இணை கற்பித்தல் தொடர்: 15 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
இறைநேசர்கள் என்றால் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது.
அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தச் சோதனையிலிருந்தும் காப்பாற்றி விடலாம்; நாம் தவறு செய்து விட்டால் கூட அல்லாஹ்விடம் அவர் பரிந்து பேசி, நமக்கு சொர்க்கத்தை வாங்கித் தந்து விடுவார் என்றெல்லாம் மக்கள்
நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இறைநேசருக்கெல்லாம் பெரிய இறைநேசரான நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதிகாரம் என்ன? என்பதைத் தெளிவாக விளக்கக்கூடிய சம்பவம் உஹதுப் போரில் நடந்த
சம்பவம். அந்த உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள்
செய்த ஒரு செயலை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.
வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, "நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி
பெற இயலும்?''
என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். ஆனால் நடந்தது என்ன? அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டான்.
மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில்
பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.
உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது, எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை.
அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி
இழைத்தவர்கள். (3:128) என்ற வசனம் இறங்கியது
இந்தச் சம்பவம் முஸ்லிமில் 3346வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை யாரையும் சபிப்பதற்காகச்
சொல்லவில்லை. தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையைத் தாங்க முடியாமல் இந்த வார்த்தையைச்
சொல்லி விடுகிறார்கள். ஆனாலும் அல்லாஹ் இதனை அனுமதிக்கவில்லை.
முஹம்மது, என்னுடைய செய்தியை எடுத்துச்
சொல்பவராக இருந்தாலும் சரி தான், எனக்கு விருப்பமானவராக இருந்தாலும்
சரிதான். என்னுடைய அதிகாரத்தில் யாரும் பங்காளியாக - கூட்டாளியாக முடியாது. எதிரிகளைத்
தோற்கடிப்பதா?
வெற்றி பெற வைப்பதா என்பதைத் தீர்மானிப்பது உம்முடைய கையில்
இருக்கிறதா?
அவர்கள் உம்மை அடித்துக் காயப்படுத்தியதால் அவர்கள் தோற்றுவிடுவார்கள்
என்பதை நீர் தீர்மானிக்கக் கூடியவரா? என்று அல்லாஹ்
கடுமையாகக் கண்டிப்பதை நாம் பார்க்கிறோம்.
இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தின் தன்மையை
அல்லாஹ் பார்க்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான்.
"இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?'' என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி
பெற வைப்பதும்,
தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையிடலாம் என்று
உணர்த்திடவே "அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' எனக் கூறுகிறான்.
நம்முடைய நேசராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே!
அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் விட்டுவிடவில்லை.
எந்த நேரத்திலும் அடிமைகள், அவர்களின் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத்
தான் பேச வேண்டுமே தவிர அல்லாஹ்வுக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத்
தருகிறான்.
என்னுடைய அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் கிடையாது. நான்
நினைத்தால் அவர்களுக்கு நேர்வழியை வழங்கி அவர்களை மன்னிப்பேன். அவர்களைத் தண்டிப்பதும்
அவர்களை மன்னித்து விடுவதும் என்னுடைய கையில் உள்ளது. உம்மை அடித்ததற்காக நீர் என்னிடம்
பாதுகாப்பு தேடியிருக்கலாம்; உதவி தேடியிருக்கலாம். அவ்வாறு
இல்லாமல் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று சொல்கின்ற அதிகாரத்தை உமக்கு வழங்கவில்லை
என்று கடுமையாகக் கண்டிக்கிறான்.
இதுபோன்ற வார்த்தைகளைக் கூட சொல்லக்கூடாது என்று தூதரையே இறைவன்
கண்டித்திருக்கும் போது, இந்த அவ்லியா குழந்தையைத் தருவார், செல்வத்தைத் தருவார், நமது பிரச்சனைகளையெல்லாம்
தீர்ப்பார்,
நோய்களைக் குணப்படுத்துவார், நிம்மதியைத்
தருவார் என்று நாம் எப்படி சொல்ல முடியும். இது அவனுடைய அதிகாரத்தில் நாம் தலையிடுவதாக
இல்லையா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே இந்த ஆற்றலை, அதிகாரத்தைக் கொடுக்காத போது, நாம்
யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள் என்று நினைத்திருக்கிறோமோ
அவர்களுக்கு எப்படிக் கொடுப்பான்? நபி (ஸல்) அவர்களுடைய கால் தூசுக்குச்
சமமாகாத இந்த அவ்லியாக்களுக்கு எப்படி தனது அதிகாரத்தில் பங்கு கொடுப்பான்?
