Mar 3, 2011

குடும்பத்தினருக்குச் சலுகை காட்டவில்லை

குடும்பத்தினருக்கு சலுகை காட்டவில்லை


அரசியல் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் அவர்கள் எவ்வளவு தான் நேர்மையாக நடக்க முயன்றாலும் அவர்கள் தமது குடும்பப் பாசத்தின் முன்னே தோற்றுப் போய் விடுகின்றனர்.


தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தரும் நெருக்கடியின் காரணமாக தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரும் தோற்று விடக்கூடிய இந்த இடத்திலும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் குடும்பப் பாசமோ, உறவினர்கள் மீது அவர்களுக்கு இருந்த அன்போ அவர்களைச் சிறிதும் தடம் புரளச் செய்ய இடம் தரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி). நபிகள் நாயகத்தின் ஒன்று விட்ட பெரிய தந்தை ரபீஆ என்பவர். இவ்விருவரும் ஒரு நாள் சந்தித்தனர். இவ்விருவரும் தத்தமது மகன்களுக்காக (அப்பாஸின் மகன் ஃபழ்லு, ரபீஆவின் மகன் அப்துல் முத்தப் ஆகியோருக்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேலை கேட்டு அனுப்ப முடிவு செய்தனர். ஸகாத்தை வசூலிக்கும் பணியில் இருவருக்கும் வேலை கேட்டு நபிகள் நாயகத்திடம் அனுப்புவது என்று முடிவு செய்தனர். இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையின் மகனும், மருமகனுமான அலீ (ரலி) வந்து 'வேலை கேட்பதற்காக நபிகள் நாயகத்திடம் இவ்விருவரையும் அனுப்பாதீர்கள்! நபிகள் நாயகம் அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்' என்று தடுத்தார். 'நபிகள் நாயகத்தின் மருமகன் என்ற உறவின் காரணமாகவும், எங்கள் மீது கொண்ட பொறாமையின் காரணமாகவுமே இதைத் தடுக்கிறீர்கள்' என்று அயிடம் ரபீஆ கூறினார். 'அப்படியானால் இருவரையும் நபிகள் நாயகத்திடம் வேலை கேட்டு அனுப்புங்கள்' என்று அலீ (ரலி) கூறினார். இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மனிதர்களிலேயே அதிகம் நன்மை செய்பவராகவும், உறவினர்களுக்கு அதிகம் உதவுபவராகவும் இருக்கிறீர்கள். எங்களுக்கோ திருமண வயதாகி விட்டது. எனவே ஸகாத் நிதியை வசூலிக்கும் பணியில் எங்களையும் நியமியுங்கள்! மற்றவர்கள் வசூலிப்பது போல் நாங்களும் வசூலித்துத் தருவோம். மற்றவர்களுக்குக் கிடைப்பது போல் எங்களுக்கும் கிடைக்கட்டும்' என்று முறையிட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஸைனப் அவர்கள் 'இவ்வாறு கோரிக்கை வைக்க வேண்டாம்' என்று சாடை காட்டினார்கள். நீண்ட நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் 'ஸகாத் என்பது மக்களின் அழுக்குகளாகும். அவை முஹம்மதின் குடும்பத்திற்குத் தகுதியானது அல்ல' என்று கூறினார்கள். பின்னர் இரண்டு நபித் தோழர்களை அழைத்து இவ்விருவருக்கும் பெண் கேட்டு மணமுடித்துக் கொடுத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல் : முஸ்லிம் 1784

ஸகாத் நிதியை, தாமோ, தம்முடைய குடும்பத்தினரோ சாப்பிடுவது பாவம் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்திருந்தார்கள்.

ஒரு பேரீச்சம் பழத்தைத் தமது பேரக் குழந்தை சாப்பிட்டதைக் கூட அவர்கள் கண்டித்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் எவருக்கும் அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் அரசுக் கருவூலத்திலிருந்து எதையும் கொடுக்க மாட்டார்கள்.

இதெல்லாம் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினருக்குத் தெரியும். ஆயினும் ஸகாத் நிதியை வசூலிக்கும் வேலையில் சேர்ந்து அந்த வேலைக்காக ஊதியம் பெறுவது தவறில்லை என்று கருதியதால் தான் இவ்வாறு அந்த வேலையைக் கேட்டு வந்தனர்.

