May 22, 2017

வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபை

வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இமாலய வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தவற்றில் ஒன்று வரதட்சணைக்கு எதிரான போர் முழக்கமாகும்.

சமுதாயத்தின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற ஆலிம்கள் இந்தத் தீமைக்கு எதிராக இதுவரை ஊமைகளாக முடங்கிக் கிடப்பது மட்டுமில்லாமல், தங்களது திருமணங்கள், தங்களது பிள்ளைகளின் திருமணங்களில் தங்கு தடையின்றி வரதட்சணையைப் பல்வேறு வடிவங்களில் வாங்கிக் கொண்டும் உள்ளனர்.

இந்தக் கட்டத்தில் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தப் பிரச்சனையைத் தூக்கிப் பிடித்தது. அதன் விளைவாக இலட்சக்கணக்கான பெண்கள் கரையேறியுள்ளனர். கண்ணீர்க் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள் தான் இந்த ஜமாஅத்தைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்தும், அபாயங்களிலிருந்தும் பாதுகாக்கின்ற கவசங்களாக ஆயின.

இஸ்லாமிய சமுதாயத்தில் தவ்ஹீத் ஜமாஅத், வரதட்சணைக்கு எதிராகப் புரட்சியும், போர் முழக்கமும் செய்தது போன்று கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு குரல் இப்போது ஒலிக்கின்றது. அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரல்!

அவர் சாதாரணமானவர் அல்லர்! சென்னை ஐ.ஐ.டி.யில் கட்டிடக் கலையில் பி.ஹெச்.டி. முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரி! அவரது பெயர் திருமதி சத்யா சுதிர். அவர், உர்ஜ்ய் ஜ்ண்ற்ட் உர்ஜ்ழ்ஹ் - வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கின்ற வரதட்சணையை இந்து ஆங்கில நாளேட்டில் படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபையை வகையாக ஒரு பிடி பிடித்திருந்தார். திருச்சபையில் வரதட்சணை விஷயத்தில் பாதிரிகள் கடைப்பிடிக்கும் மவுன விரதம், நமது சமுதாய ஆலிம்களின் மவுன விரதத்தை அப்படியே ஒத்திருந்தது.

அதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.

அத்துடன் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மட்டுமல்ல. வரதட்சணையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு சமுதாயத்திற்கும் விடிவும் விமோச்சனமும் விடுதலையும் இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு; அதற்கு இஸ்லாத்தின் தூய வழியில் சமுதாய மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறந்த எடுத்துக்காட்டு என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம்.

இப்போது, வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் திருமதி சத்யா சுதிர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்திற்கு வருவோம்.

வரதட்சணை ஒழிக!

திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது.

நான் சார்ந்திருக்கும் சாதியை எண்ணிப் பெருமிதம் அடைபவள் நான். பாளையங்கோட்டை மற்றும் கன்னியாகுமரியில் தான் எனது சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பனையேறும் நாடார்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

இன்று அந்தத் தலைமுறையில் பலர் டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் சி.எஸ்.ஐ. திருச்சபையை நிர்வகித்து வருகின்றனர்.

பொதுவாக ஒரு சமுதாயத்தில் வாழ்க்கை மூன்று கூறுகளைக் கொண்டது. ஐஹற்ஸ்ரீட்ண்ய்ஞ் (பிறப்பு), ஙஹற்ஸ்ரீட்ண்ய்ஞ் (திருமணம்), உண்ள்ல்ஹற்ஸ்ரீட்ண்ய்ஞ் (மரணம்) ஆகியவை தான் அந்த மூன்று கூறுகள்.

வாழ்க்கையின் இந்த ஒவ்வொரு கூறுக்கும் நிகழ்வுக்கும், அதாவது பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. எனது சிறு வயதில் நான் அவற்றில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நான் வளர்ந்ததும் இந்தப் பெருமை என்னிடத்திலிருந்து விடைபெற்று, வெட்கமும் வேதனையும் என்னிடம் குடிகொண்டு விட்டது.

திருமணம் என்று வந்ததும் மாப்பிள்ளை தேடுவதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பறிப்பதும் தான் நடக்கின்றது. அதாவது ஒரு பெண் பருவமானதும் சிறந்த மாப்பிள்ளையைத் தேடும் படலம் பெண் வீட்டில் துவங்கிவிடுகின்றது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிலிருந்து பறிக்கும் வேலையும் துவங்கிவிடுகின்றனர்.

கடவுளால் அளிக்கப்பட்ட புனிதத் திருமணம், பேரம் பேசப்படுகின்ற கேடுகெட்ட வியாபாரமாக மாறிவிட்டது.

