May 11, 2017

இணை கற்பித்தல் தொடர்: 14 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

இணை கற்பித்தல் தொடர்: 14 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிமார்கள் உட்பட யாரும் தலையிட முடியாது என்பதைப் பார்த்து வருகிறோம். முஹம்மத் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட முடியாது என திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே இதை அல்லாஹ் அறிவிக்கச் சொல்கிறான்.

நானும் உங்களைப் போல மனிதன் தான் என்பதையும், எனக்கும் உங்களைப் போல மறைவானதை அறிய முடியாது என்பதையும் அல்லாஹ் அந்த மக்களுக்கு புரிய வைக்கச் சொல்கிறான்.

ஈஸா நபி முதல் அதற்கு முந்தைய ஒவ்வொரு நபிமார்களையும் கடவுளாக ஆக்கிவிட்டார்கள். அந்த நிலை உங்களுக்கும் வரக்கூடாது என்றால், உங்களைப் பற்றியே நீங்கள் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதாக அல்லாஹ் சொல்கின்றான்.

"அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன். 7:188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தமக்கே ஏதாவது செய்ய முடியுமா? செய்ய முடியாதா? என்பது இரண்டாவது விஷயம். மறைவானது ஒருவருக்கு தெரிந்திருந்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும்.

எனக்கு ஒரு துன்பம் வரப் போகின்றது என்பது மறைவான விஷயம். நாளைக்கு என்னை ஒருவன் கொல்லப் போகின்றான் என்றால் அது மறைவான விஷயம். ஆனால் அதே நேரத்தில் என் கண் முன்னால் என்னைக் கொல்ல வருவது மறைவான விஷயம் அல்ல. அவன் நாளை என்னைக் கொல்ல வருவது எனக்கு இன்றைக்கே தெரிந்திருந்தால், என்னைக் கொல்வதற்கு இன்னின்ன திட்டங்களை தீட்டியிருக்கிறான், இன்னின்ன தயாரிப்போடு இருக்கிறான் என்று எனக்கு தெரிந்திருந்தால் என்னை அவன் கொல்ல முடியுமா? அவன் என்னைக் கொல்வதிலிருந்தும் தப்பித்து விடுவேன்.

ஆக ஒரு மனிதனுக்கு மறைவான விஷயங்கள் தெரிந்து விட்டால் அவனுக்கு எந்த ஒரு கஷ்டமுமே வராது. நாம் நம்முடைய வீட்டில் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது இந்த வீடு இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் என்று நமக்கு முன்கூட்டியே  தெரிந்திருந்தால் நாம் அந்த வீட்டில் இருப்போமா? அந்த இடத்தை விட்டே நாம் ஓடிவிடுவோம். இந்த மறைவான ஞானம் உலகில் உள்ள அனைவருக்கும் இருந்திருந்தால் இதுவரைக்கும் நடந்த நிலநடுக்கங்களில் யாராவது இறந்திருப்பார்களா? சுனாமிப் பேரலையில் சிக்கி யாராவது மரணமடைந்திருப்பார்களா? வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருப்பார்களா? அவ்வாறு மறைவான ஞானம் இருந்தால் இயற்கை மரணத்தைத் தவிர வேறு விதமான உயிரிழப்புகளே ஏற்பட்டிருக்காது. ஆக நாளை நடப்பதை ஒருவன் அறிந்திருந்தால் அவனுக்கு எந்தக் கஷ்டமும் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு தான் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சொல்லச் சொல்கிறான்.

நீங்கள் அடிப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். இரத்தம் சொட்டச் சொட்ட ஊரை விட்டு அடித்து விரட்டினீர்கள். ஓடத் தான் செய்தேன். தாயிப் நகரை விட்டு அடித்துத் துரத்தினீர்கள். கல்லை எறிந்தீர்கள், நான் நடக்கும் பாதையில் முள்ளை வைத்தீர்கள். நான் தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகக் குடலை என் மீது போட்டீர்கள். என்னால் ஏதாவது செய்ய முடிந்ததா? இப்படியெல்லாம் என்னை சித்ரவதை செய்வீர்கள் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் இந்த சிரமத்தைத் தேடி வந்திருப்பேனா? இவை அனைத்தையும் விட்டும் நான் தப்பித்திருப்பேனல்லவா?

நான் உங்களைப் போல மனிதன் தான். மறைவானதையெல்லாம் அறியக் கூடிய சக்தி எனக்கு கிடையாது என்பதை அழைப்புப் பணி செய்யும் போது சேர்த்தே சொல்லச் சொல்கிறான்.

எனக்கும் எவ்வளவோ கஷ்டங்கள் வருகின்றன. அதை நீங்களும் பார்க்கத் தான் செய்கறீர்கள். இந்தக் கஷ்டங்கள் நானும் ஒரு மனிதன் தான் என்பதைக் காட்டவில்லையா? இந்தக் கஷ்டங்கள் உங்களிடமிருந்து வரும் என்பதை நான் முன் கூட்டியே அறிந்திருந்தால் இந்தக் கஷ்டங்களை நான் அடைந்திருப்பேனா? நீங்கள் என்னென்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் நாளை என்னை என்ன செய்வீர்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று நபிகளாரை சொல்லச் சொல்கிறான்.

