகை என்பது வெறும் நிற்பது மட்டுமின்றி ஒவ்வொரு தொழுகையின் போதும் பலமுறை நெற்றியை நிலத்தில் வைத்துக் கடவுளை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும் போது முதல் வரிசையில் உள்ள தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்பட்டவனின் பாதம் உயர்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தலையில் படும். அதையும் அவன் சகிக்கப் பழகிக் கொள்கிறான். இப்படியே நாள் தோறும் அளிக்கப்பட்ட பயிற்சியின் காரணமாகவே முஸ்லிம்களிடம் தீண்டாமை எள் முனையளவும் இல்லை. எத்தனையோ சட்டங்களைப் போட்டும் ஒழிக்க முடியாத ஒரு கொடுமையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மிக எளிதாக ஒழித்துக் கட்டி விட்டது. இதற்குத் தொழுகையும் ஒரு காரணமாகவே உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு சாதிகளிலிருந்து இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பது அனைவருமே அறிந்த உண்மை. ஆனால் எந்த முஸ்லிமுக்கும் தனது முன்னோர் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றனர் என்பது தெரியாது.

தனது பூர்வீக சாதி எது என்பது கூட தெரியாத அளவுக்கு இஸ்லாம் சாதி வேறுபாட்டை ஒழித்துக் காட்டியது.

எந்தச் சட்டத்தினாலும் சாதிக்க முடியாததை தொழுகை எனும் வணக்கத்தின் மூலம் இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது.

ஒரு ஊரில், ஒரு தெருவில், ஒரு நாட்டில் வசிக்கும் மக்களிடையே தொழுகையின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்திய இஸ்லாம், ஹஜ் எனும் வணக்கத்தின் மூலம் இந்தச் சமத்துவத்தை உலகளாவிய அளவில் நிலை நாட்டிக் காட்டுகிறது.

வெள்ளைத் தோல் காரணமாகத் தன்மை உயர்ந்தவரென எண்ணும் ஐரோப்பியரின் தலையில் கருப்பு நிற ஆப்ரிக்கரின் கால்கள் படுகின்ற அற்புதத்தை அங்கே தான் காண முடியும்.

இந்தியன் இந்தியனல்லாதவன் என்ற வேறுபாடு அங்கே கிடையாது. தமிழன், வேற்று மொழி பேசுபவன் என்ற பேதமும் அங்கே கிடையாது. பூர்வீக முஸ்லிம், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவன் என்ற பாகுபடும் அங்கே கிடையாது.

மனிதனைப் பேதப்படுத்துகின்ற தேசம், மொழி, நிறம் போன்ற எல்லா வேறுபாடுகளும் மறக்கப்படும் ஒரே இடமாக அது திகழ்கின்றது.

எல்லா விதமான வேற்றுமைகளையும் வேரறுத்து உலக சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மாநாடு என்றும் ஹஜ்ஜைக் குறிப்பிடலாம்.

ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிக்கும் வரை அனைவரும் ஒரே விதமான ஆடை அணிந்து இருக்கும் காட்சியையும் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காட்சியையும் அங்கே காணலாம்.

அரஃபா எனும் திறந்த வெளியில் அனைவரும் ஒரே நேரத்தில் குழும வேண்டும். அங்கே ஒரு சிறப்புரை ஆற்றப்படும். அவ்வுரையில் ஓரிறைக் கொள்கையும் உலக சமத்துவமும் வலியுறுத்தப்படும். அவ்வுரையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

”மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை தான். அரபு மொழி பேசுவோருக்கு மற்ற மொழி பேசுவோரை விட எந்தச் சிறப்பும் இல்லை. சிவந்தவருக்கு கறுப்பரை விட எந்தச் சிறப்பும் இல்லை. என்று அந்த மைதானத்தில் – ஹஜ் பயணத்தின் போது – நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்தார்கள் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே இவ்வளவு செலவு செய்து அங்கே போக வேண்டுமா? என்ற கேள்வியும் தவறாகும். பயனுள்ள செலவு வீண் செலவு என்பதெல்லாம் அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்தே மதிப்பிடப்படும்.

