May 9, 2017

பாலியல் குற்றத் தடுப்பு மசோதாவும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையும்

பாலியல் குற்றத் தடுப்பு மசோதாவும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையும்

கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் 23 வயது மாணவியை ஓடுகின்ற பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, அவள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் 13 நாட்களாக நடந்த தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் உயிரிழந்தாள்.

அவள் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பின்பும் இந்தியா முழுவதும் மக்கள் கொந்தளித்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு போர் முழக்கமே நடைபெற்றது. இதன் மூலம் பாலியல் கொடுமைகள், கற்பழிப்புகள், வல்லுறவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று நாமும் எதிர்பார்த்தோம்.

அதற்கேற்ப மத்திய அரசும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வர்மாவின் தலைமையில் ஒரு கமிட்டியை டிசம்பர் 23, 2012 அன்று நியமித்தது. இந்தக் கமிட்டியில், நீதிபதி வி.எஸ். வர்மாவுடன் ஓய்வு பெற்ற நீதிபதி லீலா சேத், அரசு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெண்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் இழைப்பவர்களுக்குத் தண்டனையை அதிகரிப்பது, விரைவாக விசாரணையை முடிப்பதற்கு ஏற்ற வகையில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் செய்ய வேண்டிய தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்யுமாறு இந்தக் கமிட்டியிடம் மத்திய அரசாங்கம் கோரியிருந்தது.

இதன் அடிப்படையில் இக்குழு தனது அறிக்கையை ஜனவரி 23, 2013 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதன் பரிந்துரைகளில் முக்கியமானவை இதோ:

* கற்பழிப்புக் குற்றமிழைப்பவர்களுக்கு ஏழாண்டுகளுக்குக் குறையாத, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எனினும் அதை ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கலாம்.

* கற்பழிப்பின் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத கடுமையான சிறைத் தண்டனை வழங்க வேண்டும். எனினும் அதை ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கலாம்.

இதுதான் நீதிபதி வர்மா கமிட்டியின் முக்கியப் பரிந்துரைகளாகும்.

வர்மா கமிட்டியின் அறிக்கை, குற்றவியல் சட்டத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் அறிக்கை என்று எதிர்பார்த்தோம். ஆனால் சாதாரண சிறைத் தண்டனையைப் பரிந்துரை செய்கின்ற வெறும் ஏமாற்ற அறிக்கையாக ஆகிவிட்டது.

இந்த உண்மையை உணர்ந்த மத்திய அரசு அந்தப் பரிந்துரையைப் பின்பற்றாமல், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் பிப்ரவரி 3, 2013 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலம் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அந்த அரசாணையில், மரணத்திற்குக் காரணமாக அமைகின்ற கற்பழிப்புக் குற்றங்களுக்கு மரண தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அரசாணைக்கு மனித உரிமைக் கழகங்களிலிருந்து கடுமையான ஆட்சேபணைகளும் கண்டனங்களும் எழுந்தன. மரண தண்டனை, வர்மா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்.

இந்த அரசாணை பின்னர் ஒரு சில மாற்றங்களுடன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவாக 19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாகியிருக்கின்றது.

இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:

* பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

* பாலியல் பலாத்காரம், குழுவாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை! இதை ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.

* ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, "இந்த மசோதா துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணுக்கு அளிக்கும் மரியாதை'' என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவியைத் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்தப் பெண் செய்தது ஒன்றும் துணிச்சல் மிகுந்த காரியம் அல்ல; சாகசமும் அல்ல. காதலனுடன் சென்றவள், காமுகர்களிடம் மாட்டிக் கொண்டாள். அவ்வளவு தான்.

சர்வ சாதாரணமாக சில பெண்கள் செய்கின்ற தப்பைத் தான் அவளும் செய்தாள். ஆனால் இவள் சிக்கலில் மாட்டிக் கொண்டாள். இதைத் துணிச்சல் என்று உள்துறை அமைச்சர் பாராட்டும் அளவுக்கு இங்கு ஒன்றுமில்லை.

ஒரு பேச்சுக்குத் துணிச்சல் என்றே வைத்துக் கொள்வோம். ஷிண்டே சொல்வது போன்று இந்த மசோதா அந்தப் பெண்ணுக்கு அளிக்கும் மரியாதையா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம், மார்ச் 8ம் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராணி லட்சுமி என்ற விருதை கொலையுண்ட அப்பெண்ணுக்காக அவரது தாயாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்தப் பெண்ணின் தந்தை, சற்று நிலைகுலைந்து, தன் மகனைத் தாங்கிப் பிடித்தவராக, "விருதுகளும் நிதி உதவிகளும் இறந்த என் மகளைத் திரும்பக் கொண்டு வருமா? ஒவ்வொரு நொடிப் பொழுதும் என் மகளை இழந்து தவிக்கிறேன். என் உள்ளம் கொதிக்கின்றது; குமுறுகின்றது. இமைகளில் உறக்கம் தழுவவில்லை. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இந்த சோகக் கட்டத்தில் நாடு என்னுடன் துணை நிற்கின்றது. அதற்கு நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன். நாங்கள் எளிமையானவர்கள். எங்கள் கோரிக்கைகளும் எளிமையானது. எனது மகளைக் கற்பழித்து, கொடுமை செய்து கொன்ற அந்தக் கயவர்களைக் கழுவேற்றுங்கள்! அந்தத் துரோகிகளைத் தூக்கிலிடுங்கள். சிறுவன் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டு என் மகளைக் கொலை செய்த அந்தக் கொலைகாரனையும் தூக்குக் கயிற்றில் தொங்கவிடுங்கள்'' என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.