ஒருவன் நாளை என்ன நடக்கும் என்பதை அறிபவனாக இருந்தால் அவன் நல்லதை மட்டுமே அடைவான். கெட்டது ஒன்றுமே வராது. உதாரணமாக நாம் ஒரு வியாபாரம் நடத்தி வருகிறோம். அந்த வியாபாரம் 10 வருடங்களுக்குப் பின் எந்த நிலையை அடையும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தால், அதாவது 10 வருடங்களுக்குப் பின் நஷ்டமடைந்து விடும் என்பதை நாம் அறிந்து வைத்திருந்தால் நாம் என்ன செய்வோம்? லாபம் வரும் வரைக்கும் வியாபாரம் நடத்திவிட்டு 10வது வருடத்தில் வியாபாரத்தை விட்டு விடுவோம். அப்போது நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. ஆக நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நமக்கு எவற்றிலெல்லாம் லாபம், நன்மை இருக்குமோ அதை மட்டும் அடைந்து கொள்வோம். எவற்றிலெல்லாம் நஷ்டம், தீமை இருக்குமோ அவற்றை விட்டும் விலகிக் கொள்வோம்.

இந்த மாதிரி நன்மையை மட்டும் அடைந்து, தீமையை விட்டும் விலகியவனாக நான் இருந்தேனா? என்று மக்களிடம் கேட்குமாறு அல்லாஹ் நபிகளாரைப் பார்த்துச் சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த மக்கள் அவ்வாறு நினைக்காவிட்டாலும் கியாம நாள் வரை உள்ள மக்களுக்கு, அதாவது யாரெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குகிறார்களோ, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுகிறார்களோ அந்த மக்களுக்கு அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இதை சொல்லச் சொல்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் கஷ்டங்கள் வருவதற்குக் காரணம், அந்தக் கஷ்டங்களைத் தடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவர்கள் மறைவானதை, நாளை நடப்பதை, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறியாமல் இருந்தது தான்.

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுப்பவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன். 39:38)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாகப் பல விஷயங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீயை இறக்குகிறான். அவர்கள் மீது அல்லாஹ் அதிகம் அன்பு வைத்திருக்கிறான். அருள் நிறைந்தவனாக இருக்கிறான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மறுமையில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுக்க இருக்கிறான், அவர்களை எவ்வளவு பெரிய உயர்வான இடத்தில் வைத்திருக்கிறான் என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கடுமையாக எச்சரிப்பதைப் பாருங்கள்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

அல்குர்ஆன். 69:44-47                 

நான் இந்த முஹம்மதுக்கு குர்ஆனைக் கொடுத்திருக்கிறேன். இதில் அவராக தன்னுடைய இஷ்டத்துக்கு எதையும் சேர்க்க மாட்டார். அவ்வாறு ஏதாவது ஒன்றைச் சேர்த்து விட்டாலும் நம்முடைய தூதர் தானே, நமக்கு வேண்டிய ஆள் தானே என்று விட்டு விட மாட்டேன் என்று இந்த வசனத்தில் சொல்கிறான்.

எந்த நபியாக இருந்தாலும் சரி தான்; என்னுடைய எல்லைக்குள் யாரும் வரமுடியாது. மனிதன் மனிதனாகத் தான் இருக்க வேண்டும். என்னுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது என்றெல்லாம் அல்லாஹ் நமக்குச் சொல்வதற்குக் காரணம் மனிதனின் எல்லை என்பதை நமக்குப் புரிய வைப்பதற்காகத் தான். நமது எல்லை என்ன என்பதைப் புரிந்தால் தான் நாம் அவ்லியாக்களை வணங்க மாட்டோம். அவர்களிடம் உதவி தேடமாட்டோம். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம். அவனையே சார்ந்திருப்போம்.

தூதரைக் கண்டித்த தூயோன் அல்லாஹ்

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காண முடியும். சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான்.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் தேனைப்பற்றி சொல்லும் போது,

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.

அல்குர்ஆன். 16:68, 69

ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான். அந்தச் சம்பவம் இதோ:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கüடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் "நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்கüடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்'' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்கüல் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறினார்கள். ஆகவே, "நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?'' என்று தொடங்கி "நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)'' என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருüனான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 5267

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேனை ஹராமாக்கியதை யாருக்கும் அறிக்கவில்லை. யாரும் தேனை சாப்பிடாதீர்கள் என்று உத்தரவு போட்டதும் கிடையாது. தான் சாப்பிட மாட்டேன் என்று தான் தமக்குத் தாமே அதைத் தடை செய்து கொண்டார்கள். இது உலகத்திற்கே தெரியாத ஒரு இரகசியமான விஷயம் தான். அல்லாஹ் கண்டித்ததால் தான் நமக்குத் தெரிகிறதே தவிர அல்லாஹ் சொல்லவில்லையென்றால் நமக்குத் தெரியுமா? தெரியாது.

தன்னுடைய தூதர் தானே என்று கூட பார்க்காமல் தம்மைக் கண்டித்ததை மறைத்து விடாமல் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை வெட்ட வெளிச்சமாக ஆக்கி விட்டான். கண்டிக்கும் அந்த வசனத்தை தம்முடைய வாயினாலேயே உலக மக்களுக்குச் சொல்லவும் வைக்கிறான்.

நபியின் விருப்பமும் நாயனின் கண்டனமும்

இன்றைக்குச் சிலர் மார்க்கத்தில் நன்மையைக் கருதி பல விஷயங்களில் வளைந்து கொடுப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் நடந்துள்ளது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண் தெரியாத குருடர் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொல்கின்றார். நபி (ஸல்) அவர்கள் அதைக் காதில் வாங்கியும் கண்டும் காணாதவர்களாக, அவர்களுக்குப் பதில் கூறாமல் முகம் சுளித்தவர்களாக திரும்பிக் கொண்டு அந்தப் பிரமுகரிடம் பேச்சைத் தொடர்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபியவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூர அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது. எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள். ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  (அல்குர்ஆன் 80:1-10)

EGATHUVAM AUG 2013