ஆயிரம் சட்டங்கள் போட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்றும் ஒழிக்க முடியாத தீண்டாமையையும், நிறவெறியையும் ஒழித்துக்கட்டும் நன்மை இதனால் ஏற்படுகிறது. இந்த நன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது செய்யப்படும் செலவு அற்பமானது தான். இதை விட அதிகமாகச் செலவு செய்தும் ஒரு நாட்டிலேயே தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. அதை விடக் குறைவாகச் செலவு செய்து உலக சகோதரத்துவம் நிலைநாட்டப்படும் போது செலவைப் பற்றி எண்ணிப் பார்ப்பது முறையில்லை.

மனித குலம் ஒன்றுபடுவதற்காக எவ்வளவு செலவு செய்தாலும் அது வீண் செலவாக ஆகாது, என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணம் செய்பவர்கள் மக்காவில் கடவுள் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்வதில்லை. மக்காவில் உள்ள எந்தக் கட்டிடத்தையும் அல்லது அங்குள்ள வேறு எதையும் நிச்சயமாக வணங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டால் ஹஜ் பயணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகம் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருப்புக் கல் வழிபாடு?

”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள “ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டு இன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இது காட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

நாங்களும் கல்லை வணங்குகிறோம், நீங்களும் கல்லை வணங்ககிறீர்கள், எனவே உங்களின் கடவுட் கொள்கை தனித் தன்மை கொண்டதோ, சிறந்ததோ அல்ல என்ற அடிப்படையிலேயே இவர்களின் விமர்சனம் அமைந்துள்ளது.

இவர்களின் இந்த விமர்சனம் ஒரு செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டதால் எழுந்ததாகும். ஏனெனில் முஸ்லிம்கள் எவரும் கருப்புக் கல்லை வணங்குவதுமில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கஃபாவில் பதிக்கப்பட்டுள்ள கறுப்புக் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்துள்ளனர். இதைத் தான் இவர்கள் வணங்குவதாகக் கருதிக் கொண்டார்கள்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும், விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

”ஹஜ்ருல் அஸ்வத்” பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா?  நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக்கல் நாம் பேசுவதைக் கேட்கும், நமது பிரார்த்தனையை நிறைவேற்றும். அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெயவீக அம்சம் எதுவுமில்லாத சாதாரணக் கல் என்பதை இஸ்லாம் தெளிவாக் கூறுகின்றது.

”இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி நிச்சயமாக நி ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.

இந்த வரலாற்றுச் செய்தி ஆதாரப்பூர்வமான நூல்களில் இடம் பெற்றுள்ளது.

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் பெற்ற நபித்தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும் எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறிவிட்ட பின், தமது மூதாதையார்களான இப்றாஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) உடைத்து எறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படிக் கூறியிருக்க முடியும்?

ஹஜருல் அஸ்வத் எனும் கல்லுக்கு எந்த விதமான ஆற்றலோ கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

கடவுள் தன்மை அக்கல்லுக்கு உள்ளது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அச்சிறப்பு காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஹஜருல் அஸ்வத் எனும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்தச் சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் இவ்வுலகிலேயே காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும் தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்து பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது.

இவ்வுலகில் காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்கள் அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை. இத்தகைய நம்பிக்கை எள்ளளவும் எந்த முஸ்லிமுக்கும் கிடையாது.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

சந்திரனிலிருந்து ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர், இவ்வாறு செய்ததால் அம்மண்ணை வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்ற நம்பிக்கையினடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர வேறு எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுக்குப் பயணம் செல்பவர்கள் அந்த கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறிவிடும். அது வழிபாட்டுக்குரியதாக இருந்தால் ஹஜ்ஜின் விதிகளில் ஒன்றாக அதுவும் ஆக்கப்பட்டிருக்கும்.

எனவே கருப்புக் கல்லை இஸ்லாம் வழிபடச் சொல்கிறது என்பது அறியாமையில் எழுந்ததாகும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக் கல்லிடம் பிரார்த்னை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

இவ்வளவு தெளிவாக இஸ்லாம் தனது நிலைபாட்டை அறிவித்த பின் கறுப்புக் கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் எனக் கூறுவது தவறு என்பதில் சந்தேகமில்லை.