நபிகள் நாயகம் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்த விதத்திலும் சமமாகாத, இறந்தவர்களிடம் நாம் நமது தேவைகளைக் கேட்கிறோம். நேர்ச்சை செய்கிறோம்.
மன அமைதிக்காக அங்கேயே படுத்து உறங்குகின்றோம். அவர்களுடைய அடக்கத்தலங்களை கஅபாவை தவாஃப்
செய்வது போன்று சுற்றி சுற்றி வருகிறோம்.
கோயில்களில் தெய்வங்களைத் தேர்களில் வைத்து ஊர்வலம் வருவதைப்
போல, நாமும் சந்தனக்கூட்டை வைத்துக் கொண்டு விழா எடுத்து வருகின்றோம்.
கடவுளாக அவர்களை நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் சிந்திக்க வேண்டாமா? நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வார்த்தையைச் சொல்வதற்கே அனுமதிக்கவில்லை எனும் போது, நாம் ஒருவரைப் பார்த்து, இவர் அவ்லியா
என்றோ, அவர் நமக்கு நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றோ சொல்வதற்கு
நமக்கு அல்லாஹ் அனுமதிப்பானா? அதனைச் சகித்துக் கொள்வானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நேர்வழிப்படுத்தும் அதிகாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்
போது அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் தான்.
நபிகளாரை எடுத்து வளர்த்ததும் அவர் தான். நபிகளார், தாயின்
வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தந்தை இறந்து விடுகின்றார்கள். எட்டு வயதில் தாயும்
இறந்து விடுகின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனாதையாக ஆனவுடன் அவர்கள் பாட்டனார்
அப்துல் முத்தலிபுடைய பராமரிப்பில் தான் வளர்ந்தார்கள். அதற்குப் பிறகு அபூதாலிப் அவர்கள்
நபிகள் நாயகத்தைத் தம்முடைய பராமரிப்பில் எடுத்து வளர்க்கிறார்கள். இப்படி அவர்களை
வளர்த்து ஆளாக்கி, வியாபாரத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்களை செல்வந்தராக ஆக்கி, நல்ல
நிலைக்குக் கொண்டு வந்தவர் தான் அபூதாலிப்.
அந்தச் சமூகத்தில் நபிகளாருடைய குலம் தான் மிகப் பெரிய அந்தஸ்து
உடையது. குரைஷிக் குலத்தினர் தான் மிக உயர்ந்த ஜாதியினராக - அந்தஸ்து உடையவர்களாகக்
கருதப்பட்டனர். அந்தக் குலத்தின் முக்கியமான பிரமுகராக அபூதாலிப் அவர்கள் இருந்ததால்
நபிகளார் மீது யாரும் கை வைக்கவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கும் வரை, நபியவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை மட்டுமே மக்கா காஃபிர்கள்
வேதனை செய்தார்கள்; துன்புறுத்தினார்கள். ஆனால்
நபியவர்கள் மீது கை வைப்பதற்குப் பயந்தார்கள்.
அபூதாலிப் மரணமடைந்த பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் மீது கை வைக்கத்
துணிந்தார்கள்;
தைரியம் பெற்றார்கள்; அவர்களை அடிக்கத்
திட்டமிட்டார்கள். அந்த அளவுக்கு அபூதாலிபிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்றிக்
கடன்பட்டிருந்தார்கள்.
மரண வேளையில், கட்டிலில்
படுத்த படுக்கையாக அபூதாலிப் கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம்
அறிவுரை சொல்வதற்காக வருகிறார்கள். அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு "நீங்கள்
லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக சிபாரிசு
செய்கிறேன். நீங்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நான் ஏதாவது அல்லாஹ்விடத்தில்
உங்களுக்காகப் பரிந்து பேச முடியும். இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்
நான் அவனிடத்தில் வாய் திறக்க முடியாது' என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களுக்கு அருகில்
நின்று கொண்டிருந்த அபூஜஹ்ல், அபூதாலிபே! உன்னுடைய அப்பன் பாட்டன்மார்கள் இருந்த கொள்கையை
விட்டு விட்டுப் புதிய கொள்கைக்குப் போய்விடப் போகிறீரா? முன்னோர்களுடைய மார்க்கம் வேண்டுமா? அல்லது பிள்ளைகளுடைய மார்க்கம் வேண்டுமா? என்று சொல்லி அவருடைய மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.
