Oct 26, 2016

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 9

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 9


பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகைக்காக உளூச் செய்வது அவசியம் என்பதையும் அதற்கான ஒழுங்குகளையும், தண்ணீர் கிடைக்காவிட்டால் உளூவுக்குப் பகரமாக தயம்மும் செய்யலாம் என்பதையும், தயம்மும் செய்வதற்கான ஒழுங்குமுறைகளையும் இது வரை நாம் பார்த்தோம்.

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று திருக்குர்ஆனும் நபிவழியும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத பல காரியங்களை உளூவை நீக்கும் காரியங்கள் என்று தமிழக முஸ்லிம்களில் பலர் புரிந்து வைத்துள்ளனர். அதே போல் உளூவை நீக்குபவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில காரியங்கள் உளூவை நீக்காது எனவும் சிலர் விளங்கி வைத்துள்ளனர். எனவே உளூவை நீக்கும் காரியங்கள் யாவை என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அறிந்து கொள்வோம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் தொழுவதாக இருந்தால் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும்.

மலம் கழிப்பது உளூவை நீக்கும் என்பதை 4:43, 5:6 ஆகிய வசனங்களைச் சிந்திக்கும் போது விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:43)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கை களையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் 5:6)

மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்று இவ்விரு வசனங்கள் கூறுகின்றன. தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர் கழிப்பதும் உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.

காலுறை அணிந்தவர்கள் பயணிகளாக இருந்தால் மலம், சிறுநீர், தூக்கம் காரணமாக மூன்று நாட்கள் கால்களைக் கழுவத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்கள்: நஸயீ 126, 127, 158, 159, திர்மிதீ 89, 3458, 3459

மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், தூங்குதல் ஆகிய காரியங்கள் உளூவை நீக்கி விடும். அவ்வாறு நீக்குவதால் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் (ஈரக்கையால் தடவுதல்) செய்யலாம். மற்ற உறுப்புகளைக் கழுவி உளூச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்

மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.

"
ஹதஸ்' ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது "ஹள்ரமவ்த்' என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் "அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), "சப்தத்துடனோ அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்'' என்று விளக்கமளித்தார்கள்.

நூல்: புகாரி 135, 176

மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகிய மூன்றும் உளூவை நீக்கி விடும் என்பது ஆதாரப்பூர்வமாக இருப்பதுடன் எந்த அறிஞரும் இதில் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்

மலஜலம் கழிப்பது உளூவை நீக்குவது போல் உளூவை நீக்கும் வேறு காரியங்களும் உள்ளன. அவற்றை அறிவதற்கு முன்னால் மலஜலம் கழிப்பதன் ஒழுங்குகளை நாம் அறிந்து கொள்வோம்.

மறைவிடத்தில் மலஜலம் கழித்தல்

மலஜலம் கழிக்கும் போது உள்ளுறுப்புகளை மற்றவர்கள் பார்க்காதவாறு மறைவிடத்தில் கழிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தின் அருகில் நடந்து சென்ற போது இரண்டு மண்ணறைகளில் இருவர் வேதனை செய்யப்படும் சப்தத்தைக் கேட்டார்கள். "இவ்விருவரும் பெரும் குற்றம் செய்ததற்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோள் சொல்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள். பின்னர் ஒரு பேரீச்சை மட்டையைக் கொண்டு வரச் செய்து இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு மண்ணறையின் மீதும் ஒரு துண்டை வைத்தனர். "அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' என்று கேட்கப் பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இது காயும் வரை இவர்களின் வேதனை இலேசாக்கப் படலாம்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 216, 218, 1361, 1378, 6052, 6055

சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தால் கப்ரில் வேதனை செய்யப் படுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதால் மறைந்த நிலையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்.