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்கள்

இஸ்லாம் புரோகிதத்தை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது முதல் மரணிக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யவில்லை. எனவே இஸ்லாம் எனும் மதத்தை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்தியிருக்க வேண்டும்.

புரோகிதர்கள் எப்படி பக்தர்களிடம் காணிக்கைகளைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்களோ அது போலவே நபிகள் நாயகமும் நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வாறு பல மனைவியருடன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும்?

என்பதும் மாற்றாரின் வமர்சனங்களில் ஒன்றாகும். இந்த விமர்சனம் இந்தியாவில் எழுப்பப்படாவிட்டாலும் மேலை நாட்டவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்கின்றனர்.

மதீனாவுக்கு விரட்டப்பட்டு அங்கே ஒரு ஆட்சியை நிறுவிய நபிகள் நாயகம் (ஸல்) அந்த ஆட்சியைப் பயன்படுத்தி தானே வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும் எனவும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சித் தலைவராக இருந்த போதும் தமது வருமானத்துக்காக எந்தத் தொழிலும் செய்யவில்லை.

மக்காவில் இருந்தவரை மதத் தலைமையின் மூலம் வாழ்க்கை நடத்தினார்கள். மதீனா வந்ததும் மதத்தலைமை, ஆட்சித்தலைமை ஆகிய இரு தலைமைகள் மூலமும் வாழ்க்கை நடத்தினார்கள் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைமை, ஆட்சித் தலைமை இரண்டையும் தமது வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. இது பற்றி மிகவும் விரிவாக விளக்குவோம்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விபரம் தெரிந்த நாள் முதல் உழைக்கலானார்கள். மரணிக்கும் வரை உழைத்தார்கள். சின்னஞ்சிறு பாலகராக இருந்து சமயத்தில் கூட தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கோ, தன் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கோ அவர்கள் பாரமாக இருந்ததில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்கு தாமே உழைத்தார்கள் அந்த மாமனிதர். 

மதீனத்து மாமன்னராக அன்றைய உலகில் மிகவும் அதிக அதிகாரங்களையும் கட்டுப்பாடான தோழர்களையும் கொண்டவராக, வல்லரசுகளையும் நடுநடுங்கச் செய்தவராக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்த சமயத்தில் தன் சிறு பிராயத்தை நினைவு கூறும் போது,

”எந்த நபியும் ஆடு மேய்க்காதவராக இருந்தது கிடையாது என்றார்கள். அவர்களின் தோழர்கள் ”அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா? என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! மக்காவாசிகளிடம் சில ”கீராத்” கூலிக்காக நான் ஆடு மேய்ப்பவனாக இருந்திருக்கிறேன்” என்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்தச் சம்பவம் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அரபு நாட்டில் அன்று வழக்கிலிருந்த ”தீனார்” எனும் நாணயத்தில் பனிரெண்டில் ஒரு பங்கு ”கீராத்” எனப்படும்.

சின்னஞ்சிறு பிராயத்திலேயே – அவர்களின்  இரத்தத்திலேயே – உழைக்க வேண்டும் என்ற எண்ணம்  ஊறிப் போய் இருந்ததது. இளமைக் காலத்தில் பெரிய தந்தை அபூதாலிபுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள், அண்டை நாடுகளுக்கெல்லாம் சரக்குகளை ஒட்டகத்தில் ஏற்றிச் சென்று வியாபாரம் செய்வார்கள். அபூதாலிபின் செல்வ நிலையும், நபிகளின் கடின உழைப்பால் மிகவும் உயர்ந்தது. மக்காவில் வாழ்ந்த முக்கியமான சில வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஆனார்கள்.

சிறு வயது முதல் உழைத்துப் பழகியவர் உழைத்து உழைத்து உயர் நிலையை அடைந்தவர், இருபத்தி ஐந்து வயதிலேயே பெரும் வணிகராக ஆனவர், உழைக்காமல் உண்பதற்காக மதத்தை உருவாக்கியிருப்பாரா?

