May 29, 2017

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மங்கலம் சலீம் வி.மி.ஷிநீ.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே அல்லாஹ்வை நம்புவது உட்பட மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும்.

இதன் காரணமாகவே, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வை நம்புவது குறித்து கூறப்படும் ஏராளமான இடங்களில் மறுமை சம்பந்தமான போதனையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இந்த மறுமையை நம்பியவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் மார்க்கம் வலியுறுத்துகின்றது என்பதை இப்போது பார்ப்போம்.

தொழுகையைப் பேணுதல்

மறுமையை நம்புவோர் தொழுகையைப் பேண வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இது, தாய் கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர் களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.

(திருக்குர்ஆன் 6:92)

மறுமையில் கடமையான விஷயங்கள் குறித்தும் குறிப்பாக தொழுகை குறித்தும் விசாரிக்கப்படும்.

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

மறுமையை நம்புவோர் இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் திருக்குர்ஆன் போதிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(திருக்குர்ஆன் 4:59)

மறுமையை சரியாக நம்பியவர்கள் நபிகளாரின் போதனைக்கு மாற்றமாகச் செயல்படக் கூடாது. முன்னோர்கள், பெரியார்கள், இமாம்களின் வழிகாட்டுதல்களே முக்கியம் என்கிற நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தூதர் காட்டிய தூய வழியில் பயணிக்க வேண்டும்.

நபியை அதிகம் நேசிக்க வேண்டும்

மறுமையை நம்புவோர் நபிகள் நாயகத்தை அதிகம் நேசிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

(திருக்குர்ஆன் 58:22)

துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளல்

மறுமையை நம்புவோர் துன்பத்தின் போது துவண்டு விடாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மார்க்கம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தனது கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதுகணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

ஆதாரம்: புஹாரி 1281

இறந்துபோனவர் பெயரில் ஆறாவது நாள், ஒன்பதாம் நாள், பதினாறாவது நாள், நாற்பதாம் நாள், நினைவு நாள் என்றெல்லாம் மார்க்கம் கூறாத சடங்குகளைச் செய்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும். மறுமையை நம்பும் மக்கள் மார்க்கம் வழிகாட்டும் வகையில் மட்டுமே துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிறர் நலம் நாடுதல்

கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் இஸ்லாம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய செய்திகளையும் குறிப்பிட்டிருக்கின்றது. ­­மறுமையை நம்புகிறவர்கள் வணக்க வழிபாடுகளில் மட்டுமின்றி பின்வரும் வகையில் பொதுநலத்தில் அக்கறை கொண்டிருப்பதும் அவசியம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும்  மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புஹாரி 6018, 6136, 6138

அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்’’ என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்‘’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புஹாரி 6019, 6135

உண்மை பேசுதல்

மறுமையை நம்பும் நபர்கள் உலக விஷயத்திலும் சரி, மார்க்க விஷயத்திலும் சரி உண்மையை உரைப்பவர்களாகத் திகழ வேண்டும். சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புஹாரி 6018, 6136, 6138

வியாபாரத்தில் நேர்மை

அனைத்து அருட்கொடை குறித்தும் மறுமையில் கேள்வி கேட்கப்படும். இதன்படி நாம் பொருளாதாரத்தைச் சேகரித்த மற்றும் செலவளித்த விதம் குறித்தும் விசாரணை இருக்கிறது. எனவே மறுமையை நம்பியவர்கள் வட்டி. பதுக்கல், லஞ்சம், களவு என்று மார்க்கம் தடுத்திருக்கும் எவ்வழியிலும் செல்வத்தை ஒருபோதும் தேடிச் சென்று விடக் கூடாது.

அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது

அல்குர்ஆன் 7:85

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.  வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:278

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!

அல்குர்ஆன் 2:188

மறுமையை நம்பும் மக்கள் உலகத்தையே மறந்து விட வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. உலக இன்பத்திற்கான பொருட்களை, பொருளாதாரத்தைத் திரட்டிக் கொள்வதற்கு மார்க்கம் தடை ஏதும் விதிக்கவில்லை. மாறாக, மார்க்கத்தை மதிக்காமல் உலக மோகத்தில் மூழ்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கின்றது, இஸ்லாம்.

மறுமையை நம்புகின்ற நாம் மார்க்கம் அனுமதி அளிக்கும் வகையில் தான் பொருளீட்ட வேண்டும்.

இந்த இம்மை வாழ்க்கை அற்பமானது; அந்த மறுமை வாழ்க்கை அற்புதமானது. மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் போதுதான் நாம் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் சரியாக இருக்க இயலும்.


மறுமையை நம்புவதாக வெறுமனே வாயளவில் சொல்லாமல் உளப்பூர்வமாக முன்மொழிய வேண்டும். அடுத்தபடியாக, அந்த நம்பிக்கையை உண்மைப்படுத்தும் வண்ணம் வாழ வேண்டும். இதனை மனதில் கொண்டு நன்முறையில் வாழ்ந்து வெற்றி பெறுவோமாக! 

EGATHUVAM OCT 2016