ங.இ.இ.ந. என்றால் அந்த மாப்பிள்ளையின் தலைக்கு விலை பத்து லட்சம்! ங.உ., ங.ந. என்றால் இருபது லட்சம்! இ.ஊ., ங.ஊ. என்றால் இதுபோன்ற பட்டதாரிகளுக்கு ஐந்து அல்லது பத்து லட்சம்! இதல்லாமல் நூறு சவரன் நகை, நவீன சொகுசு கார், புதிய வீடு அமைப்பதற்கு ஒரு தொகை, நிலம், புலம், வயல், வாசல், தோட்டம், துறவுகள், தாரைவார்ப்புகள், திருமணத்தின் செலவுகள் அனைத்தும் பெண்வீட்டின் மீது திணித்து தீர்த்துக் கட்டப்படுகின்றது.

ஒரு திருமணம் என்றால் அரை கோடி கரைந்து, காணாமல் போய்விடுகின்றது.

இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை நிலையாகும்.

பெண் குழந்தை பிறந்தது முதல் பெண் வீட்டில் மாப்பிள்ளை பிடிப்பிற்காக சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டில் பேரம் பேசும் வேளையில் எந்த அளவுக்குப் பிடுங்க முடியமோ அந்த அளவுக்குப் பிடுங்கிக் கொள்கின்றனர். அதிலும் ஒரேயொரு செல்ல மகள் என்றால் போதும். கொப்பில் ஏறிவிடுகின்றனர்.

என்னுடைய விஷயத்தில் என்னை ஒருவர் பெண் பார்க்க வந்திருந்தார். பையனின் தகப்பனார் பையனை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். அடக்கமானவன், அமைதியானவன், அறிவாளி, புத்திசாலி, கடவுள் பக்தி கொண்ட பக்திமான், புகழும் பிரபலமும் மிக்க விடுதியுடன் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தவன் என்று புகழ் மாலைகளைச் சூட்டினார். கை நிறைய சம்பளம் வாங்கும் கண்ணியம் மிக்கவன்; திருச்சபையின் பாடகர் குழுவில் உறுப்பினராக இருக்கிறான் என்றெல்லாம் பையனின் பண்புகளையும், பதவிகளையும் பட்டியலிட்டார்.

இவ்வளவும் அளந்து விட்டு, "உங்கள் மகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்ற பயங்கரவாதக் கேள்வியை என் தந்தையை நோக்கிக் கேட்டார்.

இப்படி ஒரு கேள்வி மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த மணமகன், இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு எதிராகப் பொங்கி எழுகின்ற புரட்சி மகன் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை என் வங்கிக் கணக்குக்காக இல்லாமல், என்னை எனக்காகத் திருமணம் முடிப்பார் என்று எண்ணியிருந்தேன். எனது அந்த எதிர்பார்ப்பிலும் எண்ணத்திலும் மண்ணள்ளிப் போட்டு விட்டார் அந்த மாப்பிள்ளை!

எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றும் வகையில், டிரைன் டிக்கெட், வருவதற்கும் போவதற்கும் உரிய போக்குவரத்துச் செலவுகள், மண்டபச் செலவுகள் அத்தனையும் எனது தகப்பனார் தான் செய்ய வேண்டும் என்ற வெட்கம் கெட்ட கோரிக்கையையும் வைத்தார் பக்திமான் மாப்பிள்ளையின் தகப்பனார்!

நல்ல வேளையாக எனது தகப்பனார் எனது திருமணத்திற்காக நையா பைசா செலவு செய்கின்ற முடிவில் இல்லை. நான் அந்தப் பையனுக்குச் சமமான படிப்பும் பட்டமும் பெற்றிருந்தேன். என்ன படித்து என்ன செய்வது? அந்த சில நொடிப் பொழுதில் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் என்று அவமானமடைந்தேன்; ஆற்றாமை கொண்டேன்.

இந்த நேரத்தில் பக்திமானான அந்த மாப்பிள்ளையைப் பார்த்தேன். முகத்தில் எந்த ஒரு வெட்கக் கோடுகள், வேதனை ரேகைகள் படியாத, பிரதிபலிக்காத வெறும் கற்சிலையாக, ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டிருந்தார். அவரது தகப்பனால் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் அவரது முகம் கோணவில்லை. அவரது உடல் நாணவில்லை. நல்லவேளை! இந்தக் கற்சிலையை, கையாலாகாததை நான் திருமணம் முடிக்கவில்லை.