தமது இருபத்தி ஐந்தாம் வயதில் மக்காவிலேயே மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது எல்லாச் சொத்துக்களையும் தம் கணவருக்கே அன்னை கதிஜா (ரலி) அவர்கள் உடமையாக்கினார்கள். இதனால் நபியவர்களின் செல்வ நிலை மேலும் உயர்ந்தது. பல தலைமுறைகளுக்குப் போதுமான சொத்தைப் பெற்றிருந்த நபிகளார் வயிற்றுப் பிழைப்புக்காக மதத்தை உருவாக்கினார்கள் என்பது நம்பக் கூடியது தானா?

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன் போதிய செல்வத்தைப் பெற்றிருந்தவர் ஏழை எளியவர்களின் நலனுக்காகத் தம் செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல், கொடுத்தே பழகிய கைகளுக்குச் சொந்தக்காரர், பிழைப்புக்கு வழியாக மதத்தை உருவாக்கினார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு அல்லவா?

உண்மையைச் சொல்வதென்றால் அவர்கள் தம்மைக் கடவுளின் தூதரென அறிவிப்பதற்கு முன்னர் தான் செழிப்பான வாழ்க்கைக்கு உரியவராக இருந்தார்கள். இறைவனின் தூதர் நபி என்று தம்மை அறிவித்துக் கொண்ட பின் இருந்த செல்வங்களைச் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். தம்மை நம்பியவர்கள் கஷ்டப்படும் போதெல்லாம் அனைத்துச் செல்வங்களையும் வாரி இறைத்தார்கள்.

முடிவில் அவர்களைச் சமூகப் பரிஷ்காரம் செய்து ”அபூதாலிப் கணவாய்” எனும் இடத்தில் ஒதுக்கி வைத்த போது உண்பதற்குக் கூட உணவு இன்றி காய்ந்து போன சருகுகளையும், சுட்ட தோலையும் உண்டு வாழ்வைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வுலகச் செல்வங்களைப் பொருத்தவரை அவர்கள் இறைத்தூதராக ஆன பின் இழந்தது தான் அதிகம். தான் பிரச்சாரம் செய்யும் மார்க்கம் உண்மையானது, மறுமை வாழ்வே நிறந்தரமானது என்ற நம்பிக்கையினால் தான் பிரச்சாரம் செய்தார்கள். இவ்வுலகில் உயர்ந்த இடத்தை அடைவதற்காக அல்ல.

இருக்கின்ற சொத்துக்களைக் கூட காப்பாற்ற எண்ணாமல் கொள்கையைக் காப்பதற்காக அனைத்தையும் துறந்துவிட்டு அகதியாய் வெளியேறத் துணிந்தார்கள். உலக வரலாற்றில் எந்த மனிதனின் வாழ்விலும் காண முடியாத அளவுக்கு கொள்கைவாதியாக இன்றளவும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மதீனாவுக்கு அகதியாய் வந்து, பிறகு மதீனாவின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்த சமயத்திலும் கூட அரசுப் பணத்தையோ மக்களின் காணிக்கைகளையோ எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தவில்லை.

”தன் சொந்த உழைப்பால் உண்ணுவதை விட உயர்ந்த உணவை எவரும் உண்ண முடியாது” என்று உழைப்பின் பெருமையைப் பறைசாற்றினார்கள் . (புகாரி)

இப்படிச் சொன்னவர்கள் தம் வாழ்க்தைத் தேவைக்காக உழைக்காமல் இருந்திருப்பார்களா?

”ஒரு மனிதன் யாசிப்பதை விட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது.” என்று கூறியவர்கள் (புகாரி) பிறரிடம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தியிருப்பார்களா?

உஹத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால் மூன்று நாட்களுக்கு மேல் என் மார்க்கத்திற்கு தேவையானதைத் தவிர அதில் எதுவுமே என்னிடம் எஞ்சியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்”

புகாரி, முஸ்லிம்)

என்று கூறியவர்கள் மதத்தின் மூலம் செல்வம் திரட்ட எண்ணியிருப்பார்களா?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும் மக்களும் என்னை நேசிக்கக் கூடிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உலகத்தை அளவுக்கதிகமாக நேசிக்காதே. அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களிடம் உள்ளவற்றைப்பெற வேண்டுமென விரும்பாதே! மக்கள் உன்னை விரும்புவார்கள்” என்று விடையளித்தார்கள்.