ஆனால் அதற்கும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. திருமணம் செய்யக் கூட வசதியில்லை என்ற நியாயமான காரணத்திற்காக அவர்கள் வேலை வாய்ப்பைக் கேட்ட போதும் தமது குடும்பத்தார் என்ற காரணத்திற்காக மறுக்கிறார்கள்.
மற்றவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் கூட தமது குடும்பத்தினர் அனுபவிக்கக் கூடாது என்று அறிவித்து நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

பத்து வருட காலம் ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இது போன்ற பதவிகளைப் பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

நேர்மையான ஆட்சியாளர் என்று நற்பெயர் எடுத்தவர்கள் கூட தகுதியுடைய தமது குடும்பத்தினருக்குப் பதவிகளையும், வேலை வாய்ப்பையும் வழங்காமல் இருந்ததில்லை.

இந்த மாமனிதரோ தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்ற வேலைகளைக் கூட தரக் கூடாது என்பதை அடிப்படைக் கொள்கையாகவே வைத்திருந்தார்கள்.

'இவ்வூரும், இந்த மாதமும் எவ்வாறு புனிதமாக உள்ளதோ, அவ்வாறே உங்கள் உயிர்களும், உடமைகளும் புனிதமானவை. அறிந்து கொள்க! அறியாமைக் கால நடவடிக்கைகள் அனைத்தையும் என் காலுக்கடியில் மிதித்துப் புதைக்கிறேன். அறியாமைக் காலத்தில் நடந்த எல்லாக் கொலைகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுகின்றது. முதன் முதலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆவின் மகனுடைய கொலையை நான் மன்னிக்கிறேன். அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முதன் முதலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸின் வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் பேருரையில் பிரகடனம் செய்தார்கள்.
நூல் : முஸ்லிம் 2137

இந்தப் பிரகடனத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான பல பண்புகள் வெளிப்படுகின்றன.

மனித உயிர்களை மவாகக் கருதிய சமுதாயத்திற்கு வழிகாட்ட அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அற்பமான காரணங்களுக்குக் கூட அந்தச் சமுதாயம் மற்றவரின் உயிரைப் பறித்து வந்தது.

அது மட்டுமின்றி கொன்றவர்களைப் பழிவாங்க இயலாவிட்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று கொல்லப்பட்டவனது குடும்பத்தார் வெறி பிடித்து அலைந்தனர். தமது மக்களுக்கு இது குறித்து மரண சாசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தியாகங்களுக்குப் பின் அரபகத்துக்கு அதிபதியானார்கள்.

உயிர்கள் மட்டுமின்றி பிறர் உடமைகளுக்கும் அந்தச் சமுதாயத்தில் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வலிமையுள்ளவர் வலிமையற்றவரின் பொருளைச் சர்வ சாதாரணமாகப் பிடுங்கிக் கொள்வார்.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்ட பிரகடனத்தைச் செய்கிறார்கள்.

மக்கா என்ற நகரம் மட்டுமின்றி, மனிதனின் உயிர்களும், உடமைகளும் கூடப் புனிதமானவை எனப் பிரகடனம் செய்கிறார்கள். புனிதமான இடத்தில், ஊரில் எவ்வாறு அதன் புனிதத்தைப் பேணுவீர்களோ அவ்வாறே மற்றவரின் உயிரையும் புனிதமாகக் கருதிப் பேண வேண்டும்; மற்றவர்களில் பொருட்களையும் புனிதமாகக் கருத வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்கள். பிற மனிதர்களின் உயிரையும், உடமையையும் புனிதமானவை எனப் பிரகடனம் செய்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

இந்தப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்னர் எத்தனையோ கொலைகள் அச்சமுதாயத்தில் நிகழ்ந்துள்ளன. அக்கொலைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பழி வாங்க நினைப்பது இயல்பான ஒன்று தான்.
இனி மேல் கொலை செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது என்று கூறினால் பாதிக்கப்பட்டவர்கள் இதை ஏற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கும். ஏற்கனவே நடந்த கொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வை அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே நடந்த கொலைகளை மன்னித்து விடுங்கள் எனக் கூறினால் உமது குடும்பத்தில் யாரேனும் கொல்லப்பட்டால் இவ்வாறு கூறுவீரா? என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றலாம்.