இவ்வளவு காலமாக என் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்குத் திருமணம் நடப்பதை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். இதுபோன்று என்னுடைய அத்தை மகனுக்கு, கொடுத்த வரதட்சணையை வாங்கிக் கொண்டு திருமணம் முடித்தார். வரதட்சணையின் மதிப்பு உயர, உயர மாப்பிள்ளையின் அந்தஸ்தும் தகுதியும் உயர்கின்றது. இது தான் சமுதாயத்தின் மட்டரகமான அளவுகோலாகும்.

உங்களுடைய மகள் திருமணத்திற்கு சேமித்து வைத்த மாதிரி, மகன் திருமணத்திற்காக சேமித்து வைக்கவில்லையே? என்று என்னுடைய அத்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், இதே அளவுக்கு என் மகளுக்குக் கொடுத்துத் தான் திருமணம் முடித்திருக்கின்றேன். நான் அப்படிக் கொடுக்கவில்லை என்றால் என் மகளை யார் திருமணம் முடிப்பார்? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். அத்துடன், நான் என் மகனுக்கு எதுவும் வாங்கவில்லை என்றால் பையனுக்கு ஏதோ குறையிருக்கின்றது என்று தவறாக நினைத்துவிடுவார்கள். அதனால் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சபையில் நான் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். ஒரு தடவை கூட வரதட்சணைக்கு எதிரான சொற்பொழிவை நான் கேட்டதே இல்லை.

ஒவ்வொரு வாரமும் "ஹோலியர் தேன் தோ....'' என்று பாடுகிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் பெண் பிள்ளைகளுக்குப் பெரிய விலையில் மாப்பிள்ளை தேடுகின்றோம். அல்லது நமது மகன்களுக்குப் பெண் வீட்டாரிடமிருந்து பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றோம்.

மாப்பிள்ளையை இந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்களின் நிலை என்ன என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமா? இப்படி ஒரு நிலையை எத்தனை குடும்பங்களில் விரும்புவார்கள்? வெறுக்கத் தான் செய்வார்கள்.

வரதட்சணை கொடுக்கின்ற, அல்லது வாங்குகின்ற நாம் ஒவ்வொருவரும் பெண் குழந்தையின் சாவுக்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் ஆகின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

ஒவ்வொருவரும் இப்படிப் பெண் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணமாக இருந்துவிட்டு மற்றவர்களைப் பழிப்பது எப்படி நியாயமாகும்?

கடவுளே! நீங்கள் வருகையளியுங்கள் என்று திருமண நிகழ்ச்சிகளில் பாடல் பாடுகின்றோம். திரை மறைவில் நடக்கின்ற அநியாயங்களை ஏசு பார்த்தால், அவர் ஜெருஸலம் மாதா கோயிலில் செய்தது போன்று, புனித திருமணத்தை வியாபாரமாக்கிய நயவஞ்சகர்களே! என்னுடைய தேவாலயத்தைச் சந்தையாக்கி விட்டீர்கள். இதை விட்டு வெளியே செல்லுங்கள் என்று உங்கள் அனைவரையும் துரத்தி அடித்திருப்பார்.

என்னுடைய சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கின்றேன்.

திருமணத்தையொட்டி நடக்கின்ற நயவஞ்சகங்கள், ஆடம்பரங்கள் தொலைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது.

சமீபத்தில் வாங்கிய வைர மாலையை, வந்திருக்கும் பெண்களுக்குக் காட்டவும் அவர்கள் பொறாமைப்படவும் தேவையில்லை.

மணப்பெண்ணுக்கு 25,000 ரூபாய் செலவில் ஏன் சேலை எடுக்க வேண்டும்? ஒரு தடவை உடுத்திவிட்டு அது அப்படியே அலமாரிக்குள் மடித்து வைக்கப்படுகின்றது. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்படும் நகைகள் எதற்கு? கனமான நகைகளை கழுத்து, காது, கைகளில் போட்டு கல்யாணப் பந்தலில் பலருக்கும் போட்டுக் காட்டிவிட்டு, திருமணம் முடிந்ததும் வங்கிப் பெட்டகங்களில் வைத்து அவை பூட்டப்படுகின்றன.

இதற்குப் பதிலாக நூறு பேர்கள் கலந்து கொண்டு, மணமகள் ஒரு 3000 ரூபாய் அல்லது அதைவிடக் குறைந்த மதிப்பிலான சேலை அணிந்து, சாதாரணமான நகை போட்டுக் கொண்டு, எளிமையான முறையில் திருமணம் நடகக்கின்ற அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

இவை அத்தனைக்கும் தேவை நான் மாற வேண்டும்! நீங்கள் மாற வேண்டும்! இந்தச் சமுதாயம் மாற வேண்டும்.

EGATHUVAM MAR 2015