இப்னுமாஜா, தப்ரானி, ஹாகிம்)

மக்களை எதிர்பார்த்து வாழ்ந்தால் மக்களின் நேசம் கிடைக்காது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்திருக்க முடியுமா? அப்படி நடந்தால் அந்த மக்கள் தான் அவர்களை நேசித்திருப்பார்களா?

அப்படியானால் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படித் தான் நடந்தது? முழு நேரமும் மார்க்கப் பிரச்சாரத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் வயிற்றுத் தேவைக்கு என்ன தான் செய்தார்கள்?

மக்களிடம் யாசிக்கவும் கூடாது! அவர்கள் தரும் அன்பளிப்புக்காகக் காத்திருக்கவும் கூடாது. சொந்த உழைப்பிலேயே காலம் தள்ளவும் வேண்டும். சொந்த உழைப்பில் ஈடுபடும் போது பிரச்சாரத்திற்கும், ஆட்சியை நடத்துவதற்கும் இடையூறு ஏற்படவும் கூடாது. முழு நேரத்தையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியையும் கவனித்துக் கொண்டு சொந்த உழைப்பையும் செய்ய வேண்டிய நிலை நபியவர்களுடையது.

உலகத் தேவைக்காக உழைக்கும் போது ஆட்சியையும், மார்க்கத்தையும் மறந்தால் இரண்டுக்குமே அது ஆபத்தாகும். இரண்டையும் கவனித்துக் கொண்டு மக்களை நம்பியே வாழ்ந்தால் அது அவர்களின் தகுதிக்குக் கேடாகும்.

இதையெல்லாம் மிகவும் கவனமாகக் கருத்தில் கொண்டு மிகுந்த ஜாக்கிரதையுடன் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் குடும்பத்தையும், ஆட்சியையும், மார்க்கத்தையும் ஒரு சேர நிர்வகித்தார்கள்.

மதீனாவுக்குச் சென்றதும் நூறு ஆடுகளைக் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையைத் தம் வாழ்க்கைச் செலவுக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்காக மேய்ப்பவரையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள். இதற்கான சான்று வருமாறு :

நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். நமது ஆடு ஈன்றத ”கிடாய்க்” குட்டியா? பெட்டையா? என்றார்கள். அவர் ”கிடாய்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி ”நான் உமக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன அவற்றில் ஒரு ஆடு, குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாகப் பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம் என்று கூறினார்கள்.

லகீத் இப்னு ஸபுரா (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நூறு ஆடுகளைக் கொண்ட பண்ணையில் சராசரியாக மாதத்திற்கு எட்டு ஆடுகள் அதிகமாகும். நமது நாட்டு ஆடுகளைப் போலன்றி அதிக அளவு பால் தரக்கூடியதாகவும் அரபு நாட்டு ஆடுகள் இருந்தன. அன்றாடச் செலவுக்குப் போதுமான அளவுக்குப் பால் கிடைக்கும். மாதம் எட்டு ஆடுகள் லாபம் கிடைக்கும் இதை வைத்துத் தான் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

மூலதனமாகப் போட்ட நூறு ஆடுகள் குறையாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஐந்தாறு நாட்கொளுக்கொருமுறை ஒரு ஆட்டுக்குட்டி பிறந்தவுடன் பெரிய ஆடு ஒன்றை விற்று விடுவார்கள். அல்லது அறுத்து விடுவார்கள். இது தான் நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு உள்ள வாழ்க்கை.

ஐந்தாறு நாட்களுக்கு ஒரு ஆடு அல்லது அதன் விலை போதுமென்றாலும் பல மனைவியரைக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுக்கு இது எப்படிப் போதுமாகும்? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இந்தக் கேள்வி முற்றிலும் நியாயமான கேள்வியே.

நாம் நம்முடைய வாழ்க்கையைப் போல் நபியவர்களின் வாழ்வையும் பார்த்தால் இந்த ஐயம் எழுகின்றது. நபி அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. தமக்கு வருகின்ற வருவாயைக் கொண்டு எந்த அளவுக்கு வாழ்க்கை நடத்த இயலுமோ அந்த அளவுக்கு அவர்கள் தம் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள். அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கண்முன்னே கொண்டு வரும் சான்றுகளைத் தருகிறோம். அது போல் வாழ்க்கை நடத்தினால் நாமும் கூட பத்திற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்தை சமாளிக்க முடியும்.