இன்றைக்கு நமது நாட்டிலும், வேறு சில நாடுகளிலும் கொலையாளிகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இவ்வாறு மன்னிக்கும் போது 'இவரது மகன் கொல்லப்பட்டால் மன்னிப்பாரா?' என்று பாதிக்கப்பட்டவன் நினைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் 'கொலை செய்வது இன்று முதல் குற்றமாக்கப்படுகின்றது; இதற்கு முன் நடந்த கொலைகள் மன்னிக்கப்படுகின்றன' என்ற பிரகடனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யும் போது முதலில் தமது குடும்பத்தில் நடந்த கொலையை மன்னிக்கிறார்கள்.

ரபீஆ (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரர். அவரது மகனைத் தான் ஹுதைல்' என்ற கூட்டத்தார் கொலை செய்திருந்தனர். தம் சகோதரர் மகனை (தம்பியை அல்லது அண்ணனை) கொலை செய்தவர்களை முதலில் மன்னிப்பதாக அறிவிக்கிறார்கள். தமது குடும்பத்தார் அனைவரிடமும் இது பற்றிப் பேசி அவர்கள் அனைவரையும் மன்னிக்கச் செய்து தாமும் மன்னிக்கிறார்கள்.

தாம் கூறுவதை தமது குடும்பத்திருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்தப் பண்பின் காரணமாகவே அவர்கள் மாமனிதர் எனப்படுகிறார்கள்.
அது போல் வட்டி வாங்குவது இதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார்.

வட்டியைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.
'தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதலில் தள்ளுபடி செய்தார்கள்.

எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பிரகடனத்தில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது.

இன்றைக்குச் சட்டங்களை இயற்றுவோர் எதிரிகளைப் பழிவாங்கிட முன் தேதியிட்டு சட்டங்களை அமுல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நடந்த குற்றங்களைப் புதிதாக இயற்றப்படும் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது மாபெரும் அநீதி என்ற சாதாரண அறிவு கூட யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

தாம் வகுத்த எந்தச் சட்டத்தையும் தம்மிடமிருந்தும் தமது குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறினால் மற்றவர்களை விட கடுமையாக அவர்களைத் தண்டிப்பதும் நபிகள் நாயகத்தின் வழக்கம்.

ஸகாத் நிதியை வசூலிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அப்போது இப்னு ஜமீல் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகிய மூவர் ஸகாத் கொடுக்க மறுத்தனர். இது பற்றி நபிகள் நாயகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார். அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை வசதி படைத்தவராக ஆக்கினார்கள் என்பதற்காகவே ஸகாத் தர மறுக்கிறார். காலித் தனது கவச உடைகளையும், தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தவர். எனவே (அவரிடம் ஸகாத் கேட்டதன் மூலம்) அவருக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். அப்பாஸ் அல்லாஹ்வின் தூதராகிய எனது பெரிய தந்தையாக இருக்கிறார். அவர் தன் மீது கடமையான ஸகாத்தைத் தர வேண்டும். மேலும் அது போல் இன்னொரு மடங்கும் அவர் மீது உள்ளது' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1468

காலித் (ரலி) ஸகாத் தராமல் இருந்ததை நபிகள் நாயகம் மன்னிக்கிறார்கள். ஏனெனில் அதை விட அதிகமாகவே அவர் ஏற்கனவே கொடுத்துள்ளார். இப்னு ஜமீல் (ரலி) ஸகாத் கொடுக்க மறுப்பது தவறு தான் எனக் கூறுகிறார்கள். அதாவது அவரிடம் கட்டாயம் ஸகாத் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமது பெரிய தந்தையிடம் ஸகாத்தையும் வசூலிப்பதுடன் அதே அளவு அபராதமாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.


சட்டத்தை மதிக்காத மூவரில் தமது குடும்பத்தினருக்கு மட்டும் அபராதம் விதித்தன் மூலம் குடும்பப் பாசத்தை வென்று காட்டுகிறார்கள்.
 நன்றி :
நூல் : மாமனிதர் நபிகள் நாயகம்
எழுதியவர் : பீ.ஜைனுல் ஆபிதீன்