கடைசி வரைக்கும் நபிகளாருடைய பேச்சு எடுபடாமல் போனது. இறுதியில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
"என்னை வற்புறுத்தாதே! நான் என்னுடைய அப்பன் பாட்டன்மார்களுடைய மார்க்கத்திலேயே
இருந்து விடுகிறேன்' என்று சொல்லிவிடுகிறார். இறுதியில்
இணைவைத்த நிலையிலேயே இறந்து விடுகிறார். நபியவர்களுக்கு இவ்வளவு பக்கபலமாக இருந்தும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தும் சத்திய மார்க்கம் அவருடைய உள்ளத்தைச்
சென்றடையவில்லை. இதோ அந்தச் சம்பவம்:
முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்)
அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! "லா இலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லி விட்டால்
அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம்
நான் வாதாடுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது
அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், "அபூதாலிபே!
(பெரியவர்,
உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப்
போகிறீர்கள்?''
என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச
இறுதியில் அவர்,
"(என் இறப்பு என் தந்தை) அப்துல்
முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)'' என்று அவர்கüடம் சொன்னார். எனவே, நபி (ஸல்)
அவர்கள், "நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை
விதிக்கப்படும் வரை'' என்று சொன்னார்கள். அப்போது
தான், "இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெüவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும்
உரிமையில்லை''
என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி
விட முடியாது''
என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும்
அருளப்பட்டன.
நூல்: புகாரி 3884
அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே இறந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாம் யார் யாருக்கெல்லாமோ இஸ்லாத்தை எடுத்துரைத்தோம்.
அவர்களெல்லாம் இஸ்லாத்தில் நுழைந்து விட்டார்கள். ஆனால் நம்முடன் நகமும் சதையுமாக இருந்து, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து, நமக்கு
எல்லா உதவிகளையும் செய்த, நம்முடைய எல்லா விஷயங்களையும்
அறிந்த நம்முடைய பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று கவலை அடைந்தார்கள்.
அந்த நேரத்தில் தான் இந்த வசனத்தை (28:56) அல்லாஹ் இறக்குகிறான். நீர் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறீர்.
உம்முடைய பணி எடுத்துச் சொல்வது மட்டும் தான். உள்ளத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது
உம்முடைய பணி அல்ல. நீர் சொன்னதால் மட்டுமே அவர் நேர்வழிக்கு வந்து விடுவாரா? நான் நாடியவருக்கு நேர்வழி காட்டுவேன். உம்முடைய பெரிய தந்தையாக
இருக்கலாம். அதற்காக அவருக்கு நேர்வழி காட்டிவிட மாட்டேன். அதே நேரத்தில் உம்மைக் கொல்வதற்கு
ஒருவன் வருவான். அவனுக்கு நான் நேர்வழி காட்டுவேன். ஒருவரை நேர்வழிக்குக் கொண்டு வருவதும், அவரை வழிகேட்டில் விடுவதும் என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது.
இதற்காக நீர் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று அல்லாஹ்
கூறுகின்றான்.
அடுத்ததாக, நான் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில்
பாவமன்னிப்பு கோருவேன் என்று தம்முடைய பெரிய தந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி
கொடுத்தார்களே அதனையும் கண்டித்து அல்லாஹ் வசனத்தை (9:113) இறக்குகிறான். இணை வைத்தவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடக்கூடாது
என்று நான் தடுத்து வைத்திருக்கிறேன். இப்ராஹீம் நபியே அவருடைய தந்தைக்காகப் பாவமன்னிப்பு
தேடிய போது அதைத் தடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது நீர் எவ்வாறு உம்முடைய
பெரிய தந்தைக்காகப் பாவமன்னிப்பு தேடுவதாக வாக்குறுதி கொடுக்கலாம்? என்று இறைவன் கூறுகிறான்.
எதற்காக அல்லாஹ் இந்தச் சம்பவத்தை நமக்குச் சொல்கிறான்? ஏன் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறான்? எதற்காக இந்தச் செய்தியை வரலாற்று நூல்களில் அல்லாஹ் பாதுகாத்து
வைத்திருக்கிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? நபியாக
இருந்தாலும் அவரால் ஒருவனுக்கு நேர்வழி காட்ட முடியாது. இறைவனால் மட்டுமே நேர்வழி காட்ட
முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்.
ஷெய்கு பார்த்தாலே நேர்வழி கிடைக்குமா?
