May 29, 2017

இணை கற்பித்தல் 43 - இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இணை கற்பித்தல் 43 - இறந்தவர்கள் செவியேற்பார்களா?

தொடர்: 43

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கப்ரு வணங்கிகள், நபியவர்களே ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள், ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள்! நபியவர்கள் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் உயிரில்லாத ஒருவரையா சந்திக்கச் சொல்வார்கள்? உயிருடன் உள்ளவர்களைத்தானே சந்திக்க சொல்வார்கள்? எனவே கப்ரைச் சந்தியுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்தே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நாம் சொல்வதைச் செவியேற்பார்கள். நமக்கு உதவியும் செய்வார்கள் என்று பைத்தியக்காரத்தனமான ஒரு வாதத்தை வைக்கின்றார்கள்.

ஜியாரத் என்ற சொல்லுக்கு மனிதரைச் சந்திப்பது என்ற குறுகிய அர்த்தம் கிடையாது. அதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி, எக்மோர் சந்திப்பு என்று சொல்கிறோம். இதிலும் சந்திப்பு என்று வந்திருக்கிறது. அதனால் இரயிலை போய் சந்தித்து விட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கொள்வோமா! ஆனால் இந்தச் சந்திப்புக்கும் அரபியில் ஜியாரத் என்று சொல்லப்படும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் நடந்தும் குபாவை சந்திக்கச் செல்வார்கள்.

நூல்: முஸ்லிம் 2705

 நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் (கஅபாவை) தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 1732

மேற்கண்ட ஹதீஸ்களில் நபியவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று குபாவைச் சந்திக்கச் செல்வார்கள் என்றும், மினாவில் தங்கும் நாட்களில் கஅபாவை ஸியாரத் செய்தார்கள் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு இவர்கள் கொடுக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் நபியவர்கள் குபாவிற்கோ, அல்லது கஅபாவிற்கோ சென்று அங்குள்ள பள்ளிவாசலிடம் உரையாடுவதற்குச் சென்றார்கள். அதனிடம் துஆச் செய்தார்கள் என்று அர்த்தம் கொடுப்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விட்டது. துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு நேரடியாகக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கபுருக்குச் சென்று நாம் சலாம் சொல்வது அவர்களுக்குக் கேட்கும். நபியவர்கள் கப்ரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். நமது கோரிக்கையை வைக்கலாம் என்று குருட்டுத் தனமான வாதங்களை வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

யாரேனும் ஒருவர் என் மீது சலாம் சொல்வாரேயானால், அவருடைய ஸலாமுக்கு நான் பதில் சலாம் சொல்வதற்காக வேண்டி அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை (உயிரை) திருப்பித் தருகிறான்.

நூல்: அபூதாவூத் 2043

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இது சரியான ஹதீஸா என்பது ஒருபுறமிருக்க. இதை சரி என வாதிடக்கூடியவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு உரையாற்றும் போது கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸில் ஆழமாகச் சென்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார்கள்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையின் பிரகாரம் நபியவர்கள் மரணிக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வருகின்றது.

நாம் சலாம் சொல்லும் போது மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறான் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் நபியவர்கள் பதில் சலாம் சொன்னவுடன் மீண்டும் அல்லாஹ் அவர்களுடைய உயிரைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

இதில் அவர்கள் பாதியை மறைத்துக் கொண்டு அரையும் குறையுமாக மக்களுக்குச் சொல்வார்கள். பார்த்தீர்களா! நபியவர்கள் உலகில் உள்ள எல்லா மக்களுடைய சலாமிற்கும் பதில் சலாம் சொல்வார்கள். எனவே நபியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக நம்முடைய நிலைபாடு என்னவென்றால், மேற்கண்ட ஹதீஸ் பல நம்பகமான சரியான ஹதீசுக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அதாவது வேறு ஹதீஸ்களில், நபியவர்களுக்குச் சொல்லப்படும் சலாமையும் சலவாத்தையும் மலக்குமார்கள் எடுத்துக் காட்டுவார்கள் என்று வருகின்றது. ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்படும் அனைத்து சலாமிற்கும் இறைவனால் உயிர் கொடுக்கப்பட்டு பதில் சலாம் சொல்வார்கள் என்று வருகின்றது. அப்படியானால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மீது சலாமும், சலவாத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபியவர்கள் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் என்றால் அவர்கள் மரணிக்காமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

அப்படி இருந்தால் நபியவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் நிலையே ஏற்படாது. எப்போதும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு உயிருடன் தான் இருந்திருப்பார்கள். எனவே இந்த ஹதீஸ் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஸலாமுக்குப் பதில் சொல்வதற்காக உயிரைத் திருப்பித் தருகிறான் என்று சொல்வதிலிருந்தே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உறுதியாகி விடுகின்றது.

இவர்கள் கூறும் அர்த்தத்தை  நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நபிகளார் மரணிக்கவில்லை. மரணிக்கவும் மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி மரணிக்காத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதக நிலை ஏற்பட்டு விடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும வணங்கக் கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும்  மறைவான ஞானம் இல்லை. அற்புதம் செய்யும் ஆற்றலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவன் மரணிக்காதவன். நித்திய ஜீவன். அவனைத்த தவிர மற்ற அனைவரும் மரணிப்பவர்களே. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருந்தாலும் சரியே! இறைநேசர்களாக இருந்தாலும் சரியே! அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விட்டது என்பதைப் பல்வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன்  பார்த்தோம்.

இறுதியாக, இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். நபியவர்கள் பொது மண்ணறைகளைச் சென்று சந்தியுங்கள் என்றார்கள். ஆனால் இவர்கள் இன்று ஒருவரை மகான் என்று தாங்களாகவே சொல்லிக் கொண்டு அவருடைய மண்ணறையைச் சுற்றி ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.


நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களுக்கே இல்லாத ஒரு கட்டடத்தை யாரென்று தெரியாத மனிதர்களுக்குக் கட்டி வைத்திருக்கின்றார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இழிசெயலைத் தான் நபியவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். எந்த அளவிற்கென்றால் தான் மரணிக்கப் போகின்ற கடைசிக் கால கட்டத்தில் கூட இதை (இணை வைப்பை) பற்றித்தான் அதிகமாக எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கைகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம், 

EGATHUVAM OCT 2016