”மக்கள் நல்ல செல்வ நிலையை அடைந்து விட்ட காலத்தில் நபியவர்கள் தமது வயிற்றை நிறப்புவதற்கு மட்டரகமான பேரீச்சம்பழம் கூட கிடைக்காமல் சில நாட்கள் சுருண்டு படுத்து விடுவதை நான் கண்டிருக்கிறேன்.” என நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறினார்கள்.

(முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிரார கோதுமை ரொட்டி உண்டது கிடையாது. நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இந்த நிலை தான்.

(ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக ஆக்கியதிலிருந்து மரணிக்கும் வரை சல்லடையைப் பர்த்ததே இல்லை. (அதாவது மாவைச் சலித்து மிருதுவானதைப் பயன்படுத்தியதே இல்லை) என்று ஸஹ்ல் (ரலி) குறிப்பிட்டார்கள். ”சலிக்காத கோதுமையை எப்படி உண்பீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ”கோதுமையைத் திருகையில் அரைப்போம். பிறகு வாயால் ஊதுவோம். பறக்க வேண்டியவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்து உண்போம்.” என்று விடையளித்தார்கள்.

”ஒரு மாதம் இரண்டு மாதங்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லங்களில் அடுப்பு மூட்டப்படாமலேயே சென்று விடும் என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது நான் “என் சிறிய அன்னையே! அப்படியானால் உங்கள் வாழ்க்கை எப்படித் தான் கழியும்? (எதைத் தான் உண்பீர்கள்?)  என்று கேட்டேன். ”பேரீச்சம் பழங்களும் தண்ணீரும் தான்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் தங்க நாணயத்தையோ, வெள்ளி நாணயத்தையோ, அடிமைகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றவை அவர்கள் சவாரி செய்த கோவேறுக் கழுதை அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வழிப்போக்கர்களுக்கு பயன்படும் விதமாக அவர்கள் தானமாக வழங்கிய நிலம் ஆகியவையே அவர்கள் விட்டுச் சென்றவையாகும். (புகாரி)

கடினமான ஒரு வேட்டியையும், கடினமான ஒரு போர்வையையும் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் காட்டி இவ்விரண்டு ஆடைகள் அணிந்த நிலையிலேயே நபி (ஸல்) மரணித்தார்கள் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்கள் ஆட்டுப் பண்ணை போதுமானது அல்லவா?

அப்படியும் போதாத நிலை ஏற்பட்டது உண்டு. அப்போதும் எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் கவச ஆடை 30 மரக்கால் கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. அதை மீட்காமலேயே மரணித்தார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

உயிரையும் தருவதற்குத் தயாரான உற்ற நண்பர்கள் பலரிருந்தும் அவர்களிடம் அடமானம் வைத்தால் அவர்கள் இலவசமாககத் தந்து விடுவார்களோ என்ற பயத்தில் தானோ என்னவோ ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருக்கின்றார்கள்.

மதத்தை வைத்து எதையும் அவர்கள் சம்பாதிக்கவே இல்லை. மதத்தைக் கூறிய பிறகு இருப்பதை இழந்தார்கள். முன்பை விட கஷ்டப்பட்டார்கள்.

ஆட்சியை வைத்தாவது சம்பாதித்ததுண்டா? என்றால் அதுவும் கிடையாது. மற்றவர்களை விட தமக்கும் தம் குடும்பத்துக்கும் அதிகமான நிபந்தனைகளை விதித்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு அரசுக்கு வந்த வருமானம் ”ஜகாத்” அடிப்படையில் வசூலிக்கப் படுபவையாகத் தான் இருந்தன. இந்த ”ஜகாத்” எனும் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்துக்கும் ”ஹராம்” (விலக்கப்பட்டது) என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். தம் குடும்பத்தினர் எவராவது அரசு நிதியிலிருந்து எதையும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்த முன்னேற்பாடாகக் கூட இதைக் கருதலாம்.