இன்றைக்கு ஷெய்கு, முரீது என்று
சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர் பார்த்தாலே நமக்கு நேர்வழி கிடைத்து விடும்
என்று சொல்கிறார்கள். ஷெய்கு நமக்கு அறிவுரை சொன்னால் போதும்; அதைக் கேட்டாலே நம்முடைய உள்ளத்தில் நேரடியாகப் போய் பதிந்து, நாம் நேர்வழி பெற்று விடுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெரிய தந்தையிடம் எவ்வளவோ
சொல்லிப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பிரச்சாரம் அபூதாலிபின் உள்ளத்தில் பதிந்து நேர்வழி
பெற்றாரா? அவர்களுடைய பிரச்சாரம் அவருடைய காது வரைக்கும் போனதே தவிர அவருடைய
உள்ளத்தைச் சென்றடையவில்லை. ஆனால் இவர்கள் ஷெய்கு எனப்படுபவர்களை நபிமார்களுக்கும்
மேலாக சக்தி வாய்ந்தவர்களாக நினைக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில்
இருந்த வரைக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி இல்லை.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருந்தார்கள். பெரிய
அளவில் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரவில்லை.
நபிகளார் மக்காவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு மதீனாவிற்குச்
சென்றார்கள். அப்போது தான் மக்காவிலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள்.
ஆனால் மக்காவில் அப்போது இஸ்லாத்தைச் சொல்வதற்கு நபியவர்கள் அங்கு இல்லை. நபியவர்கள்
அங்கு இருக்கும் போது பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை
விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொண்டவர்களும் ஹிஜ்ரத் செய்து சென்று
விட்டார்கள். ஒரு சிலர் தான் மிஞ்சியிருந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் மக்காவில்
இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகமானது. அல்லாஹ் நினைத்தால் யாரையும் இஸ்லாத்திற்குக்
கொண்டு வந்து சேர்த்து விடுவான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் தான் இஸ்லாத்திற்கு அதிகமான
மக்கள் வருவார்கள். நபிகளார் ஊரை விட்டுச் சென்றதால் மக்காவில் உள்ளவர்கள் இஸ்லாத்தை
ஏற்காமல் காஃபிராகவே மரணித்து விடுவார்கள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் நபிகளார்
மக்காவில் இல்லாத போதே அந்த மக்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
எந்த அளவுக்கென்றால் அல்லாஹ் தன்னுடைய செய்தியை அவர்களுடைய காதுகளிலும் கொண்டு போய்ச்
சேர்த்து, அவர்களுடைய உள்ளத்திலும் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டான். அதனால்
தான் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது இஸ்லாம் வளர்ந்ததை விட அவர்கள் இல்லாத
போது மிக வேகமாக வளர்ந்தது. ஆக நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என்பது
இதிலிருந்து விளங்குகிறதா? இல்லையா?
அல்லாஹ்வுடைய தூதரை நேரடியாகப் பார்த்து, அவர்களுடைய பிரச்சாரத்தை நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த
மக்கள் இஸ்லாத்திற்கு வரவில்லை எனும் போது, ஷெய்கு, ஆன்மீகு குரு என்றெல்லாம் ஊரை ஏமாற்றுபவர்கள் பார்த்தவுடன் ஹிதாயத்
கிடைத்து விடும் என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது விளங்கவில்லையா?
யாரும் யாருக்கும் நேர்வழி காட்டிவிட முடியாது. இன்றைக்கு நாமும்
இணை வைப்பு,
பித்அத் போன்றவற்றிற்கு எதிராக எவ்வளவோ அடுக்கடுக்கான ஆதாரங்களை
வைக்கிறோம். குர்ஆனையே அவர்களிடமும் கொண்டு காட்டுகிறோம். எல்லோரும் திருந்துகின்றார்களா? நேர்வழி பெறுகிறார்களா? அல்லாஹ் சிலருடைய
உள்ளங்களில் முத்திரை வைத்துவிட்டான். பிறகு எப்படி அவர்கள் திருந்துவார்கள்?
இன்னும் சிலர் நம்முடைய பிரச்சாரத்தைக் கேட்டு, "குர்ஆன் சொல்வதை நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். குர்ஆன் ஆயத்துகளை
இவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் அதன்படி நடக்கத் தான் வேண்டும்' என்று தங்களை திருத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ்
நேர்வழி காட்டுகிறான்.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி, வேறு எந்த நபிக்கும் இந்த அதிகாரம், அதாவது ஒருவனை நேர்வழிப்படுத்தக்கூடிய அதிகாரம் இல்லை என்பது
இதன் மூலம் தெளிவாகின்றது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM SEP 2013