May 13, 2017

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம்

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.

பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அனைத்து வணக்கங்களிலும் "ரியா' என்ற முகஸ்துதி, அதாவது பிறர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கலக்கின்ற அபாயமிருக்கின்றது. என்றாலும் ஹஜ் என்ற வணக்கத்தில் இந்த முகஸ்துதி அதிகம் கலக்கின்ற வாய்ப்பிருக்கின்றது. அதனால் ஹாஜிகள் இதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

அல்குர்ஆன் 3:97

தனக்காக மட்டுமே ஹஜ் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதை ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் வணக்கத்தில் முகஸ்துதி எப்படியெல்லாம் கலக்கின்றது என்பதை வரிசையாகப் பார்ப்போம்.

1. ஹஜ்ஜுக்குப் பயணம் செய்வதற்கு ஒரு மாதம், இரண்டு மாதங்கள் இருக்கும் போதே, தெரிந்த ஆட்களையெல்லாம் கண்டு, அவர்களிடம் கை கொடுத்து, "நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; துஆச் செய்யுங்கள்' என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

2. வீடு வீடாகப் போய் பயணம் சொல்லுதல்

ஆட்களைக் கண்டு பயணம் சொல்வதுடன் மட்டும் நிறுத்தாமல் வீடு வீடாக ஏறி, இறங்கி பயணம் சொல்கிறார்கள். இவ்வாறு பயணம் சொல்பவர்கள், ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்காவது நாம் பாவம் செய்திருப்போம் அல்லவா? அதனால் இப்போதே அவர்களைச் சந்தித்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று காரணம் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன், சக மனிதனுக்குப் பாவம் செய்தால் உடனுக்குடன் தீர்த்து விடவேண்டும். ஒரு ஹஜ் பயணத்திற்காகவோ, வேறேதும் காரணத்திற்காகவோ தாமதப்படுத்துதல் கூடாது. ஏனென்றால் எந்தச் சமயத்திலும் நாம் மரணிக்கலாம். அதனால் அதைத் தாமதப்படுத்துதல் கூடாது. ஆனால் ஹஜ்ஜை முன்னிறுத்தி இவ்வாறு சொல்லி வருவது வணக்கத்தை விளம்பரத்துவதாக ஆகும். இது பகிரங்கமான ரியா எனும் முகஸ்துதி ஆகும்.

வெளிநாடு செல்வதால் நாம் திரும்பி வர முடியாமல் மரணித்து விடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம் என்றும் காரணம் கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தால் ஹஜ்ஜை விட அதிக நாட்கள் வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் போதும் இப்படி மன்னிப்புக் கேட்டு விட்டுச் செல்வார்கள். வேறு எதற்காக எவ்வளவு நாட்கள் பயணம் செய்தாலும் இதுபோல் செய்வதில்லை. இதிலிருந்து தாங்கள் செய்யும் இந்த முகஸ்துதியை நியாயப்படுத்த இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்

3. விருந்து வைத்தல்

பயணம் சொன்னால் போதாது என்று ஹஜ் செல்வதற்காக விருந்தும் வைக்கின்றார்கள். ஒரு லட்சம் ரூபாயில் செய்ய வேண்டிய ஹஜ்ஜை, பொருளாதார ரீதியில், சமுதாயத்தில் பாரமாக்கி, அடுத்தவரை ஹஜ் செய்ய முடியாமல் தடுப்பதாகும். இந்த வகையில் இது பாவமாகும்.

4. வழியனுப்பு விழா

ஹஜ்ஜுக்குச் செல்பவர் ஏதோ சாதனை படைக்கப் போவது போன்று வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கென மேடை போட்டு ஹஜ் செய்யச் செல்பவரை ஆளாளுக்குப் புகழ்கின்றனர்.

5. பயணம் அனுப்புதல்

ஹாஜிகளை வழியனுப்ப வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரைக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு பெருங்கூட்டம் வாகனங்களில் செல்கின்றனர். இது போதாதென்று ஒரு கூட்டம் சென்னை வரைக்கும் செல்கின்றது. இந்தச் செலவுகளையும் ஹாஜிகளே பொறுப்பேற்க வேண்டும். இதற்கென்று பெரும் பொருளாதாரத்தை விரயமாக்குகின்றனர்.

பெரும்படை புறப்பட்டுச் சென்று சென்னையில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் போய் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் எனத் தங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையினால் அவர்கள் ஹஜ் சீசன் வந்தாலே பயந்து நடுங்கும் நிலைமை.

6. ரயில் மற்றும் விமான நிலையங்களில் பெருங்கூட்டம்

சாதாரண பயணிகள் அனைவரும் அல்லல், அவஸ்தைப்படுகின்ற அளவுக்கு விமான, ரயில் நிலையங்களில் பெருங்கூட்டம் கூடி அடுத்தவருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் ஹாஜிகள் செல்லும் தினத்தில் விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் ஸ்தம்பித்து விடுகின்றன.

7. மாலை மரியாதை

ஐயப்ப பக்தர்களைப் போன்று ஹாஜிகள் அனைவரும் மாலைகள் அணிந்து கொண்டு செல்கின்றனர். அந்த மாலைகளை ரயில்களின் ஜன்னல் ஓரங்களில் கட்டித் தொங்க விடுவது அதைவிடக் கொடுமை.