நபிகளின் பேரன் ஹுஸைன் (ரலி) ”ஜகாத்” வசூலிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டதைக் கண்ட நபிகளார் ”துப்பு! துப்பு!” என்று கூறி அதைத் துப்பச் செய்து விட்டு இது நமக்கு ஹலால் இல்லை” என்றும் கூறிவிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

உலக முடிவு நாள் வரைக்கும் அவர்களின் பரம்பரையினர் ஜகாத் நிதியைப் பெறக் கூடாது என்று கண்டிப்பாகத் தடை விதித்து விட்டார்கள்.

அரசுச் சொத்தை தமக்கு ஹராமாக்கிக் கொண்டது மட்டுமின்றி, தம் சொந்த உழைப்பால் திரட்டிய செல்வங்களை (ஆட்டு பண்ணை உட்பட) அரசுக்குச் சொந்தமாக்கி விட்டுச் சென்றார்கள்.

” நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது” என்பது அவர்களின் அமுத மொழி”.

(அஹ்மத், திர்மிதீ)

இதனால் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது.

அவர்களின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை அபூபக்கரிடம் கேட்ட போது நபிமார்களின் சொத்துக்களுக்கு எவருமே வாரிசாக முடியாது என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் தர மறுத்து ஏழைகளுக்கு அதைப் பொதுவுடைமையாக்கினார்கள்.

கேட்டாலே கண் கலங்கும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எவரும் வாழ்ந்து காட்ட முடியாத எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். முழு அரசுப் பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டால் கூட எவருமே ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நிலையில் அதில் கடுகளவையும் தன் மீது ஹராமாக்கி (விலக்கப்பட்டது)  கொண்டவர் தான் அண்ணலார் அவர்கள்.

நபியவர்களுக்கு இன்னொரு விதத்திலும் வருவாய் வந்ததுண்டு. அதாவது போர்க்களங்களில் வெற்றியடையும் போது வென்றவர்கள், தோற்றவர்கள் விட்டுச் சென்ற பொருளை எடுத்துக் கொள்வது உலகெங்கும் ஏற்கப்பட்ட வழக்கமாக இருந்தது.

அந்த அடிப்படையில் கிடைக்கும் பொருட்களை போரில் பங்கு கொண்ட வீரர்களுக்குப் பங்கிட்டு வழங்குவார்கள். நபியவர்களும் பல போர்க்களங்களில் நேரில் ஈடுபட்டதால் அவர்கள் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில சமயங்களில் நண்பர்கள் அவர்களாக வந்து அன்பளிப்புச் செய்வர். அதை நபியவர்கள் மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களும் திரும்ப அன்பளிப்புச் செய்வார்கள். இப்படி நண்பர்கள் அளிக்கும் அன்பளிப்புகள், போர்க்களங்களில் கிடைத்த பங்குகள், ஆட்டுப் பண்ணையின் மூலம் வரும் வருமானம் ஆகியவை மூலம் தான் நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

புரோகிதத்தின் மூலம் ஒரு சல்லிக்காசையும் அவர்கள் பெற்றதில்லை. அவ்வாறு பெற்று வந்த ஏனைய மதத்தின் புரோகிதர்களைக் கடுமையாகக் கண்டித்தே வந்தார்கள்.

ஆட்சித் தலைமையை ஏற்றபின் அரசாங்கப் பணத்தையோ, பொருட்களையோ, இன்ன பிற வசதிகளையோ அவர்கள் எள்ளவும் அனுபவிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

முடிவுரை

இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் நமது கவனத்திற்கு வந்த குற்றச்சாட்டுக்கள் இவை தாம். இவை தவிர இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக ஏற்கனவே தனி நூலை வெளியிட்டிருந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கும் தனி நூலை பதிலாக வெளியிட்டுள்ளோம்.

எஞ்சிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த நூலில் விளக்கமளித்துள்ளோம்.


இவை தவிர மேலும் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்தால் அதை நமது கவனத்தில் கொண்டு வருபவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்போம். அவற்றுக்கும் விளக்கம் தருவோம். உள்ளதை உள்ளபடி விளங்கி நடக்க நம் அனைவருக்கும் இறைவன் அருள்புரியட்டும்