May 31, 2017

பெண்கள் பகுதி - மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும் முஸ்லிம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

பெண்கள் பகுதி - மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும் முஸ்லிம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

ஆஃப்ரின்

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்

இவ்வுலகத்தில் அக்காலம் தொட்டு இக்காலம் வரையிலும் பல்வேறு மதங்கள் தோன்றியுள்ளன. மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது மதம் தான் சிறந்தது என புகழ்மாலை சூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அனைவருக்கும் உகந்த ஓர் உன்னதமான மார்க்கம் இருக்குமென்று சொன்னால், அது ஓரிறைக் கொள்கையை போதிக்கக்கூடிய, இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான்.

இயற்கையோடு இசைந்த இம்மார்க்கத்தில் சொல்லப்பட்ட போதனைகள் அனைத்தும் மக்களுக்கு எளிமையைப் போதிக்கக் கூடியதாகவும் மனிதநேயத்தைக் கற்றுத்தரக் கூடியதாகவும் இருக்கிறது. இதை இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் சிறந்த ஆசிரியராகவும், ஆன்மீக குருவாகவும் இருந்து நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

மனிதன் தன் இறைவனுக்காகச் செய்ய வேண்டியவை பற்றியும், தனக்காகச் செய்ய வேண்டியவை பற்றியும், உறவினர்கள், அண்டை வீட்டார், சக மனிதர்கள் என அப்போதனைகளின் தொடர் நீண்டு கொண்டே செல்கின்றது. ஆனால் இதற்குச் செயல் வடிவம் கொடுக்கக் கடமைப்பட்ட இஸ்லாமியர்களோ கடமைகளைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் போதனையைப் புறக்கணிப்பவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பெண்களே இதில் முதலிடம் பிடித்துள்ளனர். ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெண்களிடமும் கூட பல அலட்சியங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அறியாமையையும், அலட்சியத்தையும் நாம் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்கிறது.

முதலாவதாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெண்களின் அலட்சியத்தை காண்போம்.

ஈமானில்...

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை, முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.       

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை, எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

இஸ்லாத்தின் முதல் தூணாகவும், ஈமானில் உயர்ந்த கிளையாகவும் இருப்பது ஏகத்துவம் தான். ஷஹாதத் வாசகங்களை ஒருவர் மொழிவதால் மட்டும் அவர் ஏகத்துவவாதி என்று கருதப்படமாட்டார். மாறாக இறைவனுக்குரிய பண்பை மற்ற மனிதர்களுக்கோ, பொருளுக்கோ, உயிரினத்திற்கோ கொடுக்காமல் இருக்க வேண்டும்.

மக்களுக்கு மத்தியில் ஏகத்துவ விதை தூவப்பட்டு அது அசைக்க முடியாத மரமாக உருவெடுத்த இக்காலத்தில் பெரும்பான்மை பெண்கள் அறியாமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். எனினும் அந்தப் பழமையிலிருந்து  அவர்களை முற்றிலுமாகப் பிரித்தெடுக்க முடியவில்லை. ஏனெனில் இணை வைப்பு என்றால் சிலை வணக்கமும் தர்ஹா வழிபாடும் தான் என்று எண்ணி வைத்துள்ளனர். இந்த அறியாமையினால் தங்களது அன்றாட வாழ்க்கையில் அவர்கள் செய்யும்  பல்வேறு காரியங்களில் இணைவைப்பின் அம்சங்களே நிறைந்துள்ளன.

ஷஹாதத் வாசகங்களை முன் மொழிவதில் நம் பெண்கள் எவ்விதக் குறைபாடும் வைக்கவில்லை. ஆனால் அந்த ஈமானை உளப்பூர்வமாக ஏற்று அதை முழுமைப் படுத்துவதிலும் அதனை உறுதிப்படுத்துவதிலும் தான் தடுமாறுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்த மடமைக் காரியங்கள் இன்றளவும் நம்மவர்களிடம் குடிகொண்டிருக்கின்றன.

சகுனம்

பெண்களை ஆட்கொண்டிருக்கும்  விஷயங்களில் முக்கியமானது சகுனம் பார்ப்பது தான். அறியாமை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் சகுனம் பார்ப்பதில் கல்வி அறிஞர்கள், பாமரர்கள் என எவரும் விதிவிலக்கு பெறுவதில்லை.

1. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் நினைத்த காரியம் தடைபட்டு விடும்.

2. வெற்றுக்குடம் இருக்கும் போதும், விதவைப் பெண்கள், அந்தஸ்தில் தாழ்ந்தவர்கள் முன்னிலையிலும் வெளியே செல்வதை துற்சகுனமாகக் கருதுவது.

3. பல்லி கத்தினால் நல்லது, அது மேலே விழுந்துவிட்டால் சாவு விழும் என்ற நம்பிக்கை.

4. வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள்.

5. ஒரு வீட்டிற்கு முன் சாக்குருவி கத்தினால் அங்கே மரணம் நிகழப்போகிறது.

6. கை அரித்தால் வீட்டிற்குப் பணம் வரும்.

7. வலது கண் துடித்தால் நல்லதும், இடது கண் துடித்தால் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை.

8. மஃரிப் நேரத்தில்  தண்ணீர் உட்பட நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் எவருக்கும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது அவ்வாறு செய்தால் நம் வீட்டிலுள்ள அபிவிருத்தி நம்மை விட்டு போய் விடும் என்ற நம்பிக்கை.

இது போன்ற எண்ணிலடங்கா மடமைகள் நம் தாய்மார்களின் மனதில் அசைக்க முடியாதவாறு அச்சாரமிட்டு அமர்ந்திருக்கின்றன. சகுனம் பார்ப்பதின் காரணிகள் வேண்டுமானால் இடத்திற்கு இடம் மாறுபடலாமே தவிர பெண்களின் மனநிலையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை.

சிறிய, பெறிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பதைக் கைவிடுவதில்லை நம் சகோதரிகள். ஆனால் இஸ்லாம்  இதை முற்றிலுமாகத் தகர்த்தெறிகிறது.

இதோ நம் தூய மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது, பறவை சகுனம் கிடையாது. ஸபர் (பீடை) என்பது கிடையாது.   ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது.

நூல்: முஸ்லிம் 4465

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் இல்லை. நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.

நூல்: முஸ்லிம் 4469

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது

காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச் செல்லுதல் என மார்க்கம் அனுமதித்த காரியங்களிலும் மற்றும் பூப்பெய்தல், பெயர் சூட்டுதல், குழந்தைப்பேறுக்கு அனுப்புதல் போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.

உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன் நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக் குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன்.

 நூல்: முஸ்லிம் 4521

ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரமாக இருக்கிறது.

இந்த நாளினால், இந்தப் பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று ஒருவர் நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை என ஏந்தல் நபி எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு சுபுஹ் தொழுகை தொழுவித்தார்கள் அன்றிரவு மழை பெய்திருந்தது தொழுது முடித்ததும் மக்களை நோக்கி உங்கள் இறைவன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என நாங்கள் கூறினோம்.

என்னை விசுவாசிக்கக் கூடியவர்கள், என்னை நிராகரிக்கக் கூடியவர்கள் என என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும், அவனது அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். இந்த நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசிக்கக் கூடியவர்கள் ஆவர் (என்று இறைவன் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்

நூல்: புஹாரி 846

நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும் நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.

அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும் செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும் நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால் மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்

நூல் : முஸ்லிம் 2782

மனிதனின் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் இறை சித்தாந்தத்தின் அடிப்படையில் தான். இதில் காலத்திற்கும், சகுனங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இவ்வாறு நம்புவது தான் இறை நம்பிக்கையாகும். இதைப் போன்ற இன்னும் ஏராளமான மடமைகள் நமது பெண்களிடம் இன்றளவும் காணப்படுகிறது. ஆனால் நம் இஸ்லாம் மார்க்கமோ மூடநம்பிக்கைகள், சமூகத்தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் சுமூக மார்க்கமாகவும் தலைசிறந்த கோட்பாடாகவும் திகழ்கிறது.


எந்தவொரு பிரச்சனைக்கும், சிக்கலுக்கும் நிறைவான, நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை  எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை. இத்தகைய சிறப்புமிக்க மார்க்கத்தில் வாழக்கூடிய நாம் அறியாமைக்குத் தாழிட்டுவிட்டு அறிவிற்கு வேலை கொடுப்போம், இஸ்லாமியர்களாகவே வாழ்ந்து இஸ்லாமியர்களாகவே மரணிப்போம்.

EGATHUVAM MAR 2017