May 31, 2017

குடும்பவியல் 37 - பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

குடும்பவியல் 37 - பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்  

தொடர்: 37

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நிர்வாகத் தலைமைப் பொறுப்பும், பொருளாதாரப் பொறுப்பும் ஆண்களையே சார்ந்துள்ளது என்பதை இதுவரை குடும்பவியலில் பார்ததுள்ளோம்.

அடுத்ததாக இஸ்லாமியக் குடும்பவியலில் பெண்களின் முக்கிய பொறுப்புக்கள் குறித்து பார்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் எப்படியிருக்க வேண்டும்? வீட்டில் பொறுப்புக்கள் என்ன? வெளியில் எப்படி இருக்க வேண்டும்? அதேபோன்று மாமனார் மாமியாருக்கு வேலை பார்ப்பதைப் பாரமாக நினைப்பது சரியா? என்பன போன்ற பல விஷயங்களை இந்தத் தலைப்பின் கீழ் பார்க்கப் போகிறோம்.

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

பெண்கள் வெளியிடங்களில் மக்கள் பார்வையற்ற இடங்களுக்குச் சென்று தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவது, பகலில் இயற்கைத் தேவையை நிறைவேற்றாமல், இருட்டுகிற வரை காத்திருந்து இரவில் தங்களது தேவைகளை நிறைவேற்றுவார்கள். இதுபோன்ற காரியங்கள் இன்றைக்கும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆண்களும் இதுபோன்று நடக்கிறார்கள். ஆண்கள் பகலிலும் கூட இதுபோன்ற காரியங்களை நிறைவேற்றுவார்கள்.

இப்படி நபியவர்கள் காலத்தில் வீட்டிற்குள் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தினால் பெண்கள் தங்களது இயற்கைத் தேவையை நிறைவேற்ற மக்கள் வசிக்காத, மக்களின் கண்களுக்குத் தெரியாத நிலையில் செல்வார்கள்.

பெண்களும் இப்படி வெளியே சென்று இயற்கைத் தேவைகளை நிறைவேற்றியதாக புகாரி 146, 147, 4795, 5237, 6240 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

ஓட்டுப் போடுவது, பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடை வீதிக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்ற அவசியமான விஷயங்களுக்காகப் பெண்கள் வெளியே செல்வதைக் குறைசொல்ல முடியாது.

அதே போன்று நபியவர்கள் தங்களது மனைவிமார்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பாத்திமா (ரலி), உம்மு ஹராம் (ரலி), உம்மு அத்திய்யா (ரலி), மற்றும் நபியவர்களின் மனைவிமார்கள் போருக்குச் சென்று, காயம்பட்ட வீரர்களுக்கு மருந்து போடுவது, காயம்பட்டவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, இறந்தவர்களை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளை போர்க்களங்களில் செய்துள்ளார்கள் என்று ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது.

பார்க்க: புகாரி 324, 980, 1652

தேவையில்லாத விஷயங்களுக்காகப் பெண்கள் வெளியில் சென்றால் கணவர்கள் மனைவிமார்களைத் தடுக்கலாம். உதாரணத்திற்கு ஒருவரது மனைவி தினமும் பக்கத்து வீட்டுக்குச் சென்று புறம் பேசுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பக்கத்து வீடாக இருந்தாலும் மனைவி செல்வதைக் கணவர் கண்டிக்கத்தான் வேண்டும். புறம் பேசுவது அடிப்படைத் தேவை இல்லை.

வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பல வகையில் இன்று பார்க்கிறோம். இருப்பினும் இதை மூன்றாகப் பிரித்து விளங்கலாம்.

மெல்லிய ஆடைகள், அதாவது உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் காட்சியாக்கப்படும் நிலையில் உள்ள ஆடைகள், அரைகுறையாக மறைப்பது, அதாவது முன் கை, முகம், கால் பாதம் தவிர மறைய வேண்டிய மற்ற பகுதிகளில் சிலதை மறைத்து சிலதை வெளியில் தெரிகிற மாதிரி அணிகின்ற சேலை, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணிவது, அதாவது உடல் முழுவதும் கணத்த துணியால் மூடினாலும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புக்கள் தெரியும் அளவில் அணியப்படுகிற ஆடைகள். இவைகள் அனைத்தும் அந்நிய ஆண்களை ஈர்க்க்கும் தடைசெய்யப்பட்ட ஆடை முறைகளாகும்.

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் நடை பிறரை ஈர்க்கின்ற வகையில் இருக்கவே கூடாது. பிறரை ஈர்க்கும் வகையில் சாய்ந்து நெழிந்து நடப்பது தவறானது. அதனைத் தமிழில் தளுக்கி, மினுக்கி நடப்பது என்பார்கள். இதுபோன்ற நிலையில் பெண்கள் வெளியில் செல்வது கூடாது. இவற்றையெல்லாம் நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் பேச்சுக்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்று இருக்க வேண்டும். பேச்சில் ஒரு மிரட்டல் தொணி இருக்க வேண்டும். கொஞ்சல், குழைவுத் தன்மை இருக்கவே கூடாது. பேச்சில் இழுவை இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் பேச்சை பிற அந்நிய ஆண்கள் வெறுக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரசிக்கத்தக்க வகையில் இல்லாதிருக்க வேண்டும்.

நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.


(அல்குர்ஆன் 33:32)

EGATHUVAM MAR 2017