May 16, 2017

கொலை கொடியது

கொலை கொடியது

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது; வாளால் தனது சித்தாந்தங்களைப் பரப்புகின்றது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும்.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற இவர்களது முடிவு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனையோ, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையோ ஆழமாக வாசித்து எடுக்கப்பட்ட முடிவல்ல.

மாறாக, போர் குறித்துக் குர்ஆன் கூறும் வசனங்களை அவசர கோலத்துடன் படித்து எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இது. (போர்  நெறிமுறைகள் குறித்து இதே இதழில் தனிக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.)

போரில் எதிரிகளைக் கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்று குர்ஆன் கூறும் வசனங்களை எடுத்துக் கொண்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது, வன்முறையைப் போதிக்கின்றது என்று கூறுகிறார்கள்.

இவர்களின் இந்தப் புரிதலை என்னவென்பது?

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, தம்மைத் தாக்க வரும் நாட்டுடன் ஒரு நாடு போர் புரிவதை தீவிரவாதம் என்று யாரும் சொல்ல மாட்டோம். இது ஒவ்வொரு நாட்டின் கடமை.

ஆதலால் தான் எல்லா நாடும் தன் நாட்டின் எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. தம்மைத் தாக்க வருபவர்களுடன் போர் புரிகிறது. இதைத் தீவிரவாதம் என்று சிந்தனையுள்ளவர்கள் கூறுவார்களா?

இதைத் தான் இஸ்லாமும் ஜிஹாத் (புனித போர்) என்று குறிப்பிடுகிறது. இஸ்லாமிய அரசு தம்முடன் சண்டையிட வரும் நாட்டுடன் தன் நாட்டு மக்களைக் காப்பதற்காக நடத்தும் யுத்தம் தான் ஜிஹாத். போர் (ஜிஹாத்) என்பதே ஒரு நாடு நடத்தும் யுத்தம் தானே தவிர தனிமனிதர்கள் நடத்தும் தாக்குதல் அல்ல.

அவ்வாறு ஒரு (இஸ்லாமிய) நாட்டின் மீது இன்னொரு நாடு படைதிரட்டி வந்தால் அவர்களுடன் ஆயுதம் தாங்கி போரிட வேண்டும், எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம், இஸ்லாமிய அரசுக்கு அறிவுறுத்துகிறது.

இதில் தீவிரவாதம் எங்கே இருக்கிறது?

இதுவே தீவிரவாதம் எனில் உலக நாடுகள் அனைத்தும் இந்த தீவிரவாதத்தை செய்யத்தானே செய்கிறது. இதில் இஸ்லாம் மாத்திரம் குறிவைத்து பழிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் ஏன்?

இதிலிருந்தே இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற வாதத்தில் துளியும் உண்மையில்லை. அது அபத்தமான, அவதூறான ஒரு பொய்க் குற்றச்சாட்டு என்பதை எளிதில் அறியலாம்.

தனிமனிதத் தாக்குதலை இஸ்லாம் ஆதரிக்கின்றதா?

போரிலும், (மரண) தண்டனை வழங்குவதிலும் மனித உயிர்களைக் கொல்வதற்கு அரசுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கின்றது.

மரண தண்டனை வழங்குவது சரியா? என்பதை அறிய ஆன்லைன் பிஜே இணைய தளத்தில் கீழ்க்கண்ட இணைப்புகளில் சென்று பார்க்கவும்.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/ன்ய்ஹழ்ஸ்ன்ஜ்ங்ங்ந்ப்ஹ்/ந்ஹப்ஹண்ய்த்ஹழ்ன்ம்ஜம்ஹழ்ஹய்ஹஜற்ட்ஹய்க்ஹய்ஹண்ஹ்ன்ம்/-.யஈஊபக்ஷ்5நநஷ்2ஸ்ரீ

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/ன்ய்ஹழ்ஸ்ன்ஜ்ங்ங்ந்ப்ஹ்/ந்ஹப்ஹண்ய்த்ஹழ்ன்ம்ஜம்ஹழ்ஹய்ஹஜற்ட்ஹய்க்ஹய்ஹண்ஹ்ன்ம்/

இது தவிர எந்த நிலையிலும் மதிப்புமிக்க மனித உயிர்களைப் பறிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

குறிப்பாக, தனிமனிதர்கள் ஆயுதம் தாங்கி தாக்குதல் புரிவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை. என்ன காரணத்திற்காகவும் அரசு அல்லாத ஒரு குழு ஆயுதம் ஏந்தி சண்டையிடுவதை இஸ்லாம் அனுமதிக்காததோடு ஒரு மனிதன் சக மனிதனைக் கொலை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எனவே தான் இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களிடம் எடுக்கும் உறுதி மொழிகளில் ஒன்றாக, "அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்' என்பதையும் இணைத்திருந்தார்கள். தம் காலத்தில் இஸ்லாத்தை ஏற்க வரும் எல்லா முஸ்லிம்களிடமும் இதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்வார்கள். (ஹதீஸின் கருத்து புகாரி6873)

இவ்வாறு மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவை என்றும் கொலை செய்வது கொடிய செயல் என்றும் இஸ்லாம் ஏராளமான செய்திகளில் வலியுறுத்தி உள்ளது. அவற்றை அறிந்தால் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்று யாரும் சொல்ல மாட்டார்.

