May 10, 2017

காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்

காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்

2006ஆம் ஆண்டு சவூதி அரேபியா, கதீஃப் நகரில் 19 வயது நிரம்பிய பருவப் பெண், தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவ்விருவரையும் காருடன் சேர்த்து ஏழு பேர் கடத்திச் சென்று ஆண் நண்பரைத் தாக்கி விட்டு அந்தப் பெண்ணைக் கற்பழிக்கின்றனர். இவ்வழக்கு சவூதி நீதிமன்றத்திற்கு வருகின்றது.

கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 80 முதல் 1000 வரையிலான கசையடியும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த அந்தப் பெண்ணுக்கும் அவளது நண்பருக்கும் 90 கசையடிகள் கொடுக்குமாறு நீதிபதி தீர்ப்பளிக்கின்றார்.

ஒரு பெண் அந்நிய ஆணுடன் இவ்வாறு தனித்திருப்பதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் இடமில்லை. இந்த வகையில் அப்பெண்ணுக்கும் ஆணுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் அப்துர்ரஹ்மான் அல்லாஹிம் மேல்முறையீட்டிற்குச் சென்றார். ஏற்கனவே நீதித்துறையை எதிர்த்து அந்தப் பெண் தரப்பினர் ஊடகங்களுக்கு இதைக் கொண்டு சென்றதால் மேல்முறையீட்டு நீதிமன்றம் 200 கசையடிகளும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்தது. அத்துடன் வழக்கறிஞரின் உரிமத்தையும் நீதிமன்றம் பறித்தது.

அவ்வளவு தான். மேற்கத்திய நாடுகள் அப்பெண்ணுக்கு ஆதரவாகவும், சவூதி சட்டத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதுபற்றி சவூதி அரசிடம் பேசினார்.

மனித உரிமைக் கமிஷன் என்ற போர்வையில் ஹில்லாரி கிளிண்டன் இப்பிரச்சனையில் விஷம் கக்கினார். இதன் எதிரொலியாக சவூதி மன்னர் அப்துல்லாஹ் அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்கின்றார். இதன் பயனாய் வழக்கறிஞருக்கும் உரிமம் திரும்பக் கிடைக்கின்றது.

21.04.2013 தேதியிட்ட நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், "சர் ஈர்ன்ய்ற்ழ்ண்ங்ள் ச்ர்ழ் ரர்ம்ங்ய் - மகளிர் வாழ மண்ணில் நாடு இல்லை'' என்ற தலைப்பில் மேலே இடம்பெற்ற சவூதி கற்பழிப்புச் சம்பவத்தை வெளியிட்டு இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைக் காட்டியுள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்படும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை இங்கும் அரங்கேற்றியுள்ளனர்.

கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சவூதி நீதிமன்றம் வழங்கிய தண்டனை நியாயமானதே! அதுபோல் அந்தப் பெண்ணுக்கும் அவளது ஆண் நண்பருக்கும் அளித்த தண்டனையும் நியாயமானது தான். ஏனெனில் அந்நிய ஆடவருடன் இவள் தனிந்திருக்கிறாள். அதிலும் ஆடை அலங்கோலத்துடன் இருந்திருக்கின்றாள். இதற்காகவே இந்தத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.

ஒரு பெண் அந்நிய ஆடவருடன் தனித்திருப்பதற்காக இப்படி ஒரு தண்டனையை குர்ஆனோ, ஹதீஸோ கூறவில்லை. ஆனால் இதுபோன்ற ஒழுக்கக் கேடுகளை தடுப்பது ஒரு இஸ்லாமிய அரசின் கடமையாகும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

இந்த அடிப்படையில் சவூதி அரசாங்கம் தன்னுடைய கடமையை நிறைவேற்றிருக்கின்றது. பெண்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளும் ஆண்களை தவறான பாதைக்கு அழைக்கத் தூண்டுகின்றன. அவர்களது ஆபாச ஆடைகள், கட்டுப்பாடுள்ள ஆண்களைக் கூட கவரவும் கவிழவும் செய்து விடுகின்றன.

இதனால் இஸ்லாம் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றது. இதை சவூதி செயல்படுத்துகின்றது. ஒவ்வொரு ஆணிடமும் காம உணர்வு உள்ளடக்கமாய் அடங்கியிருக்கின்றது. காம உணர்வு என்பது சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும் எரிவாயுவைப் போன்றது. அது உலுக்கப்படுமானால் வெடித்துச் சிதறுகின்றது. அப்படி உலுக்குகின்ற அக்கினிப் பொறிகளாக திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

ஒரு மனிதனிடம் அடைக்கப்பட்டிருக்கும், அடக்கப்பட்டிருக்கும் உணர்வு தூண்டப்படுவதால் இந்தியாவில் ஐந்து வயதுச் சிறுமி, காட்டுமிராண்டி வாலிபர்களால் கற்பழிக்கப்படுகின்றாள். இந்த விரச, விரகதாபத்தை, காம வேகத்தைக் கிள்ளி, கிளறி விடக்கூடிய திரைப்படங்கள், திரையரங்குகள் சவூதியில் இல்லை. இதனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அங்கு இதுபோன்ற குற்றங்களின் சதவிகிதம் குறைவாக உள்ளது.

மனித உரிமை மீறல் என்று கொக்கரிக்கின்ற ஹில்லாரி கிளிண்டனின் நாடான அமெரிக்காவில், மூன்று பெண்களில் ஒரு பெண் என்ற விகிதத்தில் கற்பழிப்பு, தாக்குதல், தீய நோக்குடன் துரத்தல் போன்ற கொடுமைகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர் என 2010ல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

1.3 மில்லியன் அமெரிக்கப் பெண்கள் கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் கண்ணுக்கும் கணக்குக்கும் வந்த கற்பழிப்புக்கள் 84,767 மட்டுமே! இந்த அவமானச் சின்னங்களும், அலங்கோலங்களும் கொண்டவர்கள் தான் சவூதிச் சட்டத்தை விமர்சிக்கின்றனர்.

சவூதி அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து தண்டனையை ரத்துச் செய்திருக்கக்கூடாது என்பதே நமது நிலைப்பாடு!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காமவெறிக்குப் பலியான ஒரு பெண்ணின் உதிரத் துளிகள் உறைந்து சில நாட்கள் கழியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு கற்பழிப்புகள் நடந்து விட்டன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றத் தடுப்பு மசோதா எந்தப் பயனையும் தரவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இப்படிக் கண்கூடாக உண்மையைக் கண்ட பின்னரும் இன்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் இஸ்லாத்திற்கு எதிராக விஷம் கக்குகின்றன.

காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போன்று, இவர்களிடம் குறையை வைத்துக் கொண்டு இஸ்லாமிய நாடுகளை நோக்கிக் குறை சொல்கின்றனர்.

இவர்கள் என்ன தான் இஸ்லாத்தை வெறுத்தாலும் தங்களை அறியாமலே இஸ்லாமியச் சட்டங்கள் வேண்டும் என்று கேட்கவே செய்கின்றனர். ஏற்கனவே நிகழந்த கற்பழிப்பின் போதும், இப்போது நிகழ்ந்துள்ள 5 வயதுச் சிறுமி சம்பவத்திலும் பாரதீய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், மரண தண்டனை வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.


ஆம்! இதுபோன்ற குற்றங்களுக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்று கூறுகின்றனர். இந்த இலக்கை நோக்கித் தான் இவர்கள் வந்து சேரப் போகின்றனர். இன்ஷா அல்லாஹ்!

EGATHUVAM MAY 2013