ஆயினும் மலம் கழிக்கும் போது மறைக்கும் அளவுக்கு சிறுநீர் கழிக்கும் போது மறைக்கத் தேவையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும் கழிப்பிடம் சென்றேன். அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றால் தொலைவாகச் செல்வது வழக்கம்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி)

நூல்கள்: நஸயீ 16, 17 திர்மிதீ 20, அபூதாவூத் 1, இப்னுமாஜா 326

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் (தூரமாகச் சென்று மணல்) திட்டுக்கள் அல்லது பேரீச்சை மரங்களுக்குப் பின்னால் மறைவாக அமர்வதை விரும்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர்,

நூல்: முஸ்லிம் 517

மற்றவர்கள் தம்மைப் பார்க்காத வகையில் தூரமாகச் சென்று, மணல் திட்டுக்கள் மற்றும் மரங்களுக்குப் பின்னால் மறைவாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சிறுநீர் கழிக்கும் போது யாரும் பார்க்காதவாறு தூரமாகச் செல்ல மாட்டார்கள். தமது முன்புறத்தை மட்டும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் சிறுநீர் கழிக்கின்றார்கள் என்பதை மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நடந்து கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்கு முன்னால் அமைந்திருந்த குப்பை மேட்டுக்கு வந்து, நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். நான் அவர்களை விட்டு விலகலானேன். சைகை செய்து என்னை அருகில் வரச் செய்தார்கள். அவர்கள் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை அவர்களின் பின்புறமாக நான் நின்று கொண்டேன்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: புகாரி 225

கிப்லா திசையை இயன்ற வரை தவிர்த்தல்

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கக் கூடாது. கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),

நூல்: புகாரி 144, 394

கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமருங்கள் என்பது மதீனாவில் உள்ள மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப் பட்டதாகும். மதீனாவிலிருந்து வடக்கு திசையில் கிப்லா அமைந்திருப்பதால் வடக்கு தெற்காக அமராமல் கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். நமது நாட்டைப் பொறுத்த வரை மேற்குத் திசையில் அல்லது வடமேற்குத் திசையில் கிப்லா அமைந்திருப்பதால் நாம் வடக்கு தெற்காகத் தான் அமர வேண்டும்.

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் இந்தத் தடை திறந்த வெளியில் தான். கட்டடத்திற்குள் கிப்லாவை நோக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

மலஜலம் கழிக்கும் போது கிப்லாவையோ, பைத்துல் முகத்தைஸையோ நோக்காதே என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் எனது வீட்டின் முகட்டின் மீது ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவு செய்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 145, 149

நான் (எனது சகோதரியும் நபிகள் நாயகத்தின் மனைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 148, 3102

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிப்பதைத் தடை செய்திருந்தார்கள். அவர்கள் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் அதை முன்னோக்கியதை நான் பார்த்திருக்கின்றேன் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 14343

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததாக இவர் கூறுவது கட்டடத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும் என்று கருதினால் இப்னு உமருடைய அறிவிப்பும் இவரது அறிவிப்பும் ஒத்துப் போகின்றது.

கட்டடத்திற்குள் மலஜலம் கழிப்பதாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கத் தடை ஏதும் இல்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதற்கு மாற்றமாக அவர்களின் செயல் அமைந்திருந்தால் அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர செயலைப் பின்பற்றக் கூடாது என்பது கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட விதியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தடை செய்துள்ளதால் நாம் மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கக் கூடாது. அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்ததற்கு அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்கள் இருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயத்தையும் புறக்கணிக்காமல் முடிவு செய்வதற்கும் வழி இருக்கின்றது.

*
திறந்த வெளியாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை முன்னோக்கவும் பின்னால் ஆக்கவும் கூடாது.

*
கட்டடமாக இருந்தால் அதில் கிப்லாவை நோக்காது இருக்க வழி இருந்தால் அப்போதும் கிப்லாவை நோக்கக் கூடாது.

*
கட்டடத்தில் கிப்லாவை நோக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்குவது குற்றமில்லை.

இப்படி முடிவு செய்தால் நபி (ஸல்) அவர்கள் தாம் இட்ட கட்டளையை தாமே ஏன் மீறினார்கள் என்பதற்கும் நமக்கு விடை கிடைக்கும். கிப்லாவை முன்னோக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை அங்கே இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு இருந்திருப்பார்கள் என்று விளக்கம் அளிக்க இடம் உண்டு.

பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கிழக்கு மேற்கில் அமைக்கப் பட்டிருந்தால் அங்கே நம்மால் வடக்கு தெற்காக அமர முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அது குற்றமில்லை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயலை ஆதாரமாகக் கொள்ளலாம்.

நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்காதீர்கள். அதைப் பின்னோக்கவும் செய்யாதீர்கள். கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தனர். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம். எனவே சற்றே சாய்வாக அமர்ந்து (மலம் கழித்து விட்டு) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்வோம் என்று அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 394

இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நம்மால் இயன்ற வரை கிப்லாவை நோக்கி மலம் கழிக்காமல் இருக்க முயல வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

வீட்டில் கிழக்கு மேற்காக கழிப்பிடம் அமைப்பதற்குத் தான் வசதி இருக்கின்றது என்றால் - அல்லது அமைக்கப் பட்ட கழிப்பிடங்களில் நாம் மலஜலம் கழிப்பதாக இருந்தால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டும் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ குற்றமாகாது.

வலது கையைத் தவிர்த்தல்

சிறுநீர் கழிக்கும் போது, அல்லது மலஜலம் கழித்து சுத்தம் செய்யும் போது அதற்கு இடது கையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது உறுப்பை வலது கையால் பிடிக்க வேண்டாம். வலது கையால் சுத்தமும் செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்: புகாரி 153, 154, 5630

தேங்கிய நீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 239

தேங்கி நிற்கும் தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கோ, உளூச் செய்வதற்கோ பயன்படக் கூடியதாக இருந்தால் அதில் சிறுநீர் கழிக்கலாகாது. வெறும் சாக்கடை நீராக இருந்தால் அதில் சிறுநீர் கழிப்பது தவறில்லை. "சிறுநீர் கழித்து விட்டு அதில் குளிக்கவும் வேண்டாம்'' என்ற சொற்றொடரிலிருந்து இதை அறியலாம்.

எனவே குளம், குட்டை, கண்மாய் மற்றும் ஏரிகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

புற்றுகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது

எறும்புகள், பாம்புகள், கரையான்கள் மற்றும் இது போன்ற உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் கழிக்கக் கூடாது. நஸயீ 34, அபூதாவூத் 27, அஹ்மத் 19847 ஆகிய ஹதீஸ்களில் இந்தத் தடையைக் காணலாம்.

மலஜலம் கழிக்கும் போது பேசக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் ஸலாம் கூறினார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறவில்லை. சிறுநீர் கழித்து விட்டு ஒரு சுவற்றுக்கு அருகில் நின்று தயம்மும் செய்தார்கள். பின்னர் அவருக்குப் பதில் கூறினார்கள். (நூல்: புகாரி 337)

பதில் ஸலாம் கூறுவதை தவிர்த்ததற்கு நபி (ஸல்) அவர்கள் உளூவுடன் இல்லாமல் இருந்தது தான் காரணம் என்றாலும் சிறுநீர் கழிக்கும் போதே, "சற்றுப் பொறு! தயம்மும் செய்து விட்டுப் பதில் கூறுகின்றேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க முடியும். அவ்வாறு கூறாததிலிருந்து. அவர்கள் அவருடன் பேசுவதைத் தவிர்க்கின்றார்கள் என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குப்பை மேட்டுக்கு அருகில் சிறுநீர் கழித்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அதில் ஹுதைஃபா (ரலி) அவர்களை அருகே வரும்படி சைகையால் தான் அழைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பேசுவதைத் தவிர்ப்பது தான் நபிவழியாகும்.

தலையை மறைத்தல்?

மலஜலம் கழிக்கும் போது தலையை மறைப்பது சுன்னத் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகின்றனர். இது எவ்வித ஆதாரமும் இல்லாத கட்டுக் கதையாகும்.

ஆண்களோ, பெண்களோ யாராயினும் மலஜலம் கழிப்பதற்காக தலையை மறைக்க வேண்டியதில்லை. அப்படி எந்தக் கட்டளையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பிக்கவில்லை.

மார்க்க சம்பந்தமான எழுத்துக்களை அப்புறப்படுத்துதல்?

