May 31, 2017

இணை கற்பித்தல் தொடர் 46 - தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

இணை கற்பித்தல் தொடர் 46 - தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இணை வைப்பின் கேந்திரங்களாக தர்ஹாக்கள் திகழ்ந்து வருவதையும், அவற்றை இஸ்லாமிய மார்க்கம் எப்படியெல்லாம் தடை செய்துள்ளது என்பதையும் கடந்த இதழ்களில் கண்டோம்.

சமாதி வழிபாட்டையும் தர்ஹாக்களையும் ஆதரிப்போர், அதை நியாயப்படுத்த சில வறட்டு வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

தர்ஹாக்களுக்குப் போவது  ஜியாரத் அல்ல!

பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது.

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்தவற்றைப் பொதுவாகவும், குறிப்பாக அனுமதித்தவற்றைக் குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள  வேண்டும். கப்ரு ஜியாரத்தைப் பொறுத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப் படவில்லை. மரணத்தை நினைவுபடுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்ஹாக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.

எனவே தர்காக்களுக்குப் போவது ஸியாரத் ஆகாது.

புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லைஎன்றார். இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லைஎன்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஜியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஜியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத் தலங்களில்...

பிரம்மாண்டமான கட்டிடம்

கப்ரின் மேல் பூசுதல்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள சமாதிகளை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (இது பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.)

இவ்வளவு தீமைகள் நடக்கும் இடத்துக்குப் போனால் மறுமை பயம் அதிகமாகாது.

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் அங்கு செல்வது ஹராமாகும்.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணம் தர்ஹாக்களில் இல்லை.

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது

பாத்திஹா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

இறந்தவருக்காக நேர்ச்சை செய்வது

கப்ரை முத்தமிடுவது

அங்கே விளக்கேற்றுவது

கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது

ஆகியன உள்ளிட்ட ஏராளமான தீமைகளை தர்ஹாக்கள் உள்ளடக்கியுள்ளன.

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான அடக்கத்தலம் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்ஹாக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140


அல்லாஹ்வின் பல கட்டளைகள் கேலி செய்யப்படும் கேந்திரமாக தர்ஹா அமைந்துள்ளதால் அந்தத் தீமைகளைத் தடுப்பதற்காகவே தவிர வேறு நோக்கத்தில் அங்கே செல்வதற்கு அனுமதி இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

EGATHUVAM FEB 2017