May 17, 2017

களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத்

களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்' என்ற வியூகத்தைக் கையில் எடுத்துக் கடந்த சில நாட்களாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் பிரச்சார வியூகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கையில் எடுத்தது? களத்தில் ஏன் கொண்டு சென்றது?

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள்; முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள்; இஸ்லாம் என்பது பயங்கரவாத மார்க்கம்; இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று ஊடகங்களால் பன்முகப் பரிமாணங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

எங்காவது குண்டு வெடிப்பு நடந்துவிட்டால் குண்டு வைத்தவன் யார் என்று காவல்துறையினர் முறையாகக் கண்டுபிடிக்கும் முன்னரே, இந்தக் கொடும் செயலில் ஈடுபட்டவன் முஸ்லிம் தான் என்று ஊடகங்கள் உலகத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றன.

குண்டு வைத்தவன் முஸ்லிம் இல்லை, பிற சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது இதே ஊடகங்கள் ஊமையாகி, ஊனமாகி விடுகின்றன. அப்போது எந்த ஊடகமும் தான் முன்னர் வெளியிட்ட செய்தியைத் தவறு என மறுப்பு வெளியிடுவது கிடையாது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் ஒரு குற்றவாளியும் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு முஸ்லிமை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றது. பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த முஸ்லிமின் ஊர், தெரு, வீடு அத்தனையையும் திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்சிப்படுத்தி, முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி என்று ஊதி ஊதிப் பெரிதாக்கி ஊளையிட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இந்தச் செய்தியின் சாதக, பாதகங்களைப் பற்றி விலாவாரியாக, விரிவான கோணங்களில் விவாதம் நடத்தப்படும்; விளாசித் தள்ளப்படும். இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஒரு முஸ்லிம் என்று மக்கள் மனதில் ஆழப் பதிய வைக்கப்படும்.

பாகிஸ்தான் பயங்கரவாதி, 16 அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர், லஷ்கரே தொய்பாவுடன் தொடர்பு கொண்டவர் என்றெல்லாம் கண், மூக்கு, காது வைத்துக் காட்டப்பட்ட அந்த முஸ்லிம் பல ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால், நிரபராதி, அப்பாவி என விடுதலை செய்யப்படுவார். பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது வளைத்து வளைத்துக் காட்டி, முஸ்லிம் தீவிரவாதி என்று ஊளையிட்ட ஊடகங்கள் இப்போது ஊமையாகி விடுகின்றன.

இப்போது களங்கப்பட்டு நிற்பது முஸ்லிம் சமுதாயமும், தூய இஸ்லாமும் தான். இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்கும், தூர எறிவதற்கும் நம் சமுதாயத்தில் தேசிய அளவில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையோ, பத்திரிகைகளோ இல்லை.

இந்தக் களங்கத்தைப் பற்றிய கவலையும், கரிசனமும் தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தான் உள்ளது. ஆனால் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பத்திரிகை, தொலைக்காட்சி ஆரம்பிக்கும் அளவுக்குக் கையில் காசில்லை. இருப்பினும் தனது சக்திக்குட்பட்டு, இஸ்லாத்தின் மீது படிந்துள்ள கரையை, களங்கத்தைக் கழுவ களமிறங்கியுள்ளது.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல் சிறு சிறு துண்டுப் பிரசுரங்களைக் கொண்டே இந்த அரும்பணியைச் செவ்வனே செய்து வருகின்றது.

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தவ்ஹீத் ஜமாஅத் கொண்டுள்ள செயல்திட்டங்கள்:

1. தெருமுனைப் பிரச்சாரங்கள்

2. துண்டுப் பிரசுரங்கள்

3. சுவரொட்டிகள் மற்றும் புளோரோசென்ட் போஸ்டர்கள்

4. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பேனர் வைத்தல்

5. டி ஷர்ட் மூலம் விளம்பரம்

6. பேஸ்புக் மூலம் பிரச்சாரம்

7. சுவர் விளம்பரம்

8. உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம்

9. வீடு வீடாகப் பிரச்சாரம்

10. பொதுக்கூட்டங்கள்

11. வாகனப் பிரச்சாரம்

12. பெண்கள் மூலம் பிரச்சாரம்

13. பத்திரிகையாளர் சந்திப்பு

14. போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்தல்

15. கிராமங்கள், சேரிகளில் புரஜக்டர் மூலம் பிரச்சாரம்

16. கட்டுரைப் போட்டி அறிவித்து பரிசு வழங்குதல்

17. பள்ளிக்கூட நிர்வாகம், பஞ்சாயத்தார், கவுன்சிலர்களுக்குப் பிரச்சாரம்

18. உள்ளரங்க கருத்தரங்குகளை அமைத்து அதிகாரிகளை அழைத்தல்

19. குழந்தைகள் கைகளில் பதாகைகள் கொடுத்து பிரச்சாரம்

20. ரேஷன் அட்டை உறைகளில், மின் அட்டை உறைகளில் விளம்பரம்

21. உள்ளூர் தொலைக்காட்சிகளில் பிரச்சார ஸ்க்ரோளிங் செய்தல்

22. பேனா, பென்சில், கைக்குட்டை, தொப்பி போன்றவற்றில் விளம்பரம் செய்து இலவசமாகக் கொடுத்தல்

23. இரத்த தானம் செய்தல்

24. தீவிரவாத எதிர்ப்பு சிறப்பு இதழாக வெளிவந்திருக்கும் அக்டோபர் மாத ஏகத்துவம் இதழை வாங்கி பிறமத நண்பர்களுக்கு வழங்குதல்

களங்கம் துடைத்து, இஸ்லாத்தின் கண்ணியம் காக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் களமிறங்கி, கொட்டும் மழையிலும் கொழுந்து விட்டெரியும் தீயாக இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் மனிதநேய மார்க்கம் போன்ற செய்திகளை முஸ்லிமல்லாத மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் இஸ்லாத்தின் தூய வடிவத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

அல்லாஹ் கூறுவது போன்று மனித குலம் அனைவரும் ஒரு தாய், தந்தையின் மக்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினருக்கும் இரத்த தானம் செய்து மனிதநேயப் பணிகளில் சிகரத்தில் நிற்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.

அல்குர்ஆன் 5:32

இந்த வசனத்தின் பக்கம் பிற சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்து, இஸ்லாம் மனிதனை வாழ வைக்கும் மார்க்கம்; மாள வைக்கின்ற, வீழ வைக்கின்ற மார்க்கமல்ல என்பதை உலகுக்குப் பறைசாற்றி, தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.


இந்த வகையில் இம்மாத ஏகத்துவம் இதழ் தனது வழக்கமான ஒரு சில தொடர்களை ரத்துச் செய்து விட்டு, தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய செய்திகளைத் தனது பக்கங்களில் பதிவு செய்வதில் பல மடங்கு மகிழ்ச்சியடைகின்றது.

EGATHUVAM NOV 2014