இறைவனின் திருநாமம், திருக்குர்ஆன் வசனங்கள் போன்றவை நம்மிடம் இருந்தால் அதை அப்புறப் படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை.

"
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று பொறித்த மோதிரம் ஒன்று இருந்தது. கழிப்பிடம் செல்லும் போது அதைக் கழற்றுவார்கள்'' என்ற கருத்துப் பட சில ஹதீஸ்கள் உள்ளன.

ஹம்மாம் என்பார் ஸுஹ்ரியிடமிருந்து அறிவிப்பதாக அமைந்த ஹதீஸ் அபூதாவூத் 18, திர்மிதீ 1668, நஸயீ 5118, இப்னுமாஜா 299 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று அபூதாவூத், நஸயீ ஆகியோர் குறிப்பிடுகின்றனர். ஹம்மாம் என்பார் ஸுஹ்ரியிடமிருந்து எதையும் செவியுறவில்லை என்பதே இதற்குக் காரணம்.

ஹம்மாம் அல்லாத மற்றொரு வழியிலும் இது அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் முதல் அறிவிப்பாளராக ஸுஹ்ரி இடம் பெறுகின்றார். இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இது ஏற்கத்தக்க ஆதாரமாகாது. நபிகள் நாயகத்தை நேரில் பார்த்த நபித்தோழர் முதல் அறிவிப்பாளராக இருந்தால் தான் எந்த ஹதீசும் ஏற்கப் படும்.

மலஜலம் கழிக்கச் செல்லும் போது கூற வேண்டியவை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும் போது,

???

"
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி வல் கபாயிஸி'' என்று கூறுவார்கள்.

நூல்: புகாரி 142, 6322

கழிப்பிடத்திலிருந்து வெளியே வரும் போது,

???

"
குஃப்ரானக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: நஸயீ 28, அஹ்மத் 24063

நடைபாதையில் மலஜலம் கழிக்கக் கூடாது

சாபத்திற்குரிய இரண்டு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சாபத்திற்குரிய இரண்டு காரியங்கள் யாவை என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "மனிதர்கள் நடக்கும் பாதையிலும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்தல்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 397)

நடைபாதையில் மட்டுமின்றி பொதுமக்களுக்குப் பயன்படும் எந்த இடத்திலும் மலஜலம் கழிக்கக் கூடாது.

தண்ணீரால் சுத்தம் செய்தல்

அன்றைய அரபுகள் மலம் கழித்த பின் பெரும்பாலும் தண்ணீரால் சுத்தம் செய்ய மாட்டார்கள். சிறு கற்களால் துடைத்துப் போட்டு விட்டுச் செல்வார்கள். அரிசியை உணவாக உட்கொள்ளும் நமக்கு இது ஆச்சரியமாகவும், அருவருப்பாகவும் தோன்றலாம். கோதுமையையே உணவாக உட்கொள்பவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது.

இதைப் புரிந்து கொள்ள உதாரணம் கூறுவதென்றால் ஆடுகள் மற்றும் மாடுகள் மலம் கழிப்பதை உதாரணமாகக் கூறலாம். மாடுகள் சாணி இளகியதாகவும் பரவக் கூடியதாகவும் இருக்கும். ஆடுகள் புளுக்கைகளைத் தான் வெளிப்படுத்தும். அவ்வாறு வெளிப்படுத்திய பின் மலம் கழித்த எந்த அறிகுறியும் இருக்காது.

அரிசியை மட்டும் உணவாக உட்கொள்பவர்களுக்கும், கோதுமையை மட்டும் உணவாக உட்கொள்பவர்களுக்கும் இந்த அளவுக்கு வித்தியாசம் உள்ளது.

அன்றைய அரபுகள் மலம் கழித்த பின் கழுவுவதில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் எப்போதும் மலம் கழித்து விட்டுக் கழுவுபவர்களாக இருந்தார்கள்.