இதுதான் பாதிக்கப்பட்டவரின் மனநிலை! இந்த மனநிலையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதா பிரபதிலிக்கவில்லை. அப்படிப் பிரதிபலித்தால் தான் பாலியல் பலாத்காரத்திற்குப் பலியான அந்தப் பெண்ணுக்குச் செய்யும் மரியாதையாகவும், இதர பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகாமல் தடுக்கும் பாதுகாப்பு அரணாகவும் அமையும். ஆனால் இது அவ்வாறு அமையவில்லை.

குறிப்பாக அந்தப் பெண்ணின் தந்தை, "குற்றவாளிகளில் ஒருவனான அந்தப் பதினேழு வயது இளைஞனையும் தூக்கிலிடுங்கள்' என்று சொன்னதை இந்த நாடும் நாடாளுமன்றமும் கண்டு கொள்ளவே இல்லை.

தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதாவிலும் சிறுவர்களுக்கான வயதை 18லிருந்து குறைக்கவில்லை. அதாவது 18 வயதுக்குக் கீழானவர்கள் கற்பழித்துக் கொலை செய்தாலும் அவர்களைத் தண்டிக்க முடியாது. இந்தச் சட்டத்தின்படி, அந்த மாணவியை இரண்டு முறை கற்பழித்த 17 வயது காமக் கொடூரன் தண்டனையிலிருந்து தப்பி விடுவான் என்பது உறுதி.

இதற்கும் இஸ்லாம் தான் தீர்வைச் சொல்கின்றது. பருவமடைதல் என்பது வயதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவனுக்கு ஸ்கலிதம் வர ஆரம்பித்து விட்டால் அவன் பருவ வயதை அடைந்து விட்டான். அதாவது உடலுறவுக்குத் தகுதியடைந்து விட்டான் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

இந்த அளவுகோலை எடுத்துக் கொள்ளாத வரை இத்தகையோர் சிறுவன் என்ற காரணம் காட்டி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

இப்போதைய சட்டமும் அந்தக் காமக் கொடூரனைத் தப்பவிடும் வேலையைத் தான் செய்துள்ளது என்றால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இதற்கிடையே, முக்கியக் குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், டெல்லி திஹார் சிறையில் மார்ச் 11ம் தேதியன்று தற்கொலை செய்து கொள்கின்றான்.

இதைப் பற்றி அந்தப் பெண்ணின் தாய் குறிப்பிடுகையில், "அவன் செய்த பாவத்தின் பலனை அனுபவித்திருக்கின்றான்' என்று கூறியிருக்கின்றார். அவரது வாக்குமூலமும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றது. இதைக் கவனித்து தான் இஸ்லாம் இதற்குத் தீர்வு சொல்கின்றது.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தாத ஆட்சித் தலைவர்களை அநியாயக்காரர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் அளிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 2:178

இது தான் உண்மையில் குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் ஆட்டத்தையும் கொடுக்கும். இதற்கு மாறாக இருபது ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை அவர்களிடம் எந்த மாற்றத்தையும் கொடுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு தான் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு நாட்டில் அடுக்கடுக்காக நிகழ்ந்த கற்பழிப்பு சம்பவங்கள்; அமில வீச்சு அநியாயங்கள். இந்தச் சட்டம் வரப் போகின்றது என்று தெரிந்த பின்பு தான் இத்தனை சம்பவங்கள் அரங்கேறின.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், காதுக்குக் காது என்ற சட்டம் தான் குற்றவாளிகளிடம் நடுக்கத்தையும் திடுக்கத்தையும் ஏற்படுத்தும்.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

இஸ்லாம் ஒரு பக்கம் இப்படிக் கடுமையான சட்டத்தைப் போட்டிருக்கும் அதே வேளையில், ஆண்களைக் கவர்ந்திழுப்பதற்குக் காரணமான பெண்களின் அழகை மறைக்கவும் சொல்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:31

இந்த ஆடை முறையைப் பெண்கள் கடைப்பிடிக்காத வரை, ஆண்களின் வெறியைத் தூண்டுகின்ற ஆபாசப் படக்காட்சிகளைத் தடை செய்யாத வரை இந்தக் குற்றங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கான விவாதம் நடக்கும் போது பெண்களின் ஆபாச ஆடைகள், தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஷைலேந்திர குமார் விமர்சித்தார். உடனே நடிகை ஜெயப்பிரதா போன்ற கூத்தாடி பெண் எம்.பி.க்கள் அவரைக் கடித்துக் குதற ஆரம்பித்து விட்டனர்.


ஷைலேந்திர குமார் யதார்த்தத்தைப் பேசியிருக்கின்றார். அது அமுலுக்கு வராத வரை இந்தக் குற்றங்களுக்கு விடிவோ, முடிவோ இல்லை என்பது உறுதியான உண்மையாகும்.

EGATHUVAM APR 2013