May 1, 2020

அல்லாஹ் என்றால் யார்?

'அல்லாஹ்' என்ற சொல் அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏகஇறைவனை மட்டுமே குறிக்கும் அரபுமொழிச் சொல்லாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.


அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன் தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத்தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.


எனவே தான் தமிழ் மொழியில் உள்ள கடவுள், இறைவன், தெய்வம் போன்ற சொற்களை அல்லாஹ் என்பதற்குரிய மொழிபெயர்ப்பாக நாம் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இச்சொற்களை ஒரே இறைவனுக்கும், வணங்கப்படும் அனைத்துக்கும் பயன்படுத்துகின்றனர்.


ஒரு சிலையை அல்லது மதிக்கப்படும் மனிதனை தெய்வம் எனக் கூறும் வழக்கம் தமிழக மக்களிடம் உள்ளது. அல்லாஹ் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களும் கூட வணங்கப்படும் அனைத்துக்கும் பயன்படுத்தியதில்லை. எனவே அல்லாஹ் என்ற சொல் இடம் பெற்ற அத்தனை இடங்களிலும் அல்லாஹ் என்றே குறிப்பிட்டுள்ளோம்.


* அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை.


* அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை; அதனால் உடன் பிறப்புக்களும் இல்லை.


அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை.


அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.


தூக்கம், மறதி, அசதி, களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை.


எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை.


இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன் தான் அல்லாஹ்.