8. சுவரொட்டிகள் அடித்தல்

ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம் என்று ஹாஜிகளின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துகின்றனர். ஹஜ் காலம் வந்து விட்டாலே ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்துகின்றனர். ஹஜ் வணக்கம் விளம்பரமாக்கப்படுகின்றது என்பதற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை.

9. இந்தக் காரியங்கள் அனைத்தையும் ஹஜ் பயணம் முடித்து விட்டு ஹாஜிகள் திரும்ப வரும் போதும் செய்கின்றனர். வழியனுப்பு விழாவிற்குப் பதிலாக வரவேற்பு விழா நடக்கின்றது. மற்ற அனைத்தும் அப்படியே தொடர்கின்றது.

10. ஹாஜிகளின் துஆ கபூலாகும் என்ற நம்பிக்கையில் ஹாஜிகளிடம் சென்று, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் கைலாகு கொடுத்து, துஆச் செய்யச் சொல்கின்றனர். இது தொடர்பாக வரும் ஹதீஸ் பலவீனமானதாகும்.

11. வரவேற்பு விழா

"ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக!' என்று மறுபடியும் போஸ்டர் அடித்து வரவேற்பு விழாக்கள் நடத்துகின்றனர். தெரு முழுக்க தோரணங்கள் தொங்க விட்டு, மாப்பிள்ளை ஊர்வலம் போல் ஹாஜிகளை காரில் வைத்து ஊர்வலம் நடத்துகின்றனர்.

12. ஹாஜி என்ற அடைமொழி

டாக்டர், இஞ்சினியர் என்று பெயருக்கு முன்னால் போடுவது போன்று ஹாஜி என்ற அடைமொழியைப் போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கையெழுத்துப் போடும் போது கூட, ஹாஜி சுல்தான், ஹாஜி மஸ்தான் என்று கையெழுத்துப் போடுவது கொடுமையிலும் கொடுமை.

இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? ஹஜ் எனும் வணக்கத்தை இவர்கள் விளம்பரப்படுத்துவதைத் தான். இப்படி வணக்கத்தை விளம்பரப்படுத்தினால், பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமல் செய்தால் அதன் விபரீதம் என்ன?

முதன்முதலில் மறுமையில் அல்லாஹ் அடியார்களுக்குக் காட்சியளிப்பான். முகஸ்துதிக்காக இந்த உலகில் வணக்கங்கள் புரிந்தவர்கள் அப்போது ஸஜ்தாச் செய்ய இயலாமல் ஆகிவிடுவார்கள். இதை கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 4919

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும், இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார்.  அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3537

ஹஜ் என்ற இந்த வணக்கம் இப்படி விளம்பரம் ஆவதால் நரகம் தான் கூலியாகக் கிடைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்றுவானாக!

வழிகெடுக்கும் வழிகாட்டிகள்

தற்போது ஆங்காங்கே ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, நபிவழிக்கு மாற்றமான விளக்கங்களைத் தருகின்றார்கள். தலைப்பிலேயே ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் நடத்தும் விளக்க வகுப்புகளில் கலந்து கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று வருவபர்கள் எப்படி தூய்மையான அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்? சென்று வந்த பின்னர் எப்படி ஏகத்துவக் கொள்கையில் இருப்பார்கள்? எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் நபிவழி ஹஜ் விளக்க வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள்.

அதுபோன்று ஹஜ் வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்களும் இணைவைப்புக் கொள்கை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஹாஜிகளுக்குத் தவறான வழியைக் காட்டுகின்றார்கள். பித்அத்தான செயல்களையும், ஷிர்க்கான விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இவற்றை விட்டுத் தப்பிக்க ஒரே வழி, "நபிவழியில் நம் ஹஜ்', "ஹஜ் - உம்ரா வழிகாட்டி' போன்ற நமது ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் படியுங்கள்; நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.

தமிழக முஸ்லிம்களில் பலர், யா முஹ்யித்தீன், யா காஜா முஈனுத்தீன் என்று அழைத்துப் பிரார்த்திப்பவர்களாக உள்ளனர். இது மாபெரும் இணை வைப்பாகும். இந்தப் பாவத்தைச் செய்தவரை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

இப்ராஹீம் நபி அவர்கள் இந்த இணைவைப்பை எதிர்த்துத் தான் போரிட்டார்கள். இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவூட்டும் இந்த ஹஜ் வணக்கத்தைச் செய்யும் ஹாஜிகளே! ஷிர்க் எனும் கொடிய பாவம் கலக்காத தூய ஹஜ் செய்யுங்கள்.


சிலர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த பின்னரும் பொட்டல்புதூருக்கும், நாகூருக்கும், அஜ்மீருக்கும் சென்று பாவ மூட்டைகளைச் சுமந்து வருகின்றனர். இணைவைப்பில் வீழ்ந்து கிடக்கின்றனர். இத்தகையவர்கள் ஹஜ் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. எனவே ஹஜ்ஜுக்குப் பிறகு, மரணிக்கின்ற வரை அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தியுங்கள்; முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

EGATHUVAM SEP 2013