கொலை பெரும் பாவம்

இஸ்லாத்தில் மனித உயிரைப் பறிப்பது பெரும் பாவம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், "பொய் கூறுவதும்' அல்லது "பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி),

நூல்: புகாரி 6871

கொலை செய்பவன் முஸ்லிமல்ல!

மனிதனை கொல்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்று இறைத்தூதர் போதனை பிரகடனம் செய்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகின்ற போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6809

இறைவனின் உண்மையான அடியார்கள் கொலை செய்யமாட்டார்கள் என்றும் அவ்வாறு கொலைக்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மறுமையில் வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

திருக்குர்ஆன் 25:68

நன்மையை இழப்பான்

மனிதனின் உயிரை மதிக்காமல் கொலை எனும் குற்றத்தில் ஈடுபடுட்டவன் தான் செய்த நன்மைகளை மறுமையில் இழப்பான். யாரைக் கொலை செய்தானோ அவரது பாவத்தை இவன் சுமப்பான். இறுதியில் நரகில் நுழையும் இழிநிலை ஏற்படும் என்று கொலையைப் பற்றி அண்ணல் நபி ஆணித்தரமாகப் போதித்துள்ளார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்'' என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5037

நம்மை அறியாமல் பிறரைத் தாக்கி விடக்கூடும் என்பதால் நம் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் ஆயுதத்தால் பிறரை நோக்கி சைகை செய்யக் கூடாது என்று இஸ்லாம் தடை விதிக்கின்றது. நம்மை அறியாத புறத்திலிருந்து கூட பிறரைத் தாக்கும் செயல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் இஸ்லாம் கவனம் செலுத்துவதை இந்தத் தகவலிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7072

எந்த வகையிலும் தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதற்கு இது போன்று எண்ணற்ற சான்றுகள் நிறைந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! இது எந்த நாள்?'' எனக் கேட்ôர்கள். மக்கள் "புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் "இது எந்த நகரம்?'' எனக் கேட்டதும் மக்கள் "புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் "இது எந்த மாதம்?'' எனக் கேட்டதும் மக்கள் "புனிதமிக்க மாதம்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், "நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!'' எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, "இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?'' என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1739

மனித உயிர்களைப் புனித மக்காவிற்கு ஒப்பிட்டு, அது மதிக்கப்படுவதைப் போன்று மனித உயிர்கள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறும் இஸ்லாம் தீவிரவாதச் செயலைப் போதிக்கின்றது என்ற வாதம் எந்த வகையில் சரியானதாகும்?

இஸ்லாம் அமைதி மார்க்கம். அது உலகம் முழுவதும் அமைதி நிலவவே விரும்புகிறது. அது தன்னுடைய போதனைகளை அதனடிப்படையிலேயே வகுத்துள்ளது. பரஸ்பரம் மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றே அது போதிக்கின்றது. எந்த வகையிலும் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும் செயலை செய்யக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. இத்தகைய அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாத, வன்முறைச் செயல்களுக்குத் துளியும் இடமில்லை.

எல்லா மதத்திலும் உள்ளவர்களைப் போன்று பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடலாம். அது அந்தந்த மதத்தைச் சார்ந்த தனிமனிதர்களின் கண்டிக்கத்தக்க செயல்தானே அன்றி அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தங்களது சுயலாபத்திற்காகவும் மக்களிடம் ஆதரவு திரட்டும் நோக்கிலும் இவர்கள் தாங்கள் செய்யும் வன்முறைச் செயல்களுக்கு மதத்தை அடையாளமாகக் காட்டிக் கொண்டாலும் எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்காது, இஸ்லாமும் ஆதரிக்கவில்லை.

ஒரு ஹிந்து தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் ஹிந்து மதம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.

ஒரு கிறித்தவன் தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் கிறித்தவ மதம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.

ஒரு முஸ்லிம் தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.


மனித நேயமிக்க இஸ்லாத்தில் அப்பாவி மனித உயிர்களைக் கொல்ல துளியும் அனுமதியில்லை. இஸ்லாம் அமைதி மார்க்கமே என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறோம்.

EGATHUVAM OCT 2014