May 8, 2017

கூட்டத்திற்கல்ல! கொள்கைக்கே வெற்றி!

கூட்டத்திற்கல்ல! கொள்கைக்கே வெற்றி!

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை, 80களிலிருந்து இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்தவர்கள் இன்று வியக்க வைக்கும் எண்ணிக்கையில் வான் முகட்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு தான் நமது ஜமாஅத் சுதாரிக்கவும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியும் எழுச்சியும் கிடைத்தது எதனால்?

கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் தான். இல்லையென்றால் மழை காலத்துக் காளான்கள் போல் நமது கூடாரங்கள் கலைந்து, காணாமல் போயிருக்கும். இன்னும் இந்தக் கொள்கை ஏறுமுகம் காண வேண்டுமானால், எழுச்சி பெறவேண்டுமானால் இதே கொள்கைப் பிடிப்பும் பற்றும் நம்மிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இறங்குமுகம் தான். நம்முடைய வாழ்நாளிலேயே இந்த இயக்கத்திற்கு முடிவுரை எழுத வேண்டியது தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

கொள்கை உறுதி என்றதும் நம்முடைய கவனத்திற்கு வரும் விஷயங்கள் தர்ஹா வழிபாடு, மவ்லிது, மத்ஹபுகள் போன்றவை தான். இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் கவனமாகத் தான் இருப்பார்கள். இதில் கோட்டை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அவர்கள் கோட்டை விடுவது திருமண நிலைபாட்டில் தான்.

திருமண விஷயத்தில் ஜமாஅத் ஒரு நிலைபாட்டை அறிவிக்கின்றது என்றால் அது சுயவிருப்பத்தின் அடிப்படையில் அல்ல. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தான்.

பெண் சிசுவைக் கருவிலேயே அழிப்பதற்கான காரணம் வரதட்சணை தான். கருவை விட்டுத் தப்பி அந்தக் குழந்தை வெளியே வந்து விட்டால் அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்குக் காரணம் வரதட்சணை தான்.

அத்தனையும் தாண்டி ஒரு பெண் மணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பின் ஸ்டவ் வெடித்துக் கொல்லப்படுவதற்குக் காரணம் வரதட்சணை தான்.

இந்த வரதட்சணை எனும் கொடிய பாவத்தைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர். இவர்கள் இவ்வாறு செய்வதற்குக் காரணம், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதில்லை. அத்துடன், வேதத்தில் தங்களுக்குப் பிடித்தவற்றை பின்பற்றிக் கொண்டு பிடிக்காதவற்றை விட்டுவிடுபவர்கள். இந்தச் செயலை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:85

இவர்களின் மனோஇச்சை செயல்பாடுகளிலிருந்து விலகி, வெளியேறி மார்க்க அடிப்படையில் செயல்படுவதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துள்ளோம்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

அல்குர்ஆன் 2:208

அல்லாஹ் சொல்வது போன்று இந்த இயக்கத்தின் மூலம் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திருக்கின்றோம். இந்த இயக்கத்தில் இருந்து கொண்டு, நமக்குப் பிடித்தவற்றைப் பின்பற்றிக் கொண்டு, பிடிக்காதவற்றை விட்டுவிடுவோம் என்று கூறுவது இயக்கத்திற்கு எதிரான செயல் அல்ல, இஸ்லாத்திற்கு எதிரான செயலாகும்.

உதாரணத்திற்கு திருமண விஷயத்தைக் கூறலாம். நம்மில் எத்தனை பேர் வரதட்சணை திருமணங்களை, ஆடம்பரத் திருமணங்களை, குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமாக நடத்தப்படும் திருமணங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றோம்? உறவு, நட்பு என்ற அற்பக் காரணங்களுக்காக இறைக் கட்டளையை அலட்சியப்படுத்துபவர்கள் எப்படி ஏகத்துவாதிகளாக இருக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பெண் வீட்டு விருந்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெண் வீட்டு விருந்தில் ஜமாஅத்தின் உறுப்பினர் மட்டுமல்லாது கிளை நிர்வாகிகளே போய் கலந்து கொள்கின்றனர். பெண் வீட்டு விருந்து கூடாது என்று சொல்வது நமது ஜமாஅத் மட்டும் தான். சொல்வதுடன் நில்லாமல் இதுபோன்ற விருந்தைப் புறக்கணித்து, செயல்பாட்டிலும் நிலைநிறுத்துகின்ற ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான்.

ஏன்? ஒன்று, அது இஸ்லாத்தில் இல்லாத ஒரு நடைமுறை, பித்அத் ஆகும். இந்த அடிப்படையில் இது எதிர்க்கப்பட வேண்டும்.

மற்றொன்று, பெண் வீட்டு திருமணச் செலவுகள் தான் இன்றைக்குப் பெண் சிசுக் கொலைகளுக்குக் காரணம். எனவே இந்த விருந்தில் பங்கெடுக்கும் எவருக்கும் அந்தப் பாவத்திலும் பங்குண்டு என்ற விபரம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.

அதிலும் குறிப்பாக, மாப்பிள்ளை வீட்டாரின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வைக்கப்படும் பெண் வீட்டு விருந்துகள் தெளிவான வரதட்சணையாகும். பெரும்பாலான பெண் வீட்டு விருந்துகள் இந்த அடிப்படையில் தான் வைக்கப்படுகின்றன.

இந்தக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெண் வீட்டு விருந்து போன்ற அனாச்சாரங்களைத் தவிர்க்கச் சொல்கின்றது. அவ்வாறு தவிர்க்காத திருமணங்களை ஜமாஅத் புறக்கணித்து தனித்து ஒதுங்கிக் கொள்கின்றது. இது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை நிலைப்பாடு! இதுபோன்று பிற ஜமாஅத்துகள், இயக்கத்தினர் நடத்தும் மேடைகளில் பங்கெடுக்கக் கூடாது என்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு!

இவையெல்லாம் ஜமாஅத் நலன் கருதி, குர்ஆன் ஹதீசுக்குக் கட்டுப்பட்டு எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள். இதுபோன்ற பல்வேறு நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜமாஅத் உறுப்பினர்கள் ஆட்டம் கண்டால் அது கொள்கை ரீதியிலான ஆட்டமாகும். இந்த ஆட்டம் ஜமாஅத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிடும்.

தர்ஹா வழிபாடு, மவ்லிது போன்றவற்றில் உறுதியாக இருந்தால் மட்டும் போதாது. இதுபோன்ற விஷயங்களிலும், சின்னச் சின்ன விஷயங்கள் என்று அலட்சியம் காட்டாமல் உறுதியாக இருக்க வேண்டும். இவற்றிலும் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டும்.

இன்று நமது ஜமாஅத்தில் கிளைப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகளே இந்த நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்கின்றனர். இந்த இயக்கத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கொள்கை தான்; கூட்டமல்ல! இலட்சியம் தான்; எண்ணிக்கையல்ல!

இதைக் கவனத்தில் கொண்டு மாநில அளவிலான தர்பியா முகாம்களை தலைமை விரைவில் நடத்தவுள்ளது. சென்னை, கோவை, மதுரை என மாநிலத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு இந்தத் தர்பியா முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். தங்கள் கொள்கை, கோட்பாடுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


EGATHUVAM FEB 2013