புகாரி 150, 152, 217 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

தண்ணீரே கிடைக்காத போது மிகச் சில சந்தர்ப்பங்களில் அன்றைய வழக்கப்படி கற்களாலும் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றனர். மூன்று கற்களை எடுத்து வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். இரண்டு கற்கள் தான் எனக்குக் கிடைத்தன. மூன்றாவதைத் தேடினேன். கிடைக்கவில்லை. எனவே ஒரு விட்டையையும் எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் இரு கற்களை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டையை எறிந்து விட்டனர். இது அசுத்தம் எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 156

உங்களில் எவரும் கற்களால் சுத்தம் செய்வதாக இருந்தால் மூன்று கற்களுக்குக் குறைவாக சுத்தம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 386)

மலம் கழித்த பின் கற்களால் துடைத்துப் போடுவதால் சுத்தமாகி விடும் என்ற நிலையில் உள்ளவர்கள் அவ்வாறு செய்து கொள்ளலாம். மேலை நாடுகளில் பேப்பரால் துடைத்துப் போடுவது மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

அவ்வாறு சுத்தமாகாது என்ற நிலையில் உள்ளவர்கள் தண்ணீரைப் பயன்படுத்திக் கழுவிக் கொள்வது தான் நல்லது.

சிறுநீர் கழிப்பதற்காக பள்ளிவாசல்களில் "டேலாக் கட்டி' என்ற சிறு கற்களைத் தயார் செய்து போட்டிருப்பார்கள். சிறுநீர் கழித்தவுடன் அந்தக் கல்லை இடது கையால் மர்மஸ்தானத்தில் ஒத்திக் கொண்டு நடைபோடுவார்கள். இது சுன்னத் என்றும் கூறுவார்கள்.

கற்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் என்பது மலம் கழிப்பதற்குரியது தான்.

உங்களில் ஒருவர் மலம் கழிக்கும் போது (தகவ்வத) என்ற சொல்லைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று கற்களால் சுத்தம் செய்யச் சொன்னார்கள். (நூல்: தப்ரானியின் அவ்ஸத் 1696)

எனவே மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வதற்குத் தான் கற்களைப் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீர் கழித்து விட்டு இடது கையை உள்ளே விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் நடை போட்டதில்லை. இது மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கண்டு பிடித்து நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக் கட்டி விட்டனர்.

சிறுநீர் கழித்த பின் அதையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுளளனர்.

கப்ரில் வேதனை செய்யப் படும் ஹதீஸில், முஸ்லிமில் இடம் பெறும் அறிவிப்பில் (439) ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாதவராக இருந்தார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே சிறுநீர் கழித்தவுடன் ஒரு துளியும் ஆடையில் ஒட்டிக் கொள்ளாத வகையில் மண், பேப்பர், சிறு மண்ணாங்கட்டி போன்றவற்றால் உறிஞ்சச் செய்து விட்டு எடுத்தால் அதுவே போதுமாகும். (தண்ணீர் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்)

இடது கையால் பிடித்துக் கொண்டு நடை போடவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாரேனும் கூறினால் அதை நம்பாதீர்கள். ஏனெனில் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் வழக்கம் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: திர்மிதீ 12, நஸயீ 29, இப்னுமாஜா 303

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் உட்கார்ந்தே சிறுநீர் கழித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆயினும் மிகச் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளனர்.

புகாரி 224, 2471 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய புகாரி 225வது ஹதீஸில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குப்பை மேட்டுக்கு வந்து நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

குப்பை மேடானது உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. அங்கே உட்கார வழியில்லாததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர் என்பதை விளங்கலாம்.

சாக்கடைகள் தேங்கியுள்ள இடம், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான சிறுநீர் கழிப்பிடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது குற்றமாகாது என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

தவறான எண்ணங்களைக் கண்டு கொள்ள வேண்டாம்

காற்றுப் பிரிதல், சிறுநீர் கழித்தல் போன்றவை உளூவை நீக்கும் என்பதை முன்னரே கண்டோம்.

சிலருக்கு காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 137, 177, 2056

வீண் சந்தேகத்தின் காரணமாக உளூ நீங்கி விட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை.

மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் தவிர வேறு எந்தக் காரியங்கள் உளூவை நீக்கும் என்பதை aஅடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் காணலாம். 

(EGATHUVAM JAN 2004)